search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீமிதி உற்சவம்"

    • சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரியம்மன் கோவில்.
    • தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் ஏகவுரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை–யொட்டி நாளை 12-ந்தேதி பால்குடம், காவடி தீமிதி உற்சவம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர் என்ற நகரம் தோன்றுவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரியம்மன் கோவில்.

    சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகவரியம்மன். தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    திருமணத் தடை உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு மஞ்சளை (குளியல் மஞ்சள்) வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, ஐதீகம்.

    இதனால் கன்னிப் பெண்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கே எலுமிச்சைப் பழத்தை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூஜை செய்து, அதன் சாறை கோவிலிலேயே சாப்பிட்டுச் செல்ல, விரைவில் குழந்தைப் பிறப்பது உறுதி என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அதுபோல பலனடைந்த பெண்கள் தங்களது குழந்தைக்கு இக்கோயிலில் மொட்டை அடித்து, மாவிளக்கு மாவு படைத்து நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.

    தீராத நோய் அல்லது திடீர் விபத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகி விட்ட கணவருக்காக வேண்டிக் கொண்டு வரும் பெண்கள் அதிகம். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பெண்கள், தங்களது கணவரை எமனிட–மிருந்து காக்க வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக் கடனாக எருமைக் கன்றை காணிக்கைச் செலுத்தி வழிபடுகின்றனர்.

    மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் அம்மனுக்குச் சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது இந்தக் கோயிலின் இன்னுமொரு சிறப்பம்சம்.

    இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர். கருவறையில் ஏகவரி அம்மனைச் சுற்றியபடி இரு நாகங்கள் இருப்பதைக் காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனைத் தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தஞ்சாவூரிலிருந்து திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவிலுள்ள வல்லம் என்ற பேரூரிலிருந்து, வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை 12-ந்தேதி கடைசி ஆடி வெள்ளிக்கிழமை திருவிழாவையொட்டி காவடி, பால்குடம், தீமியுடன் விமர்சையாக நடைபெற உள்ளது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×