search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை: மயிலம் அருகே பிரபல ரவுடி கைது
    X

    டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை: மயிலம் அருகே பிரபல ரவுடி கைது

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு சந்தைமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதில் மயிலம் அருகே உள்ள ஆலை கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 43) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். திருவேங்கடம் (47), சக்திவேல், சோழன் ஆகியோர் அந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் டாஸ்மாக்கடையில் வசூலான பணத்தை சங்கர் மற்றும் சோழன் ஆகிய 2 பேரும் எண்ணினர்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சங்கர், சோழன் ஆகியோரை ஆயுதங்களை காட்டி மிரட்டினர். இதில் பயந்து போன சோழன் தன்கையில் வைத்திருந்த ரூ.46 ஆயிரத்தை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த பணத்தை மர்ம கும்பல் எடுத்துக் கொண்டது.

    பின்னர் சங்கர் கையில் இருந்த ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்தை தரும்படி கேட்டு மிரட்டினர். அவர் பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை அந்த கும்பல் விரட்டி சென்று சங்கரின் கையில் அரிவாளால் வெட்டினர். அந்த நேரத்தில் அங்கு போலீசார் ரோந்து வந்ததால் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்த சங்கரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொள்ளை குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (31), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த அஜய்தேவன் (18) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் மற்றும் 2 கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    டாஸ்மாக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற மர்மமனிதர்களையும் பிடிக்க வேண்டும் என போலீசாருக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்தநிலையில் மயிலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் மன்னார்குடி தாலுகா கள்ளர்குளம் பகுதியை சேர்ந்த ராக்கப்பன் என்கிற ரவிச்சந்திரன்(41) என்பதும், கூட்டேரிப்பட்டு டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ராக்கப்பன் என்கிற ரவிச்சந்திரனை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,300 பணமும், ஒரு மோட்டார் சைக்கிள், அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட ராக்கப்பன் என்கிற ரவிச்சந்திரன் பிரபல ரவுடி என்பதும் அவர் மீது சென்னை, துரைப்பாக்கம், சிவகங்கை, வந்தவாசி, குமிடிபூண்டி, காஞ்சிம் புரம், கோட்டூர்புரம், சீர்காழி உள்ளிட்ட போலீஸ்நிலையங்களில் 6 கொலை வழக்குகள் 10 வழிபறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×