search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hot Air"

    • அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது.
    • மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடிந்து தற்போது வரை 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பகலில் 104 டிகிரி வெயிலும், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள மழையில் நனைந்து படியும், நடந்து சென்ற பொது மக்கள் குடை பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. அதே சமயத்தில் இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மட்டும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது. இரவு நேரத்தில் வெயிலின் தாக்கம் கார ணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வறண்ட பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்று குறைந்து அனல் காற்று வீசும்.

    எனவே பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும், அந்நேரங்களில் பயணம் செல்ல நேரிட்டால் குடிதண்ணீர் எடுத்துச் செல்வதுடன் கண்ணாடி மற்றும் காலனி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்லவும். அனல் காற்று வீசும் காலங்களில் தாகம் எடுக்காவிட்டாலும் கூட அவ்வப்போது போதுமான தண்ணீர் அருந்தவும். வீட்டில் தயாரித்து நீர் மோர், லஸ்ஸி, புளித்த சோற்று தண்ணீர், எலுமிச்சைசாறு போன்ற பானங்களை அருந்தவும். அனல் காற்று வீசும் காலங்களில் வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். மேலும் குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும்.பொதுமக்கள் குழந்தைக ளுக்கான வெப்ப தொடர்பான நோய்கள் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறியவும், குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். உடனே அருகில் அரசு மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.

    வீடுகளில் தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும். தொலைபேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளவும். முதியவர்கள் வெப்ப அழுத்ததால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் குளிர்ந்த நீரில் குளிப்பதுடன் போதிய இடைவேளைகளில் நீர் அருந்தவும்.

    தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய மேற்கண்ட பாதுகாப்பு குறிப்புகளை கடைபிடித்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு வெயிலின் தாக்கம் தொடங்கி மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளிலும் புழுக்கம் நிலவுவதால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. மதிய நேரங்களில் முடிந்த அளவு பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    மேலும் வியாபாரம், தொழிலுக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், மோர், குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

    இதனால் பழங்கள், குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சாலையில் ஆங்காங்கே இளநீர் கடை, கரும்பு பால் கடைகள் புதிதாக தோன்றி உள்ளன.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 101.01 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    அனல் காற்றுடன் வெயில் பதிவாகி உள்ளதால் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலான நீர் நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    குறிப்பாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதேபோல் காளிங்கராயன் வாய்க்கால் கீழ்பவானி வாய்க்கால் போன்றவற்றுக்கும் மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

    மேலும் மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சப்பட தொடங்கி உள்ளனர்.

    ×