search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
    X

    8 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

    20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்று தேர்தல் பொறுப்பாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணம் காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலி இடமாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததால், மேலும் 18 தொகுதிகள் காலி இடங்களாக மாறியுள்ளன.

    இதையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், அரசியல் சாசன சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

    அதன்படி திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதியும் காலியாகி இருப்பதால் அவற்றையும் சேர்த்து நடத்திவிட தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் டிசம்பர் மாதமே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மாதம் நடத்த இயலாத பட்சத்தில் ஜனவரி மாதம் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 தொகுதி இடைத்தேர்தல் ‘‘மினி பொது தேர்தல்’’ ஆக கருதப்படுகிறது. இந்த 20 தொகுதி தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டி போடும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    ஆளும் அ.தி.மு.க.வை பொறுத்தவரை தற்போது அந்த கட்சிக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே உள்ளது. 20 தொகுதிகளில் 8 அல்லது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அ.தி.மு.க. சட்டசபையில் மெஜாரிட்டியை பெற முடியும்.

    இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. இந்த 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய இலக்குடன் தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தனர்.

    20 தொகுதிகளுக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் என 120 பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று களப்பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    20 தொகுதி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்குறி நீடிக்கும் நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களின் பணியை முடுக்கி விடுவதற்காக ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் மூத்த தலைவர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 120 பேரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு பற்றி முதலில் ஆய்வு செய்யப்பட்டது. பிறகு பிரசார திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவது பற்றியும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேசினார்கள்.



    20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொகுதி பொறுப்பாளர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டு அறிந்தனர். பிரசாரத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பேச்சாளர்களை களம் இறக்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    20 தொகுதி தேர்தல் களத்தில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை எதிர்கொள்வது பற்றியும், அவர்களது பிரசாரத்துக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. டி.டி.வி.தினகரன் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. 20 தொகுதியிலும் ஜெயித்தால் 5 ஆண்டு காலம் எந்த பிரச்சனையும் இன்றி ஆட்சியை கொண்டு செல்லலாம். எனவே அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். 20 தொகுதியிலும் நன்கு பரீட்சயமான உள்ளூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று யோசனை கூறப்பட்டது.

    ஆலோசனைக்கு பிறகு பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது “20 தொகுதிகளிலும் அவசியம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். 8 தொகுதிகளில் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்” என்று அவர் கூறினார்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அனைத்திலும் நாம் வெற்றி பெற்று ஆக வேண்டும். ஆர்.கே.நகரில் ஏற்பட்ட நிலையை நாம் மாற்றிக் காட்ட வேண்டும். கட்சி நமது பக்கம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவும் ஆட்சியை 5 ஆண்டுக்கு கொண்டு செல்லவும் இடைத்தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் ஜெயித்தே ஆக வேண்டும்.

    அதற்கு உங்களுக்கு என்னென்ன உதவி வேண்டுமோ அதை தலைமை கழகத்தில் கேளுங்கள். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன், உதயகுமார், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், துரைக்கண்ணு மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஜே.சி.டி.பிரபாகர், விஜிலா சத்தியானந்த் எம்.பி., ஆதிராஜாராம், வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், தளவாய்சுந்தரம், செம்மலை, ராஜன் செல்லப்பா, மாதவரம் மூர்த்தி, சிறுணியம் பலராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிந்து கொள்ள மாவட்டச் செயலாளர்கள் விருகை ரவி, ராஜேஷ், தி.நகர் சத்யா, விஜயகுமார் எம்.பி., இ.சி.சேகர், மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தலைமைக் கழகத்தில் திரண்டிருந்தனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam #TTVDhinakaran
    Next Story
    ×