search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் கட்டுப்பாடு"

    சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது, ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். #Sabarimala #Sabarimaladevotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இன்றி பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐயப்ப பக்தர்களுடன் இணைந்து பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டதால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    அதேசமயம் மாநில அரசு சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்தது. இதனால் கனகதுர்க்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் முதல் முறையாக சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 5.30 மணிக்கு மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கோவில் மீண்டும் திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 5 நாட்களுக்கு பல்வேறு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். வருகிற 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிவடையாததால் இப்பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. இதனால் சபரிமலை கோவில் நடை திறக்கும்போது இளம்பெண்கள் மீண்டும் தரிசனத்திற்கு வருவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களை தடுத்து போராட்டம் நடத்த ஐயப்ப பக்தர்களும் திட்டமிட்டுள்ளனர். எனவே சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சபரிமலை கோவில் நடை திறந்து இருந்தபோது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுபோல இந்த முறையும் தடை உத்தரவு பிறப்பிப்பது பற்றி பத்தனம் திட்டா கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது.

    பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது பக்தர்கள் அமைதியாக சென்று வழிபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 12-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை காலை 10 மணிக்கு மேல்தான் நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் கட்டுப்பாடுகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.



    இதற்கிடையில் சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்க கால அவகாசம் வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி வந்தது. சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையின் போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான வக்கீல் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து தேவசம்போர்டு ஆணையர் வாசுவுக்கு தேவசம்போர்டு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை மாற்றி, மாற்றி கூறி வருவதால் ஐயப்ப பக்தர்கள் இடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. #Sabarimala #Sabarimaladevotees
     
    ×