search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை வாகன உதிரி பாக விற்பனை நிறுவனத்தில் தீ - ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
    X

    புதுக்கோட்டை வாகன உதிரி பாக விற்பனை நிறுவனத்தில் தீ - ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

    புதுக்கோட்டையில் வாகன உதிரி பாக விற்பனை நிறுவனத்தில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் உதிரி பாக பொருட்கள் எரிந்து நாசமானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைகாட்டியை சேர்ந்தவர் மைதீன். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் கடையில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து நிறுவன உரிமையாளர் மைதீனுக்கும், வடகாடு, கீரமங்கலம் தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    இருப்பினும் தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் உதிரி பாக பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×