search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villupuram robbery"

    • வீட்டிலிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
    • அண்ணன், தம்பி இருவரும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அன்டராயநல்லூர் பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வருபவர்கள் அரிதாஸ் (வயது 52), தண்டபாணி (47). அண்ணன், தம்பியான இவர்கள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் அவரவர் குடும்பத்துடன் தனித்தனி அறையில் நேற்று இரவு படுத்து தூங்கினர். இன்று காலை கண் விழித்து எழுந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டில் உள்ள பொருட்கள் உள்ளதா என்று அண்ணன், தம்பி இருவரும் பார்த்தனர்.

    அப்போது வீட்டிலிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதனுள் இருந்த பாதுகாப்பு பெட்டகமும் உடைக்கப்பட்டு 12 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதனையடுத்து அண்ணன், தம்பி இருவரும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், புனிதவதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விவசாயம் செய்து வரும் அண்ணன், தம்பி வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் கத்தி முனையில் 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியோ ராஜேஷ். அவரது மனைவி சித்ரகுமாரி (வயது48).

    இவர் பாதிராப்புளியூர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகின்றார்.

    நேற்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டுக்கு 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர்.

    பின்னர் வீட்டின் பின்பக்கமாக உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் சித்ரகுமாரி அணிந்திருந்த 15 பவுன் நகை, அவரது மகள் கிருத்திகா(22) அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சல் போட்டனர். உடேன அந்த கும்பல் அவர்களை கத்தியை காட்டி மிரட்டியது. அதனை தொடர்ந்து அந்த கும்பல் பீரோவில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

    இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு சித்ரகுமாரி தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வர வைக்கப்பட்டது. அது பல இடங்களில் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை . மேலும் கைரேகை நிபுணர்கள் செல்வராஜ், சிராஜுதீன் மற்றும் போலீசார் கைரேகை சேகரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்தை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் ஏ .எஸ். பி. அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் கத்தி முனையில் 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2-ந் தேதி சின்னச்சாமி குடும்பத்துடன் மதுரை சென்றார்.
    • சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    கண்டமங்கலம்:

    மதுரையை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் அருகே கண்டமங்கலம் போலீஸ் சரகம் சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார்.

    அங்கிருந்து வத்தல், வடகம் செய்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார். கடந்த 2-ந் தேதி சின்னச்சாமி குடும்பத்துடன் மதுரை சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணம், எல்.இ.டி. டி.வி., ஹோம் தியேட்டர், பித்தளை பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை சின்னச்சாமி ஊருக்கு திரும்பினார். அப்போது தனது வீட்டின் கதவு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, ரூ.1 லட்சம் ரொக்க பணம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளை போனதை கண்டு பதறி போனார்.

    இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்ன சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடராஜன் தனக்குரிய பணத்தை வீட்டில் டிரங்க்பெட்டியில் பூட்டி வைத்திருந்தார்.
    • கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் டிரங்க்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் அருகே கிளியனூர் போலீஸ் சரகம் காட்ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 70). ஓய்வுபெற்ற தபால் ஊழியரான இவர் காட்ராம்பாக்கம் மெயின் ரோட்டில் எடை மேடை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

    அவரது மனைவி ராணியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நடராஜன் காட்ராம்பாக்கத்தில் தோட்டத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இவர் தனக்குரிய பணத்தை வீட்டில் டிரங்க்பெட்டியில் பூட்டி வைத்திருந்தார். நேற்று இரவு நடராஜன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரம் மர்மநபர்கள் வீட்டின் தோட்டம் வழியாக வந்தனர். அங்குள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் டிரங்க்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை எழுந்த நடராஜன் டிரங்க்பெட்டி திறந்துகிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த பெட்டியை பார்த்த போது, அதில் இருந்த ரூ.17 லட்சம் பணம், 13 பவுன் நகை கொள்ளைபோனது கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து கிளியனூர் போலீசில் நடராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தல்லாகுளத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 65). இவரது மகள் வாசுகி (36). இவரது கணவர் செல்வம். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    வாசுகி தனது கணவருடன் சென்னை மதுரவாயலில் வசித்து வருகிறார். நேற்று காலை வாசுகி தல்லாகுளத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு ஜெயலட்சுமி, வாசுகி ஆகியோர் சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்தே வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம மனிதர்கள் ஜெயலட்சுமி வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்பு அவர்கள் வாசுகியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த அவர் வீட்டுக்குள் கொள்ளையர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட முயன்றார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த கொள்ளையன் ஒருவன் வாசுகியின் காலை பிடித்து இழுத்து தாக்கினான். இதில் நிலைகுலைந்த வாசுகி கீழே விழுந்தார். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து மயிலம் போலீசில் வாசுகி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பெண்ணை தாக்கி நகை கொள்ளைபோன வீட்டை பார்வையிட்டனர். பின்பு வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிவிட்ட கொள்ளையர்களை வலை வீசி தேடிவருகிறார்கள்.

    நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை வீடு புகுந்து தாய் மற்றும் மகளிடம் இருந்து நகைகளை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ளது பரிக்கல்பட்டு கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலா (வயது 38). இவர்களுக்கு அபிதா (18) என்ற மகள் உள்ளார்.

    நேற்று இரவு கலாவும், அபிதாவும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு 2 மர்ம மனிதர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த கலா, அபிதா ஆகியோர் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகைகளை பறித்து கொண்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ் பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×