search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராட்சத கிரேன்"

    • கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பார்த்தியநாதனின் மகன் ஜெரால்டு குடியிருக்கும் வீட்டின் மீது வேகமாக மோதியது.
    • மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.

    மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என 3 வழித்தடங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக போருர் ஏரி அருகே சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத தூண்கள் அமைக்கும் பணியில் இரவு பகலாக நடந்து வருகிறது.

    இதையொட்டிய அஞ்சுகம் நகரில் வசித்து வருபவர் பார்த்திய நாதன். 2 தளம் கொண்ட இவரது வீட்டின் மாடியில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒருவீட்டில் மகன் ஜெரால்டு, அவரது மனைவி அஸ்வினி, மகன் ஷியாம், மகள் யாஷிகா ஆகியோரும், மற்றொரு வீட்டில் 2-வது மகனும், இன்னொரு வீட்டை வாடகைக்கும் விட்டு உள்ளனர். கீழ்தளத்தில் உள்ள வீட்டில் பார்த்தியநாதன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் பார்த்தியநாதன் வீட்டை ஒட்டிய பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்றது. அப்போது அங்கிருந்து ராட்சத கிரேனை ஊழியர்கள் இயக்க திருப்பினர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பார்த்தியநாதனின் மகன் ஜெரால்டு குடியிருக்கும் வீட்டின் மீது வேகமாக மோதியது.

    இதில் வீட்டின் தடுப்பு சுவர்கள் மற்றும் மேல்பகுதி ஷீட்டுகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தன. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த அஸ்வினி தனது மகன்ஷியாம், மகள் அஸ்வினியை வெளியே உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று இருந்தார். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அஸ்வினியின் கணவரான கார்டிரைவர் ஜெரால்டு வெளியே சென்று இருந்ததால் அவர் வீட்டில் இல்லை. வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் பிரோ, கட்டில், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.

    கிரேன் மோதியதில் அருகில் இருந்த மற்ற 2 வீடுகள் மற்றும் கீழ்தளத்தில் உள்ள வீடு குலுங்கியது. சுவர்களிலும் விரிசல் விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீடுகளில் இருந்த வர்கள்அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கிரேன் பலமாக மோதி இருந்தால் அந்த கட்டிடம் முழுவதும் பலத்த சேதம் அடைந்து இருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அவர்கள் மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மெட்ரோ பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விபத்து ஏற்படுத்திய இந்த ராட்சத கிரேன் மெட்ரோ ரெயில் பணியில் துளையிட பயன்படுத்தப்படும் எந்திரம் ஆகும். சுமார் 100 டன் எடை கொண்டது. 200 அடிக்கு மேல் உயரம் செல்லும் வசதி கொண்டது. சாய்வாக இருக்கும் இந்த எந்திரத்தை பயன்படுத்த செங்குத்தாக நிலை நிறுத்த வேண்டும். அப்படி நிலை நிறுத்தும்போது அருகில் இருந்த வீட்டை கவனிக்காமல் கிரேனை இயக்கிய ஆபரேட்டர் கவனக் குறைவாக செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் மற்றும் போரூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×