search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனதில் மகிழ்ச்சி பொங்க மண்பாண்டத்தில் பொங்கலிடுவோம்
    X

    மனதில் மகிழ்ச்சி பொங்க மண்பாண்டத்தில் பொங்கலிடுவோம்

    விவசாயத்தில் இருந்து மண் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பது போலவே தைப்பொங்கலில் இருந்து மண் பானையும் பிரிக்க முடியாத ஒன்றாகும். #PongalFestival #Pongal
    “புத்தரிசி குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு” என்று கூறுவார்கள். இதோ இன்றைய பொங்கல் திருநாளுக்கு பொங்கல் உண்டு. புத்தரிசி இல்லை. புதுப் பானை இல்லை. பானை என்றால் அது மண்ணால் வனைந்த கலையத்தையே குறிக்கும். 

    மர உறியாலும், தோலாலும் செய்த பாத்திரங்களுக்கு அடுத்து மனிதன் கண்டுபிடித்த முதல் பாத்திரம் மண் பாத்திரம். பல்லாயிரமாண்டுப் பாரம்பரியமிக்கத் தமிழர்களது வாழ்க்கையில் மண் பாத்திரத்திற்கு முக்கிய இடமுண்டு.

    வடிக்க, வறுக்க, பொறிக்க, தோசை வார்க்க ஏன் இட்டிலி அவிக்கக் கூட நம் முன்னோர்கள் மண்ணால் செய்த பாண்டங்களைப் பயன்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு கீழடி அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட மண் பானை ஓட்டில் கடல் மீது பயணிக்கும் படகு ஒன்று கீறல் சித்திரமாகத் தீட்டப்பட் டுள்ளது. அந்த அளவிற்கு மண் பாத்திரம் நமது வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அம்சமாக இருந் திருக்கிறது.

    ஆனால் இன்றோ தமிழரின் தனித்துவமான கொண்டாட்டமாகிய தைப் பொங்கல் திருநாளை ஏதோ உன்னைப் பிடி என்னைப் பிடி என்றளவில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் ஒரு புறம் நிலத்தில் இருந்து அந்நியப்பட்டுக் கொண்டே வருகிறோம். சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் மழைப் பொழிவு குறைந்து விட்டது ஒரு புறம் இருக்க மறுபுறம் விவசாய விளைபொருளுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. எனவே பலரும் விவசாயத்தைக் கை விட்டு வருகின்றனர். ஆனாலும் சமீப காலங்களில் ஏற்பட்டு வரும் பாரம்பரிய மீட்பு உணர்வால் நம்முடைய பழைய அடையாளங்கள் மிக வேகமாக மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.

    2017 தை எழுச்சிக்குப் பின்னர் நம்முடைய மரபு, புதிய விளக்கமும், புத்தொளியும் பெற்று வருகிறது. அமெரிக்க சென்று தகவல் தொழில் நுட்பத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது வேலையை விட்டு விட்டு கிராமங்களுக்கு வந்து குத்தகைக்கு நிலம் எடுத்து பாரம்பரிய முறையை நவீனப்படுத்தி இரசாயனக் கலப்பற்ற விவசாயம் செய்து விவசாயத்திற்கு புத்துயிர் பாய்ச்சி வருகின்றனர். 

    அந்த வகையில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் தைப்பொங்கல் மிகப் பெரிய எழுச்சி மிக்க விழாவாகப் பரிணமிக்கப் போகிறது. விவசாயத்தில் இருந்து மண் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பது போலவே தைப் பொங்கலில் இருந்து மண் பானையும் பிரிக்க முடியாத ஒன்று. இன்றைய நகர்ப்புற அடுக்கங்களில் குக்கரில் பொங்கல் வைத்தால் அது விசில் மூடியெங்கும் சர்க்கரைப் பாகினைக் வழியவிடுகிறது. ஒரு வழியாக மூடியை நீக்கி குக்கரின் அடிப்பாகத்திற்கு கரண்டியை விட்டால் அடியில் கருப்பாக அட்டுப் பிடித்து பொங்கலுக்கான எந்த அடையாளமும் அதில் இருப்பதில்லை. 

    பொங்கல் வைக்க மண்பானையே மிகவும் உகந்தது. பொங்குதல் என்றாலே பானைக்குள் ஒரு சீராக வெந்து பொங்கி வருவதையே குறிக்கும். மண் பானை மட்டுமே அடுப்பில் எழும் தணலை ஒரே சீராக உள்ளுக்குள் கொடுத்து அரிசியை இதமாகக் குழையச் செய்யும். அதேபோல அரிசி வெந்த பிறகு வெல்லத்தின் சுவையை நிதானமாக அரிசிக்குள் ஏற்றும். 

    ஏனென்றால் சுட்ட மண்ணானது வெளியில் இருந்து ஏற்றப்படும் வெப்பத்தை அப்படியே உள்ளே கடத்துவதில்லை. அது வாங்கி தன்னில் இருத்தி, அதன் பிறகு நிதானமாக உள்ளே கடத்துகிறது. எனவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் எதுவானாலும் அதற்குத் தனிச் சுவை இருக்கும். இன்றைய நகர வாழ்க்கையில் வீட்டுக்குள் விறகடுப்பு கூட்டி பொங்கல் சமைக்க வாய்ப்பு இல்லை என்று நம்மில் சிலர் சலித்துக் கொள்வார்கள். அவர்களில் அக்கம் பக்கம் ஒரு பத்து வீட்டினர் கூடி, கூட்டாகத் தெருவில் பொங்கல் பொங்கி கூட்டாகப் படைத்து அனைவருமாகப் பகிர்ந்து உண்ணலாம். பகிர்ந்து உண்பது தானே மனித நாகரீகத்தின் சிறப்பு. 

    நகரமானாலும் கிராமம் ஆனாலும் தெருவில் அடுப்புக் கூட்டி, மண் பானையில் பாலூற்றி உலை வைத்து பொங்கல் வைத்து, கூடிக் குலவையிட்டு முக் கரும்பினைக் கட்டி இந்தப் புவிக் கோளத்துக்கே தந்தையாம் கதிரவனுக்குப் படைத்து ஆவி பறக்கும் பொங்கலினை அனைவருக்கும் பரிமாறி உண்பதே நாம் வாழும் காலத்திற்குப் பெருமை சேர்க்கும்.

    மண்பானையில் பொங்கும் பொங்கல் மட்டுமல்ல, மண் பாத்திரத்தில் சமைக்கும் பண்டங்கள் அத்தனையும் தனித்துவமான கூடுதல் சுவையைத் தரும். அதுபோக மண் பாண்டத்தில் சமைக்கிற பொருள் எதுவும் எளிதில் கெடாது. ஏனென்றால் புறத் தட்ப வெப்பம் எதுவும் மண் பாண்டத்தில் உள்ள பொருளைத் தாக்காது என்பதால் சமைத்த பொருளின் தன்மை மாறாமல் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

    உலோகப் பாண்டங்களில் இருந்து எழும் கதிர் வீச்சு மற்றும் அதன் உலோகப் பண்பு இரண்டுமே சமைத்த பொருளைப் பாதித்து உடலுக்குத் தீமை விளைவிக்கும். ஆனால் மண் பாண்டமானது மண்ணின் தாதுச் சத்துக்களை நமது உடலின் ஏற்பு திறனுக்கு ஏற்ப வெளிப்படுத்தும். அதே போல சுத்திகரிக்கப்பட்ட நீரை மண் குடுவையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குடித்தால் மண்ணின் தாதுக்கள் நீரில் ஏற்றம் பெற்று நமது சிறு நீரகத்திற்கு ஆற்றலை வழங்கும். அதேநேரத்தில் சுத்திகரிக்கப்படாத நீரை மண் பாண்டத்தில் ஊற்றி வைத்திருந்தால் நீரில் உள்ள மாசுக்களை மண் பாண்டத்தில் நுண் துளைகள் ஈர்த்து நமக்கு சுத்தமான நீரை வழங்கும்.

    மண்பாண்டப் பயன்பாடு என்பது நமக்கு ஆரோக்கியத்தை வழங்குவதோடு அதனை உருவாக்கும் எளிய தமிழகத்துக் கலைஞர்களுக்கு பொருத்தமான வாழ்வாதாரத்தையும் வழங்கும். நமது நகரங்கள் கலைஞர்களை காவு கொள்பவையாக மாறிக் கொண்டிருக்கின்றன. மண்பானை வனையும் கலைஞர்கள் மண்ணையும் கிராமங்களையும் தமது மூலாதாரமாகக் கொண்டவர்கள். எனவே அவர்கள் நகர்புறத்திற்கு இடம் பெயராத வண்ணம் மண்பாண்டத் தொழிலைச் செழிக்கச் செய்ய முடிந்தவரை மண் பாண்டங்களைப் பயன்படுத்துவோம். மரபை மீட்டெடுப்போம். #PongalFestival #Pongal
    Next Story
    ×