search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது - முத்தரசன் குற்றச்சாட்டு
    X

    ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது - முத்தரசன் குற்றச்சாட்டு

    ஆயுதபூஜை மற்றும் தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். #Mutharasan #Bus

    கரூர்:

    கரூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சரஸ்வதிபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதையொட்டி பொது மக்கள் வெளியூர் பயணங்களை அதிகளவில் மேற் கொள்கின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் அதிகளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே போல், மத்திய ரெயில்வே துறையானது சென்னை-நெல்லை, சென்னை-கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் பண்டிகை கால சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அந்த ரெயில்களில் வழக்கமான கட்டணத்தை விட, 3 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல் பொருத்த மற்ற காரணங்களை கூறி மாநில அரசு இழுத்தடிக்கிறது.

     


    தமிழகத்தில் அமைச்சர்கள், அவர்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் தொடர்ந்து வருமான வரித் துறை சோதனை நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த சோதனையை மத்திய அரசாங்கம் எதற்காக மேற்கொள்கிறது? என்பதை புரிந்து கொள்ளவே முடிய வில்லை. இது தமிழகத்தை பணியவைக்கும் முயற்சியாக தெரிகிறது.

    பாலியல் புகாரில் சிக்கிய மத்திய மந்திரி அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணைக்கு ஒத்துழைத்து தனது நேர்மையை அவர் நிரூபிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களில் மக்களின் கருத்தை கேட்டு செயல் படுத்தவேண்டும்.

    அந்த திட்டத்தின் பாதிப்புகள் குறித்து வெளியே பேசினாலே கைது நடவடிக்கை என்றாகி விட்டது. எனவே தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என நினைக்க தோன்றுகிறது.

    ரபேல் போர் விமான ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கோருகின்றன. மடியில் கனம் இல்லையென்றால் இதனை ஏற்று மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Mutharasan #Bus

    Next Story
    ×