search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோ கபடி லீக் போட்டி"

    12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் நாளை தொடங்குகிறது. #ProKabaddi
    சென்னை:

    6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் சென்னை, சோனிபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை, ஆமதாபாத், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொச்சியிலும், இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதியும் நடைபெறுகிறது.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்து எதிர்பிரிவில் உள்ள அணிகளை ஒரு முறை சந்திக்க வேண்டும். மேலும் எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாட வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாடும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    தொடக்க சுற்று லீக் ஆட்டங்கள் சென்னையில் நாளை முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. சென்னையில் நாளை நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் -பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியும், 2-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-மும்பை (இரவு 9 மணி) அணியும் மோதுகின்றன.

    இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும் வழங்கப்படும் பரிசுக்கோப்பை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

    விழாவில் கேப்டன்கள் அஜய் தாகூர் (தமிழ் தலைவாஸ்), சுர்ஜீத் சிங் (பெங்கால் வாரியர்ஸ்), ஜோஜிந்தர்சிங் நார்வால் (தபாங் டெல்லி), சுனில் குமார் (குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்), அனுப்குமார் (ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்), பர்தீப் நார்வால் (பாட்னா பைரட்ஸ்), கிரிஷ் எர்னாக் (புனேரி பால்டன்), விஷால் பரத்வாஜ் (தெலுங்கு டைட்டன்ஸ்), ரிஷாங் தேவதிகா (உ.பி.யோத்தா), சேரலாதன் (மும்பை), ரோகித் குமார் (பெங்களூரு புல்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினார்கள். விமானம் தாமதம் காரணமாக அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் கேப்டன் சுரேந்தர் நாடா மட்டும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

    விழாவில் கலந்து கொண்ட தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் அளித்த பேட்டியில், ‘கடந்த சீசனில் எங்கள் அணியில் இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்து இருந்தனர். ஆடுகளத்தில் நாங்கள் எடுத்த சில முடிவுகள் மோசமானதாக இருந்தது. அதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது. ஆனால் இந்த ஆண்டு மன்ஜீத் சிலார், ஜஸ்விர்சிங், சுகேஷ் ஹெக்டே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியான விகிதத்தில் இடம் பெற்றுள்ளனர். எனவே இந்த முறை நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.  #ProKabaddi
    ‘புரோ கபடி லீக் போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான தொடக்கம் காணும்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் தெரிவித்தார். #ProKabaddiLeague2018
    சென்னை:

    12 அணிகள் பங்கேற்கும் 6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, ‘ஹாட்ரிக்’ சாம்பியனான பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது. சென்னை சுற்று ஆட்டம் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சோனாபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இந்த போட்டி நடக்கிறது.

    புரோ கபடியில் கடந்த ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்த சீசனில் வலுவான அணியாக உருவெடுக்க வீரர்கள் பலரை மாற்றி இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி ஆகஸ்டு 30-ந் தேதி முதல் சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் தலைவாஸ் அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியான அளவில் இடம் பிடித்துள்ளனர். இந்த சீசனுக்காக தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான முறையில் தயாராகி இருக்கிறது. எங்களது பலம், பலவீனத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி அணியினரை தயார்படுத்தி இருக்கிறோம். எதிரணியின் பலம், பலவீனத்தை அறிந்து ஆட்ட வியூகம் அமைத்து களம் காணுவோம். இந்த முறை எங்கள் பிரிவில் இடம் பிடித்து இருக்கும் எல்லா அணிகளும் வலுவானது தான். அதனை சமாளிக்க திட்டமிட்டு செயல்படுவோம்.

    எங்கள் அணியில் 10 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் உள்ளனர். அணியில் பலவீனம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தொடக்க சுற்று ஆட்டங்களில் நாங்கள் சொந்த ஊரில் விளையாடுவது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. வீரர்கள் நல்ல புத்துணர்ச்சியுடன் உள்ளனர். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு நன்கு கிடைக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்த போட்டி தொடரில் நாங்கள் சிறப்பான தொடக்கம் காணுவோம்.

    இந்த போட்டித் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது தான் எங்கள் முதல் இலக்காகும். அதை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் அந்த அளவுக்கு நாங்கள் கடின பயிற்சி மேற்கொண்டு அணி வீரர்கள் இடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ProKabaddiLeague2018
    புரோ கபடி லீக் போட்டிக்கு தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக தயாராகி இருக்கிறது என்று அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் தெரிவித்தார். #ProKabaddileague #AjayThakur
    சென்னை:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது. சென்னை சுற்று ஆட்டம் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. சோனாபட், புனே, பாட்னா, நொய்டா உள்பட பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதி நடக்கிறது.

    புரோ கபடி லீக் போட்டி தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி எதிர்பார்த்தபடி ஜொலிக்காமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. 22 லீக் ஆட்டங்களில் ஆடிய அந்த அணி 6 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 14 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. 2 ஆட்டங்கள் டையில் முடிந்தது. இந்த சீசனில் புதிய வீரர்களுடன் களம் காண இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் புதிய சீசன் குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்திய கபடி அணி பின்னடைவை சந்தித்தது பற்றி?

    பதில்: கபடி இந்தியாவின் மிக பிரபலமான விளையாட்டாக உள்ளது. மேலும் பல நாடுகள் கபடியை ஒரு தீவிரமான விளையாட்டாக எடுத்துக் கொள்ள தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு நாடுகளில் கபடி ஒரு முக்கிய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. எனவே கபடியில் முன்பு போல் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது கடினமாகிறது. புரோ கபடியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களும் நமக்கு இணையான பலத்துடன் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    கேள்வி: கடந்த தொடர் தமிழ் தலைவாஸ் அணியினருக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இந்த தொடர் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்: கடந்த ஆண்டு எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்து இருந்தனர். ஆனால் கடினமான சூழ்நிலைகளில் அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருப்பது மிகவும் அவசியமாகும். இந்த ஆண்டு எங்கள் அணியில் மூத்த மற்றும் இளம் வீரர்கள் சரிசமமான விகிதத்தில் சேர்க்கப்பட்டு நாங்கள் ஒரு சிறந்த அணியாக வந்துள்ளோம். இந்த ஆண்டு எங்களுக்குரியது என்பதை உறுதிப்படுத்த தயாராக உள்ளோம்.

    கேள்வி: கடந்த தொடருடன் ஒப்பிடும்போது இந்த சீசனில் உங்கள் அணியில் பல புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: இந்த தொடரில் எங்கள் அணியில் பயிற்சியாளர் உட்பட பல்வேறு புதுமுகங்களை நீங்கள் பார்க்கலாம். இருப்பினும் தற்போதைய பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரனை 2014-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோதில் இருந்தே எனக்கு நன்கு தெரியும். மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்பதிலும், அவர்களை எப்போதும் முழு உத்வேகத்துடன் தயார் நிலையில் வைத்திருப்பதிலும் அவர் சிறந்த அனுபவம் கொண்டவர். அணிக்கு பல புதிய வீரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூலம் நாங்கள் புதிய யுக்திகளையும், நுட்பங்களையும் கற்றுக்கொள்கிறோம்.

    கேள்வி: இந்த ஆண்டு போட்டிக்கு எப்படி தயார் ஆகி இருக்கிறீர்கள்?

    பதில்: போட்டிக்கு மிகச்சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். சமீப காலமாக கபடியை பெருவாரியான மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்த தொடரை எங்களது திறமையை வெளிப்படுத்த மிக சிறந்த மேடையாக கருதுவதுடன், பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க ஆர்வமாக உள்ளோம்.

    கேள்வி: புரோ கபடி லீக் இந்திய கபடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

    பதில்: நாங்கள் முன்பு சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. புரோ கபடி வருகையால் இந்திய கபடி விளையாட்டுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்துள்ளது. தற்போது அணியின் வீரர்கள் பலரும் உள்ளூர் மக்களுக்கு மிகுந்த பரிச்சயமானவர்களாகவும், நெருக்கமானவர்களாகவும் உள்ளனர். இது எங்களை மேலும் நன்றாக செயல்பட தூண்டுகிறது. அத்துடன் இது எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் உதவுகிறது. புரோ கபடி அறிமுகத்துக்கு பின்னர் கபடி ஆட்டம் குறித்த மக்களின் சிந்தனை வெகுவாக மாறியுள்ளது. இந்தியா முழுவதும் எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறோம்.

    கேள்வி: தமிழ் தலைவாஸ் அணியின் இலக்கு என்ன?

    பதில்: இந்த சீசனில் எங்களது முதற்கட்ட இலக்கு ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைவது ஆகும். அந்த நிலையை எட்டிய பிறகு அடுத்த கட்டம் குறித்து திட்டமிடுவோம். கபடியை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி ஒவ்வொரு குழந்தைக்கும் கபடி விளையாட்டில் ஆர்வம் உண்டாக்க வேண்டும் என்பது தான் தமிழ் தலைவாஸ் அணியின் விருப்பமாகும். அடுத்த தலைமுறை வீரர்களால் இந்திய கபடி இன்னும் உயர்வான இடத்தை அடையும் என்று உறுதியாக நம்புகிறோம்.

    இவ்வாறு அஜய் தாகூர் கூறினார்.  #ProKabaddileague #AjayThakur
    சென்னையில் அடுத்த மாதம் தொடங்கும் புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க தேதி அக்டோபர் 7-ந் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #ProKabaddiLeague
    சென்னை:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது இந்த போட்டியின் தொடக்க தேதி அக்டோபர் 7-ந் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது.

    ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டம் கொச்சியில் டிசம்பர் 30 மற்றும் 31-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 5-ந் தேதியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போட்டியை நடத்தும் மஷால் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  #ProKabaddiLeague
    ×