search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராட்வே பஸ் நிலையம்"

    • பஸ் நிலைய பகுதி சுகாதார கேடால் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • பஸ்கள் நுழைவு பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகள் ஏராளம் உள்ளன.

    சென்னை பாரிமுனை பிராட்வே பஸ் நிலையம் பழமையான பஸ் நிலையங்களில் ஒன்று ஆகும். சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் இங்கு இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்சில் சென்று வருகிறார்கள். இதனால் பாரிமுனை பஸ் நிலையம் எப்போதும் மிக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது பெய்த பலத்த மழையால் பாரிமுனை பஸ்நிலையம் குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

    இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் தட்டு தடுமாறி செல்கின்றன. இதனால் பயணிகள் தினமும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பல்வேறு இடங்களிலிருந்து வரும் மாநகர பஸ்களும் இந்த குண்டும் குழியில் சிக்கி திணறி வருகின்றன.

    மேலும் இந்த பஸ் நிலைய பகுதி சுகாதார கேடால் துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது பெய்த மழை நீரால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் பயணிகள் பலர் முகம் சுளித்து செல்கிறார்கள்.

    பல ஆண்டுகளாக இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு எந்த வித அடிப்படை வசதியும் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை.

    பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் இல்லை. போதுமான கழிவறை வசதிகள் இல்லை. சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் சுகாதாரம் இல்லை. பஸ் நிலைய வளாக பகுதிகள் முழுவதும் குப்பை குவியல்களாக கிடக்கின்றன. இதனால் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் பஸ் நிலைய வளாகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி பழக்கடைகள், காய்கறி கடைகள் நிரம்பி உள்ளன. பஸ் நிலைய நுழைவு வாயில் முன் சிறிய அம்மன் கோவில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. பஸ்கள் நுழைவு பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகள் ஏராளம் உள்ளன. இதனால் பஸ்கள் எளிதில் பஸ் நிலையத்துக்குள் செல்ல முடியவில்லை.

    மேலும் பொதுமக்கள், பயணிகள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதற்கு பார்க்கிங் வசதி எதுவும் இல்லை.

    எனவே பயணிகளின் நலன் கருதி உடனடியாக பிராட்வே பஸ் நிலையத்தில் உள்ள குண்டும் குழிகளை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பயணிகள், மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பஸ் பயணி ஈஸ்வரியம்மாள்:-

    திருவான்மியூரில் நான் நீண்ட காலமாக பூ வியாபாரம் செய்து வருகிறேன்.

    வியாபாரத்திற்கு பூ வாங்குவதற்காக பல வருடங்களாக பாரிசில் தான் பூ வாங்கி செல்வேன். பெரும்பாலும் பாரிஸ் பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் எப்போதும் நெரிசலாகதான் காணப்படும்.

    மழை காலங்களில் நடப்பதற்கும் அறுவறுப்பாகவே இருக்கும். பொது மக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் இங்குதான் பெரும்பாலும் பஸ் ஏறுவார்கள். இப்படி பலர் பயன்படுத்தும் இந்த பஸ் நிலையம் சுகாதார மற்ற நிலையிலும் ஆக்கிரமிப்பு கடைகளுமாகவே காட்சியளிக்கிறது. இங்கு உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளையும் ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் பொதுமக்களுக்கு இடையூறு எதுவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

    பஸ் பயணி மோகன் கூறியதாவது:-

    சென்னையில் மிக முக்கிய பஸ் நிலைய மாக திகழ்ந்து வரும் பிராட்வே பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பயணிகள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படுகிறார்கள். அசுத்தம் நிறைந்து காணப்படும். பாரிமுனை பஸ் நிலையத்தை புதுப்பித்து சீரமைக்க வேண்டும். பஸ்நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும். நவீன முறையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பஸ் நிலையத்தில் கழிவறைகள் சுகாதாரமாக பேண வேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×