search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுப்பு - தந்தையை செருப்பால் அடித்த விவசாயி கைது
    X

    2-வது திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுப்பு - தந்தையை செருப்பால் அடித்த விவசாயி கைது

    தாரமங்கலம் அருகே 2-வது திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்த தந்தையை செருப்பால் அடித்ததால் விவசாயி கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பள்ளிகொண்டான் பாறை பகுதியை சேர்ந்தவர் வைரமணி (வயது 33). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவருக்கு குழந்தை இல்லை.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் ரம்யா (வயது 23) என்பவரை 2-வதாக திருமணம் செய்ய பெண் கேட்டார். அப்போது மாரியப்பன் தனது மகளை 2-வதாக திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறினார்.

    உடனே வைரமணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களது மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டதற்கு வயது குறைவாக இருப்பதால் திருமணம் செய்து தர முடியாது என்று கூறினீர்கள், தற்போது 2-வது திருமணத்திற்கு பெண் தர முடியாது என்று செல்கிறீர்கள் என்று ஆவேசமாக கூறினார்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த வைரமணி, மாரியப்பனை செருப்பால் அடித்தார். மேலும் ரம்யாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து ரம்யா தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வைரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×