search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெனோபாஸ்"

    • வாதம் பாதிக்கப்பட்ட பலருக்கு தூக்கமின்மை உண்டாகும்.
    • தூக்கமின்மை என்பது மெனோபாஸ் நிலையில் பெண்களை மிக அதிக அளவில் பாதிக்கும்.

    தூக்கமின்மை என்பது மெனோபாஸ் நிலையில் பெண்களை மிக அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும் குறிகுணமாக உள்ளது. இதில் பெண்கள் பலருக்கும் அனுபவம் இருக்கும். வாதம் பாதிக்கப்பட்ட பலருக்கு தூக்கமின்மை உண்டாகும். வாதத்தை சீராக்கி தூக்கமின்மையை போக்க உதவும் மூலிகையில் முக்கியமான ஒன்று பிரம்மி கீரை தான்.

    நீர்பாங்கான இடங்களில் சாதாரணமாக வளரும் மூலிகை இது. இதில் உள்ள 'ப்ரமினோசைடு' எனும் வேதிப்பொருள் நரம்புகளை வலுப்படுத்தி இயற்கையாக தூக்கத்தை உண்டாக்கும். 'பிரம்மி நெய்' என்ற சித்த மருந்தையும் இதற்கு பயன்படுத்தலாம். வாரம் இருமுறை பெண்கள் முக்கியமாக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பிரம்மி தைலம் கொண்டு எண்ணெய் முழுக்கும் எடுக்கலாம்.

    மேலும் தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய மூலிகைகள் தூக்கமின்மையில் பலன் தருவதாக உள்ளன. இதில் 'வெலராநோன்' மற்றும் 'வெலபோட்ரைட்' ஆகிய மருத்துவக் குணமுள்ள வேதிப்பொருட்கள் இரண்டு மூலிகையிலும் உள்ளது.

    இவை நமது மூளையில் சுரக்கும் வேதி அமிலமான காபா-வின் சிதைவைத் தடுத்து தூக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் தகரை வேர் அதிக வேதிப்பொருளைக் கொண்டு தூக்கமின்மையில் சிறப்பாக செயல்படக்கூடியது. இதனையும் தூக்கத்திற்காக ஏங்கும் பெண்கள் பயன்படுத்தி பலனடையலாம்.

    • மெனோபாஸ் என்பது மாதவிடாய் இயற்கையான நிறுத்தமாகும் நிலை.
    • வாதத்தை குறைக்க பல்வேறு மூலிகைகள் பயன்படுவதாக உள்ளன.

    மெனோபாஸ் என்பது மாதவிடாய் இயற்கையான நிறுத்தமாகும் நிலை ஆகும். பெண்களின் கருவுறுதல் காலம் முடிவடையும் தருணமும் இதுதான். அந்நிலையில் பெண்களிடம் ஏற்படும் உடலியல் மற்றும் மனவியல் மாற்றங்களுடன் தொடர்புடைய பல்வேறு அறிகுறிகளை உள்ளடக்கியதை 'மெனோபாஸல் சின்ரோம்', 'கடைபூப்பு குறிகுணங்களின் தொகுப்பு' என்று அறியப்படுகின்றது. இத்தகைய குறிகுணங்கள் அனைத்தும் உடலின் இயல்பான நிகழ்வுகள் தான் என்பதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    உடல் பருமன் உள்ளவர்கள் விரைவிலே மெனோபாஸ் நிலையை எய்துவதாகவும், மெலிந்த தேகம் உள்ள பெண்களின் இறுதி மாதவிடாய் காலம் அதிகமானதாக உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மாதவிடாய் நிகழும் வரை தான் ஓவுலேஷன் எனும் அண்ட விடுப்பு நிகழும். அத்தகைய காலம் தான் கருவுறுதல் நடைபெறும் காலம். ஆக தாமதமாக திருமணமான பெண்கள், கருத்தரிப்பு தாமதமாகும் பெண்கள் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அப்போது தான் மாதவிடாய் சீராக இருக்கும். மெனோபாஸ் உண்டாகும் காலம் தள்ளி போகும். இது கருத்தரிப்புக்கு ஏதுவாக இருக்கும்.

    மேலும் இறுதி மாதவிடாய் நிலையை பல்வேறு உணவுப் பொருட்களும், உணவு முறை மாற்றங்களும், வாழ்வியல் மாற்றங்களும், இன்றைய நவீன வாழ்வியலில் மதுபானம், புகையிலை போன்ற பழக்க வழக்கங்களும் தீர்மானிக்கும் தன்மையுள்ளதாக உள்ளது. இத்தகைய கடைசி பூப்பில் உண்டாகும் பல்வேறு குறிகுணங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவு. அதற்கு தீர்வாக எச்.ஆர்.டி எனும் ஹார்மோன் மாற்று சிகிச்சையை மேற்கொள்வது பல்வேறு நோய்நிலைகளை உண்டாக்குவதாக நவீன அறிவியல் கூறுகிறது.

    முக்கியமாக ஈஸ்ட்ரோஜென் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை உண்டாக அதிகம் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு தொடர்ந்து இத்தகைய ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வோருக்கு மாரடைப்பு கூட வரக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள். இதுமட்டுமின்றி சர்க்கரை நோய், கருப்பை புற்றுநோய், பித்தப்பை நோய்கள், மன அழுத்தம் போன்ற நோய்நிலைகளை உண்டாக்க இந்த ஹார்மோன் மாற்று சிகிச்சை காரணமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. ஆக மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்படும் நபர்கள் மட்டும் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இது ஒருபுறமிருக்க, பெண்கள் உடலுக்கு தேவையான தாவர ஈஸ்ட்ரோஜென் பல்வேறு மூலிகைகளில் இயற்கையாக உள்ளதால் அவற்றை நாடுவது நலம் பயக்கும்.

    அந்த வகையில் சித்த மருத்துவ தத்துவத்தின் படி வாதம், பித்தம் ஆகிய நாடி குற்றங்கள் இரண்டும் மாறுபாடு அடைந்து மெனோபாஸ் சார்ந்த குறிகுணங்கள் உண்டாவதால், அத்தகைய நாடிகளை சீர் செய்யும் பொருட்டு மருந்துகளையோ, மூலிகைகளையோ எடுத்துக்கொள்வது நல்ல முன்னேற்றம் தரும். பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் வாதத்தின் சார்பாக நரம்பு தளர்ச்சி, மனப்பதட்டம், மனநிலை மாற்றங்கள், கருவாய் வறட்சி, தோல் வறட்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை, லேசான வெப்பம், மலச்சிக்கல், மார்பு படபடப்பு மற்றும் மூட்டு வலி போன்ற பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கும். இத்தகைய நிலைகளில் வாதத்தை குறைக்க பல்வேறு மூலிகைகள் பயன்படுவதாக உள்ளன.

    நரம்பு தளர்ச்சி, மன பதட்டம், மன அழுத்தம் போன்ற குறிகுணங்களுக்கு அமுக்கரா கிழங்கு நல்ல பலன் அளிக்கும். ஏற்கனவே கூறியதைப் போல் அமுக்கரா கிழங்கு பெண்களின் அனைத்து பருவ நிலைகளிலும் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகளுக்கு நல்ல பலன் தரும். இதனை தினசரி 2 முதல் 5 கிராம் வரை பாலுடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் நிம்மதியான தூக்கமும் வரும். ஏனெனில் இறுதி மாதவிடாய் நிலைகளில் தூக்கம் கெட்டு பல பெண்கள் அன்றாட வாழ்வில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

    மூட்டு வலி, உடல் வலிகளுக்கு எளிய நல்ல பலன் தரும் மூலிகை நொச்சி தான். அவ்வப்போது நொச்சி இலையை மஞ்சள் பொடியுடன் சேர்த்து ஆவி பிடிக்கலாம். நொச்சி இலையை மிளகுடன் சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் மூட்டு வலிக்கு நல்ல பலன் தரும். நொச்சி இலையில் உள்ள லூட்டியோலின், குர்சிடின் ஆகிய வேதிப்பொருட்கள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதாகவும், நமைச்சலை நீக்குவதாகவும் உள்ளது. இந்த எளிய மூலிகையை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    • அக்டோபர் 20-ந் தேதி சர்வதேச எலும்புப்புரை நோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த பாதிப்பானது ஆண்களை விட, பெண்களை அதிகம் பாதிக்கிறது.

    எலும்புகள் என்பது நமது உடலிற்கு நிலையானதொரு வடிவமைப்பை தருவதோடு, உடலின் மெல்லிய தசை உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. மேலும் தசைகளுடன் இணைந்து உடல் அசைவுகளுக்கு உதவி புரிகிறது.

    இவ்வாறு உடலின் மேம்பட்டதொரு பணியினை செய்து வரும் எலும்புகளின் வெளிப்புற திட அமைப்பானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக உருவெடுத்து கொண்டே இருக்கும்.‌ மேலும் இதன் உட்புறத்தில் காணப்படும் திசுக்களின் அடர்த்தி குறையும் போது எலும்புப்புரை எனும் நோய் (ஆஸ்டியோபோரோஸிஸ்) ஏற்படுகிறது.

    வயதானவர்களையும், மாதவிடாய் நிறைவுற்றலுக்கு பின் அதிகமாக பெண்களை பாதிக்கும் இந்த நோயினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அதனை கண்டறிதல், சிகிச்சை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடைமுறைகளை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 20-ந் தேதி சர்வதேச எலும்புப்புரை நோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலும்பின் வெளிப்புற பகுதியில் பழைய எலும்புகள் சிதைவுற்று புதிய எலும்புகள் உருவாகின்றன. இவ்வாறு நடைபெறும் புதுப்பித்தல் நிகழ்வு 30-வயதினை அடைந்த(முழுமையான எலும்பு வளர்ச்சி) ஒருவருக்கு குறைய ஆரம்பிக்கிறது. இதன்படி எலும்புகளினுள் காணப்படும் அதன் அடர்த்தி குறைந்து கொண்டே வருவதால் எலும்புகள் பலவீனம் அடைகிறது.

    குறிப்பாக பெண்களின் மாதவிடாய் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நின்று விடுகிறது. இதன்பின் அவர்களிடம் ஈஸ்ட்ரோஜன் என்னும் எலும்பு புதுப்பித்தலுக்கு அத்தியாவசியமான ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் அவர்களின் எலும்புகள் பலவீனம் அடைய தொடங்குவதால் எலும்பு முறிவு, வளைந்த தோற்றம், உயரம் குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    மவுன நோய் என்றழைக்கப்படும் இதன் பாதிப்பானது அதிகளவு வலி, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு எலும்புகளில் முறிவு ஏற்படுதல், உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கும்போதுதான் நோயாளிகள் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு எலும்பு திசுக்களின் அடர்த்தி குறையும் போது ஏற்படும் இந்த பாதிப்பானது ஆண்களை விட, பெண்களை அதிகம் பாதிக்கிறது.

    சிறு வயதினில் ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளாததால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் எலும்பு புதுபித்தலின் போது அடர்த்தி அதிகரிக்க ஆரோக்கியமான உணவு பழக்கம் அவசியமாகிறது. குறைவான அடர்த்தியில் உற்பத்தியாகும் எலும்புகள் விரைவில் சிதைவுறுகிறது. எனவே கால்சியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் இந்நோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை நாம் இந்நாளில் அறிந்து கொள்வோம்.

    • வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும்.
    • சத்தான உணவை உட்கொள்வது அவசியம்.

    50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

    ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண் டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

    சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற் றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், 'எக்ஸ்சர்சைஸ் பேண்டு' எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

    தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.

    • 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
    • உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

    மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

    உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியின் சரிவு எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவை பாதிக்கும். இது எலும்பு அடர்த்தியில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்துவதால் உங்களை இடுப்பு, முதுகெலும்பு மற்றும் பிற எலும்பு முறிவுகளுக்கு ஆளாக்கும். எனவே, உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

    பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்

    வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்

    தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

    மது அருந்துவதை, புகைப்பிடிப்பதை தவிக்கவும்.

    தலைச்சுற்றல் அல்லது இதயத் துடிப்பில் மாற்றம் போன்றவை மாதவிடாய் நிற்கும் பருவத்தில் நீங்கள் அனுபவிக்கும் ஒன்று. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் உங்கள் உடல் ஃப்ளெக்ஸிபில் ஆர்ட்ரீஸ்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

    • 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது.
    • அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் உண்மை கிடையாது.

    மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிரது என்று அர்த்தம்.

    50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன் மெமோகிராம் பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேணடும். 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால் கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிருப்பதும் நல்லது.

    மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோமாஸ் நேரத்திலும் வரும்.

    ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலி வரும் அந்த நேரத்தில் மாத்திரை எடுப்பது தப்பில்லை, அதே நேரம் எல்லா மாதமும் இப்படி தலைவலி வருவதுதான் தவறு. இவ்வாறு தொடர்வது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.

    இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும் வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.

    "50-களிலும் மாதவிடாய் இருந்தால் கட்டாயம் என்னென்ன பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்?"

    "கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிப்பது நல்லது."

    • மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
    • 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

    குறிப்பிட்ட வயதை கடந்த பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை அனுபவிப்பார்கள். மெனோபாஸ் என்பது ஒரு வருடத்திற்கு மாதவிடாய் வருவதில் மாறுபாடு ஏற்பட்டு படிப்படியாக குறையும் என வரையறுக்கப்படுகிறது. இது பொதுவாக பெண்களின் 40களின் பிற்பகுதியில் அல்லது 50களின் முற்பகுதியில் நிகழும்.

    மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். சரி, இந்த மெனோபாஸ் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

    மாதவிடாய் நிற்பதற்கான (மெனோபாஸ்) சராசரி வயது 51 என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படுவது படிப்படியாக நிற்கிறது. கருப்பை செயல்பாடு குறைவதற்கான ஆரம்ப நிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சில பெண்களுக்கு தொடங்கலாம். மற்றவர்கள் 50 வயதிற்கு பிறகும் மாதவிடாய் காலத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

    75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் அதிகப்படியான காய்ச்சல் வெப்பத்தின் திடீர் உணர்வு என்பது மாதவிடாய் நிற்கும் பெண்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளாகும். பகலில் அல்லது இரவில் இதுபோன்ற உணர்வு ஏற்படலாம். சில பெண்கள் தசை மற்றும் மூட்டு வலியை அனுபவிப்பார்கள். இது ஆர்த்ரால்ஜியா அல்லது மனநிலை மாற்றங்கள் (mood swing) என்று அழைக்கப்படுகிறது.

    ×