search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாரிப்பு பணிகளை"

    • வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    • இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையின் போது ஏழை எளியோருக்கு வழங்க அரசு சார்பில் இலவச சேலை -வேட்டி தயாரிக்கப்படுகிறது.

    மொத்தம் 1.68 கோடி வேட்டி, 1.68 கோடி சேலை தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் 228 விசைத்தறி சங்கங்களில் 60 ஆயிரம் விசைத்தறிகளில் நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் தங்கவேல் கூறியதாவது:

    இலவச வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. தற்போதைய நிலையில் 30 லட்சம் வேட்டிகள், 65 லட்சம் சேலைகள் மட்டும் தயாரிக்க வேண்டியுள்ளது.

    இந்த பணிகளும் 15 நாட்களுக்குள் முடிந்து விடும். இதன் பிறகு விசைத்தறிகளுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும்.

    எனவே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை தயாரிப்பு பணியை முன்னதாகவே திட்டமிட்டு வழங்க வேண்டும். 96 லட்சம் மீட்டர் கேஸ்மெட் துணிகள் மட்டுமே விசைத்தறிக்கு வழங்கப்படும். மீதி 3 கோடி மீட்டர் துணி தானியங்கி தறிகளுக்கு வழங்கப்படுகிறது.

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான நீல நிற துணிகள் வெளியே ஆர்டர் போட்டு அரசு வாங்குகிறது. இது போன்றவற்றை விசைத்தறிகளுக்கே வழங்கினால் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×