search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ப்பை"

    • கறுப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு மனத்திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகமாகும்.
    • தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதாதேவி எடுத்து செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பித்ருக்கள் வழிபாட்டில் முக்கியப்பங்கு வகிப்பது கறுப்பு எள்ளும், புனிதம் நிறைந்த தர்ப்பை புல்லும்தான்.

    இந்த இரண்டுமே மிக, மிக உயர்ந்த சக்தி கொண்டது.

    எள் என்பது மகா விஷ்ணுவின் மேனி வியர்வையில் இருந்து தோன்றியதாகும். தர்ப்பணம், சிராத்தம் செய்யும்போது கறுப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு மனத்திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகமாகும்.

    தர்ப்பைப்புல் ஆகாயத்தில் இருந்து தோன்றிய தாவரமாகும். இதன் சக்தியையும் சிறப்பையும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் மேலை நாட்டவர்கள் உணர்ந்தனர். ஆனால் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தர்ப்பைப்புல்லுக்கு, பூஜைகளில் முதன்மை இடம் கொடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    தர்ப்பைப்புல்லின் இரு பக்கங்களில் பிரம்மன், சிவன் நடுவில் விஷ்ணு உள்ளனர். இதனால் தர்ப்பைப்புல்லுக்கு மந்திர சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை அதிகமாகும்.

    இந்த தர்ப்பையை மிகவும் சாதாரணமாக அது வெறும் புல்தானே என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த புல் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தைப்பாருங்கள்.

    உங்களாலோ அல்லது உங்கள் முன்னோர்களாலோ கர்ம வினைகள் ஏற்பட்டுஇருக்கலாம். இந்த கர்ம வினை உங்களை பாதிக்காத வகையில் தடுக்கும் ஆற்றல் தர்ப்பைப்புல்லுக்கு உண்டு. அது மட்டுமல்ல உங்கள் மனதை அலைக்கழிக்கும் தீய எண்ணங்களை வர விடாமல் தடுக்கும் சக்தியும் தர்ப்பைக்கு இருக்கிறது.

    நாம் பித்ருக்களுக்கு தர்ப்பணம், பூஜைகள் செய்யும்போது நம் கண்களுக்குத்தெரியாத ஒளி வடிவில் வரும் நம் மூதாதையர்கள் நம் முன்பு வைக்கப்பட்டிருக்கும் தர்ப்பை புல்கள் மீதுதான் அமர்வார்களாம். எனவேதான் தர்ப்பை புல்லை தொடும்போது மட்டும் மனசீகமாக நம் முன்னோர்களை வணங்கிவிட்டே தொட வேண்டும் என்கிறார்கள்.

    அது மட்டுமல்ல பித்ருக்களுக்கு நாம் கொடுக்கும் நீர், தர்ப்பணங்கள் அவர்களுக்கு நேரடியாக சென்று சேரவும் தர்ப்பைப்புல்லே உதவியாக உள்ளது. தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதாதேவி எடுத்து செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    மிகவும் பரிசுத்தமான தர்ப்பைப்புல்லுக்கு கிரகணகதிர் வீச்சுகளை தடுக்கும் மாபெரும் சக்தியும் இருக்கிறது. எனவே கிரகண காலங்களில் தண்ணீர், பால், நெய், போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை நம் முன்னோர்கள் போட்டு வைத்ததை நீங்கள் பார்த்திருக்கலாம்.

    சிலர் ஒரு தடவை பயன்படுத்திய தர்ப்பைப்புல்லை மீண்டும் பயன்படுத்தலாமா என்று சந்தேகப்படுவதுண்டு. தர்ப்பையை மீண்டும், மீண்டும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏனெனில் தர்ப்பைக்கு எந்தவித தோஷமும் கிடையாது.

    கருட புராணத்தில் இது பற்றி விளக்கம் அளித்த மகா விஷ்ணு, தர்ப்பையை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

    தர்ப்பைக்கு சூசைபுல் என்றொரு பெயரும் உண்டு. ஒருவர் மரணம் அடையும் தருவாயில் கையில் தர்ப்பைப்புல் வைத்திருந்தால் உன்னத நிலையை அடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த அளவுக்கு தர்ப்பைப்புல் உயர்வானது.

    எனவே இனி பித்ருக்களுக்கு பூஜை, தர்ப்பணம் செய்யும்போது தர்ப்பைப்புல்லிடம் மட்டும் சற்று பயபக்தியுடன் இருங்கள்.

    ×