search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்
    X

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்

    மதுரை மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் அருள்பார்வையில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானையின் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருக பெருமானுக்கு தங்கம், பவளம், வைடூரியத்தலான நகைகள், வாசனை கமழும் வண்ண மலர்கள், புத்தம் புதிய பட்டாடைகளால் மணக்கோல அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக பசுமலை மூலக்கரையில் சந்திப்பு மண்டபத்திற்கு சென்றார். அதே வேளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சியம்மன் ஆகியோர் புறப்பட்டு திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபம் வந்தனர். அங்கு முருகப்பெருமான் தனது தாய், தந்தையரான மீனாட்சியம்மன் சுந்தரேசுவரருக்கு வரவேற்பு கொடுத்து அழைத்து சென்றார்.

    இந்தநிலையில் கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மணமேடையான ஆறுகால் மண்டபத்தில் 12 மணிக்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அப்போது முருகப்பெருமான் வெண்பட்டும், தெய்வானை பச்சை நிற பட்டும் அணிந்து இருந்தனர்.

    பின்பு 12.10 மணிக்கு பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரரும், 12.15 மணிக்கு மீனாட்சியம்மனும் எழுந்தருளினர். அதில் முருகப்பெருமானின் பிரதிநிதியான வசந்த், தெய்வானை பிரதிநிதியாக ரமேஷ் ஆகியோர் மாலை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து மேளதாளத்துடன், பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க, எம்பெருமான் மீனாட்சி சுந்தரேசுவரர் அருள்பார்வையில் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து, மொய் பணம் எழுதி சென்றனர்.

    இதையடுத்து இரவு 7 மணிக்கு பதினாறு கால் மண்டபம் அருகே பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேவேளை சர்வ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சியம்மன் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி, அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) மகா தேரோட்டம் நடைபெறுகிறது.
    Next Story
    ×