search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை மீட்பு"

    • யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் போஸ்பெராவையொட்டி பகுதியில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.
    • அகழியையொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் வெட்டி யானை வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சி எல்லையில் உள்ளது போஸ்பெரா. இந்த போஸ்பெரா பகுதி அடர்ந்த வனத்தையொட்டி உள்ளது.

    இங்கு காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

    இந்த காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் போஸ்பெராவையொட்டி பகுதியில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை யானைகள் வராமல் இருக்க வெட்டப்பட்ட அகழிக்குள் இருந்து யானை சத்தம் கேட்டது.

    இதை பார்த்த பொதுமக்கள் அகழி அருகே சென்று பார்த்தனர். அப்போது காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் அகழிக்குள் நின்றிருந்தது.

    உடனடியாக மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அகழிக்குள் விழுந்த குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அகழியையொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் வெட்டி யானை வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானை தனது குட்டியுடன் மேலே வந்தது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் சென்றது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அதிகாலை நேரத்தில் காட்டு யானை வனத்தைவிட்டு வெளியேறி தனது குட்டியுடன் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக யானை குட்டியுடன் அகழிக்குள் விழுந்தது. தகவலின் பேரில் விரைந்து வந்து யானையையும், குட்டியையும் பத்திரமாக மீட்டு வனத்திற்குள் அனுப்பி விட்டோம் என்றனர்.

    • வளர்ப்பு யானையை பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.
    • யானையை லாரியில் ஏற்றி திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் விமலன். இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெண் யானை ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த யானைக்கு சுமதி என்று பெயர் வைத்து அரசின் அனுமதியுடன் உத்தங்குடி பகுதியில் ஒரு வீட்டில் வளர்த்து வந்தார். அந்த யானைக்கு தற்போது 58 வயதாகிறது.

    இந்த நிலையில் அந்த வளர்ப்பு யானையை பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. எனவே யானையை வெளியே எங்கும் கொண்டு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்து இருந்தனர். அதையும் மீறி சில மாதங்களுக்கு முன்பு அனுமதியின்றி ராமநாதபுரத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக அந்த யானை கொண்டு செல்லப்பட்டதாகவும், இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது இதற்கிடையே வனத்துறையில் சுமதி யானைக்கான லைசென்சை புதுப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    இந்நிலையில் யானையை வளர்க்க உரிய உரிமம் இல்லாமல் இருப்பதும், யானையை ஒழுங்காக பராமரிக்கவில்லை என்றும் கூறி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து யானையை மீட்டு திருச்சியில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட வன அதிகாரி குருசாமி டோப்ளா, வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் நேற்று காலை உத்தங்குடி சென்றனர்.

    அந்த வளர்ப்பு யானை சுமதியை, கோர்ட்டு உத்தரவுப்படி மீட்டனர். பின்னர் லாரியில் ஏற்றி திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

    • விளைநிலத்திற்குள் புகுந்த யானை ஒன்று அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்தது.
    • யானையால் வெளியே வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்தப்படி பிளிறியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் மொகிலி ஊராட்சிக்குட்பட்ட காண்டப்பள்ளியில் உள்ள விவசாய நிலங்களில் நள்ளிரவில் யானை கூட்டம் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தது.

    நேற்று இரவு விளைநிலத்திற்குள் புகுந்த யானை ஒன்று அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்தது.

    யானையால் வெளியே வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்தப்படி பிளிறியது. யானையின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் யானை கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள், தாசில்தார் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றிலிருந்து யானை வெளியேறி வருவதற்காக நிலத்தை வெட்டி சமன் செய்தனர்.

    இதையடுத்து யானை கிணற்றிலிருந்து மேலே வந்தது. யானையை மீட்ட வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று அதனை விட்டனர்.

    • கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • அமராவதி ஆற்றின் மற்றொரு நீர் ஆதாரமான சின்னாற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.

    அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் மருத்துவம், கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்வதற்கு முடியாமல் மலைவாழ் மக்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி வனப்பகுதியில் மூன்று ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனித்தீவாக மாறியுள்ளது.

    அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமதளபரப்புக்கு சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டாற்றின் குறுக்காக மலைவாழ் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    எனவே கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்தநிலையில் அமராவதி ஆற்றின் மற்றொரு நீர் ஆதாரமான சின்னாற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு வயதான குட்டி யானை ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. அந்த குட்டி யானையின் பிளிறலை கேட்ட கேரள வனத்துறையினர் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் கயிறுகளை கட்டி அந்த யானை குட்டியை மீட்க முயற்ச்சித்தனர். ஆனால் வெள்ள நீர் அதிக அளவில் வந்ததால் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் யானை குட்டியை மீட்டனர்.

    பின்னர் யானை குட்டியை அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்ற ஊழியர்கள், காயங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என பார்த்து அதற்கான சிகிச்சைகளை அளித்தனர். யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் பணியில் ஈடுபட உள்ளதாக கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். தங்களது உயிரை பணயம் வைத்து யானை குட்டியை மீட்ட கேரள வனத்துறையினரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றது.

    ×