search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் அருகே குடும்பத்தகராறில் 2 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    ராஜபாளையம் அருகே குடும்பத்தகராறில் 2 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    ராஜபாளையம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது கோவிலூர் கிராமம். இங்குள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வைரவசாமி. இவர்களது மகன்கள் பால்வண்ணன் (வயது32), காளிராஜா (25).

    2 ஆண்டுகளுக்கு முன்பு காளிராஜாவுக்கும், பாலகுரு (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் பாலமுத்துகிருஷ்ணன் என்ற மகன் உள்ளான். காளிராஜா, மனைவி, தந்தை, சகோதரருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

    பாலகுரு திருமணத்திற்கு பின் அவரது பெற்றோர் தொடர்பு இல்லாமல் இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு திடீரென பாலகுருவின் பெற்றோர் புதுமனை புகு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர்.

    இந்த நிலையில் காளிராஜா, பாலகுருவுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் விரக்தியுடன் காணப்பட்ட பாலகுரு சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    அதிர்ச்சி அடைந்த காளிராஜா பதறிப்போய் பாலகுருவை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாலகுரு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்த காளிராஜா திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் டாக்டரிடம் அழைத்து சென்றனர். காளிராஜாவை பரிசோதனை செய்தபோது அவர் வி‌ஷம் குடித்து இருப்பது தெரியவந்தது.

    ஆபத்தான நிலையில் இருந்த அவரை டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காளிராஜாவின் அண்ணன் பால்வண்ணன் வீட்டின் அருகே உள்ள முற்றத்தில் இறந்து கிடந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பால்வண்ணன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து இருப்பதும், ஒருவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×