search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைகாசி விசாக தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    வைகாசி விசாக தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் தேரோட்டம்

    பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்றழைக்கப்படும் இத்திருவிழா உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 6-ம்நாளான நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை வைகாசி விசாக தேரோட்டத்தையொட்டி காலை 11 மணிக்கு திருத்தேர் ஏற்றம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் தேரோட்டம் தொடங்கியது. பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், செயற்பொறியாளர் சக்திவேல், கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிகரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், திருப்பூர் லாட்ஜ் உரிமையாளர் மகேஷ் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    கோவில் யானை கஸ்தூரி தேரை முட்டி நகர்த்திய காட்சி.

    தேரானது கிழக்கு ரதவீதியில் தொடங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு ரத வீதிகளில் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது. இதற்கிடையே ரதவீதிகளில் உள்ள மேடான பகுதிகளில் தேர் வந்தபோது, கோவில் யானை கஸ்தூரி தனது தும்பிக்கையால் முட்டி தேரை நகர்த்தியது.

    தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை (திங்கட்கிழமை) இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் செய்திருந்தது. 
    Next Story
    ×