search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை கூட்டாற்றில் வெள்ளம்- சின்னாற்றில் சிக்கி தவித்த யானை மீட்பு
    X
    சின்னாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த யானை.

    உடுமலை கூட்டாற்றில் வெள்ளம்- சின்னாற்றில் சிக்கி தவித்த யானை மீட்பு

    • கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • அமராவதி ஆற்றின் மற்றொரு நீர் ஆதாரமான சின்னாற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.

    அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் மருத்துவம், கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்வதற்கு முடியாமல் மலைவாழ் மக்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி வனப்பகுதியில் மூன்று ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனித்தீவாக மாறியுள்ளது.

    அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமதளபரப்புக்கு சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டாற்றின் குறுக்காக மலைவாழ் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    எனவே கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்தநிலையில் அமராவதி ஆற்றின் மற்றொரு நீர் ஆதாரமான சின்னாற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு வயதான குட்டி யானை ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. அந்த குட்டி யானையின் பிளிறலை கேட்ட கேரள வனத்துறையினர் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் கயிறுகளை கட்டி அந்த யானை குட்டியை மீட்க முயற்ச்சித்தனர். ஆனால் வெள்ள நீர் அதிக அளவில் வந்ததால் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் யானை குட்டியை மீட்டனர்.

    பின்னர் யானை குட்டியை அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்ற ஊழியர்கள், காயங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என பார்த்து அதற்கான சிகிச்சைகளை அளித்தனர். யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் பணியில் ஈடுபட உள்ளதாக கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். தங்களது உயிரை பணயம் வைத்து யானை குட்டியை மீட்ட கேரள வனத்துறையினரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றது.

    Next Story
    ×