search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில் பதிவு"

    • கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது.
    • குறிப்பாக பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 105.4 டிகிரி வெயில் பதிவானது. இதனால் வெயில் சுட்டு எரித்தது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். தொடர்ந்து நேற்று 103.7 டிகிரி வெயில் பதிவானது.

    100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்ததால் சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் நேற்றும் கடும் அவதிப்பட்டனர்.

    இதே போல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 104.9 டிகிரி வெயில் நேற்று பதிவானது. இதனால் கடும் அனல் காற்று வீசியது. பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் குடைகளை பிடித்து படியும், துணிகளால் தலையில் மூடிய படியும் சென்றனர்.

    மேலும் வாகனங்களில் சென்றவர்களும் கடும் உஷ்ணத்தால் அவதிப்பட்டனர். இந்த வெயில் தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றும், இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு வெயிலின் தாக்கம் தொடங்கி மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளிலும் புழுக்கம் நிலவுவதால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. மதிய நேரங்களில் முடிந்த அளவு பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    மேலும் வியாபாரம், தொழிலுக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், மோர், குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

    இதனால் பழங்கள், குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சாலையில் ஆங்காங்கே இளநீர் கடை, கரும்பு பால் கடைகள் புதிதாக தோன்றி உள்ளன.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 101.01 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    அனல் காற்றுடன் வெயில் பதிவாகி உள்ளதால் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலான நீர் நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    குறிப்பாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதேபோல் காளிங்கராயன் வாய்க்கால் கீழ்பவானி வாய்க்கால் போன்றவற்றுக்கும் மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

    மேலும் மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சப்பட தொடங்கி உள்ளனர்.

    ×