search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலைத்துறையினர்"

    • ஈரோடு முதல் பழனி வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும்.
    • சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் வழியாக பழைய கோட்டை முதல் தாராபுரம் வரை செல்லும் ஈரோடு பழனி சாலை அகலப்படுத்தும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 50 ஆண்டுகள் கடந்த வேம்பு, புளி, வாகை, புங்கன், நொச்சி, வெள்ளவேல மரங்கள் பலவும் வெட்டி அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

    ஈரோடு முதல் பழனி வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும். ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முக்கிய வீடாக பழனி விளங்குகிறது‌. வட மாவட்டங்களில் இருந்து பழனிக்கு பாத யாத்திரையாக வரும் லட்சக்கணக்கான முருகபக்தர்கள் பயன்படுத்தும் சாலையாகவும், ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்குச் செல்ல பயன்படுத்தும் முக்கிய சாலையாக இது அமைந்துள்ளது.

    மேலும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியம், எண்ணெய் வித்து பொருட்களை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல இரு தேசிய நெடுஞ் சாலைகளை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை யாக இது உள்ளது.

    ஈரோடு முதல் 112 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தும் பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் சாலையை அகலப்படுத்த அருகில் இருந்த 50 ஆண்டுகள் கடந்த பழமையான மரங்களை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனை அடுத்து வேப்பமரம்,புளிய மரம் என பல நூறு மரங்கள் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெட்டப்பட்ட மரங்களை ஈடு செய்யும் வகையில்,காங்கயம் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், விரிவாக்கம் செய்த சாலை ஓரத்தில் புதிதாக வேம்பு புங்கன், நாவல், வாகை,புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைத்து மரக் கன்றுகளை பராமரித்து வருகின்றனர்.

    மழை காலம் இல்லாத சமயங்களில் சாலைப்பணியாளர்கள் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி கண்காணித்தும் வருவதால்,ஒரு சிலவற்றை தவிர மற்ற மரங்கள் நன்கு துளிர்த்து வளர்ந்து உள்ளது.வெட்டபட்ட மரங்களுக்கு பதில் உடனடியாக மரக்கன்று வைத்து பராமரித்து வரும் நெடுஞ்சாலைத் துறையின் செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    ×