search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தை மாதம்"

    • புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
    • பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.

    வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.

    • கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது.
    • காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் என்றாலே பட்டுச்சேலை தான் நினைவுக்கு வரும். சுபகாரியங்களுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் காஞ்சிபுரத்திற்கு வந்து செல்வார்கள்.

    கடந்த மாதம் சுபமுகூர்த்த தினங்கள் இல்லை என்பதால் காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை குறைந்து இருந்தது. கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததை தொடர்ந்து சுப மூகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு பட்டுச்சேலை எடுக்க காஞ்சிபுரத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    வெளியூர்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்து வருவதால் பட்டுச்சேலை விற்பனை கடைகள் அதிகம் உள்ள காஞ்சிபுரம் காந்திரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    அனைத்து கடைகளிலும் விற்பனை களை கட்டுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் தற்போது தினமும் பல லட்சம் ரூபாய்க்கு பட்டுச்சேலை விற்பனை ஜோராக நடக்கிறது.

    இதற்கிடையே பட்டுச்சேலை கடைகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்த உரிய பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம், காந்திரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்த உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் காஞ்சிபுரம் நகர மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:-

    கடந்த மாதம் மார்கழி என்பதால் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது. தற்போது தை மாதம் தொடங்கி உள்ள நிலையில் பட்டு சேலைகள் அமோகமாக விற்பனையாகும். தை மாதம் மட்டும் அறிஞர் அண்ணா பட்டுக்கூட்டுறவு சொசைட்டியில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு சேலைகள் விற்பனையாகும். முகூர்த்த புடவைகளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அவர்கள் வசதிக்கு ஏற்றார் போல் வாங்கி செல்கின்றனர். அதிக அளவில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலான முகூர்த்த புடவைகள் விற்பனையாகின்றன.

    காஞ்சிபுரத்தில் சுமார் ரூ.100 கோடி வரை பட்டுச்சேலைகள் இந்த தை மாதம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    பட்டுச்சேலைகளுக்கு காந்தி ரோட்டில் அதிக அளவில் அரசு சொசைட்டிகள் மற்றும் தனியார் கடைகள் உள்ளன. முக்கிய முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் சேலை வாங்க கார்கள் மற்றும் வாகனங்களில் வருவதால் காந்தி ரோடு பகுதியில் மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×