search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்: கஜோல் பேட்டி
    X

    சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்: கஜோல் பேட்டி

    குழந்தைகளை கவனித்துக்கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை கஜோல் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    தனுஷ் நடிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்‌ஷனில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கஜோல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    படத்தின் அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னை வந்த நடிகை கஜோல், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    “தமிழில் நான் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தேன். இந்த படம் 1997-ம் ஆண்டு வெளியானது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நடித்துள்ளேன்.

    தமிழ் மொழியில் நடிக்க நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு மொழி தான் பெரிய பிரச்சினை. ஆனால் இந்த படத்தில் என்னை நடிக்க சொல்லி தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வற்புறுத்தி கேட்டனர். நான் தயங்கிய நேரத்தில், ‘இந்த கதாபாத்திரம் உங்களுக்குத்தான் நன்றாக அமையும். நீங்கள் நடியுங்கள், மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்’, என்று ஊக்கம் அளித்தனர். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் தமிழ் மொழியில் பேசி நடிக்க கஷ்டப்பட்டபோது தனுஷ், சவுந்தர்யா இருவரும் உதவி செய்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

    ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நான் நடிக்கும் வசுந்தரா எனும் கதாபாத்திரம் பெண்மைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும். மன வலிமையுள்ள, எல்லா வகையிலும் பெருமைமிக்க ஒரு பெண் எப்படி இருப்பாள்? அவளது குணாதிசயம் எப்படி இருக்கும்? என்பதுதான் வசுந்தரா கதாபாத்திரத்தின் அடையாளம். எனது இத்தனை ஆண்டு கால சினிமா பயணத்தில் இதுபோன்ற கதாபாத்திரம் எனக்கு அமைந்தது கிடையாது. வசுந்தரா கதாபாத்திரத்தில் ஒரு மிடுக்கான பெண்ணாக நான் வாழ்ந்திருக்கிறேன்.



    இந்த படத்தில் யாரும் வில்லனும் இல்லை, யாரும் ஹீரோவும் இல்லை. வெவ்வேறு மனநிலைகளுடன், வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும், வெவ்வேறு எண்ணம் கொண்ட இருவர் சந்தித்தால் என்ன ஆகும்? என்பது தான் இப்படத்தின் கதை. இந்த இருவர் இடையே ஏற்படும் மோதல் சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது. ரசிகர்கள் அதனை நிச்சயம் விரும்புவார்கள்.

    எனது குடும்பத்தை பொறுத்தவரை கணவர் அஜய் தேவ்கான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இந்த படத்தின் ‘டிரைலரை’ பார்த்து அவர் வெகுவாக பாராட்டினார். எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 25 குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வளர்க்க ஆசைதான். ஆனால் எனக்கு 2 குழந்தைகள் தான் கிடைத்து இருக்கிறார்கள். இரு கண்களாக உள்ளனர்.

    எனக்கு சினிமா மீதான மோகம் குறையாது. அதேசமயம் எனது குடும்பத்தையும் அக்கறையுடன் வழிநடத்தி கொண்டிருக்கிறேன். எனது குழந்தைகளை கவனித்துக்கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். பல நேரங்களில் நல்ல படங்களை தவறவிட்டு இருக்கிறேன், அதற்காக பல நேரங்களில் அழுததும் உண்டு. எனவே தொடர்ந்து நடிப்பேன்.

    எனது அழகுக்கு என்ன காரணம்? எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு வயதின் மீது நம்பிக்கை இல்லை. மனம் என்ன நினைக்கிறதோ, அது தான் முகத்தின் வெளிப்பாடாக அமையும். நல்ல மனதுள்ளவர்கள் அழகாக தெரிவார்கள். அந்த வசீகரத்துக்கு காரணம் இதுதான். அப்படி தான் நினைக்கிறேன்.

    ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறேன். ஆனால் அதற்கான நேரம் அமையவேண்டும். நல்ல கதையும் கிடைக்க வேண்டும். ‘பாகுபலி-2’ போன்ற படம் பல மொழிகளிலும் மக்களை கவர்ந்தது. மொழி என்பதை தாண்டி மக்களின் வரவேற்பு தான் ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும்”.

    இவ்வாறு நடிகை கஜோல் கூறினார்.
    Next Story
    ×