search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைத்தியர்"

    வாலாஜாவில் வைத்தியர் என்று கூறிகொள்ளும் நபர்கள், பில்லி, சூனியம் வைத்திருப்பதாக சொல்லி, பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ‘நாட்டு வைத்தியம்’ என்ற பெயரில் போலி வைத்தியர்கள் ஏராளமானோர் கிளினீக் வைத்து பொதுமக்களிடம் நூதனமுறையில் ஏமாற்றி பணம் மோசடி செய்வது அதிகரித்துள்ளது.

    வாலாஜா பஸ் நிலையம் சென்று இறங்கினாலே போதும் பயணிகள் சந்திக்கும் மிகப்பெரிய தொல்லையாக ஆட்டோக்காரர்கள், வைப்பு மருந்து புரோக்கர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். ‘‘இடுமருந்து என்று சொல்லப்படும் வைப்பு மருந்தை எடுக்க வேண்டுமா?

    நாட்டு வைத்தியர்களிடம் அழைத்துசெல்கிறோம்’’ வாருங்கள் என்றுகூறி நச்சரிப்பதை பார்க்க முடிகிறது. போலி வைத்தியர்களுக்கு ஆள்பிடித்து தரும் புரோக்கர் கும்பலே வாலாஜா பஸ் நிலையத்தை பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன.

    இதனால், மற்ற தேவைக்களுக்காக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இடுமருந்து எடுக்க செல்பவர்கள் கண்ணில் பட்டால் போதும் கமி‌ஷன் பணத்திற்காக ஆசைப்பட்டு புரோக்கர்கள், போலி வைத்தியர்களிடம் கொண்டு போய் விட்டுவிடுகின்றனர்.

    வைத்தியர் என்று கூறிகொள்ளும் நபர்கள், பில்லி, சூனியம் வைத்திருப்பதாக சொல்லி, இல்லாத ஒரு நோய்க்கு வைத்தியம் செய்கின்றனர். வாலாஜாவில் கொடிகட்டி பறக்கும் இந்த தொழிலுக்கு அரசியல் பிரமுகர்களுடைய பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு இடுப்பு முறிவுக்கு வாலாஜாவில் உள்ள ஒரு நாட்டு வைத்தியர் கொடுத்த மருந்தை சாப்பிட்ட ஒரு தொழிலாளியின் முகம் அகோரமாக மாறி உடல் உருகுலைந்தது. பாதிக்கப்பட்ட நபர் கலெக்டரிடம் புகார் அளித்தார்.

    அதுசம்பந்தமாக இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை. இதேபோல் போலி வைத்தியர்கள் குறித்து பல்வேறு புகார்கள் சென்றாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை. நடவடிக்கை எடுப்பதும் இல்லை.

    ஓராண்டுக்கு முன்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் போலி வைத்தியம் பார்த்த கும்பலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், போலி வைத்தியர்களை கைது செய்யாமல் விடுவித்தனர். போலி வைத்தியர்கள் அவ்வளவு செல்வாக்கு நிறைந்தவர்களா? என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை.

    இந்த நிலையில் புதியதாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரிடம் இந்த போலி வைத்தியர்கள் பற்றி நகரில் பல்வேறு தரப்பினர் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் நடத்திய சோதனையில் போலி வைத்தியர்களான ஒத்தவாடை தெருவை சேர்ந்த ரமேஷ் (44), பாஸ்கர் (40) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல், வாலாஜாவில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி போலி வைத்தியர்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
    இடுப்பு எலும்பு முறிவு சரியாக நாட்டு மருந்து சாப்பிட்டதால் உடல் தோற்றம் சீர்குலைந்தது. இதற்கு காரணமான வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலாளி, குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில், அணைக்கட்டு தாலுகா கருகாளி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 52) என்பவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தேன். அந்த சமயம் ஒரு நாள் திடீரென பாத்ரூமில் வழுக்கி விழுந்தேன். இதில் எனது ஒருபக்க இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இடுப்பு எலும்பு முறிந்ததால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒன்று பார்த்தேன். அதில், வாலாஜாவில் உள்ள நாட்டு வைத்திய சாலையில் மருந்து சாப்பிட்டால் எலும்பு முறிவு சரியாகி விடும் என தெரிவித்தனர்.

    இதனை உண்மை என நம்பிய நான், கடந்த மாதம் அந்த நாட்டு வைத்திய சாலைக்கு சென்று வைத்தியரை நேரில் பார்த்தேன். அப்போது அவர், உடல் நலம் முழுவதும் குணமடைந்து, பழைய மாதிரி எழுந்து நடப்பதற்கு நாட்டு மருந்து தருவதாகவும், அதற்கு ரூ.60 ஆயிரம் செலவாகும் என்று கூறினார்.

    இதையடுத்து எனது தங்கையின் நகைகளை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் வைத்தியரிடம் கொடுத்தேன். அதற்கு அவர் நாட்டு மருந்து மற்றும் எண்ணெய் வழங்கினார். அந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டதால் என் உடலின் தோற்றம் சீர்குலைந்து விட்டது, (உருவமே மாறிவிட்டது). உடல் நிலை பாதிப்பு மேலும் அதிகமானது. இதுகுறித்து வைத்தியரிடம் கேட்டதற்கு, என்னை அடிக்க வருகிறார்.

    என்னிடம் ரூ.60 ஆயிரம் வாங்கிவிட்டு எனது உடல் தோற்றத்தை சீர்குலைத்த வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
    ×