search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி போலீஸ்"

    • டெல்லியில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதியை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
    • குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சிக்கியதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் மட்டூ. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ள அவர் காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளார். அவரை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஜாவித் மட்டூ பதுங்கி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்நிலையில், டெல்லியில் பதுங்கி இருந்த ஜாவித் மட்டூவை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில், அவர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி என்பதும் தெரிய வந்தது.

    குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சிக்கியதால் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • போலீஸ்காரர் கொரியா வாலிபரிடம் அபராத தொகை ரூ.5 ஆயிரத்தை கட்டுமாறு கூறியுள்ளார்.
    • உரிய ரசீது இல்லாமல் அபராதம் விதித்ததற்காக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் மகேஷ்சந்த் என்ற போலீஸ்காரர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விதிமுறையை மீறி கார் ஓட்டியதாக கொரியா நாட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அபராதம் விதித்துள்ளார்.

    அப்போது அந்த போலீஸ்காரர் கொரியா வாலிபரிடம் அபராத தொகை ரூ.5 ஆயிரத்தை கட்டுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர் ரூ.500 வழங்குவது போன்று வீடியோ காட்சி சமூக வலைத்தளங்ளில் வெளியானது. இதைத்தொடர்ந்து உரிய ரசீது இல்லாமல் அபராதம் விதித்ததற்காக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • வீடியோ வெளியிட்டு டெல்லி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார்.

    பைக்கில் சாகசம் செய்வது இளைஞர்களுக்கு பிடித்த விஷயமாகி போனாலும், சில நேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்துவிடும். எனவே தான் போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில், ஒரு காதல் ஜோடி பைக்கில் சாகசம் செய்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. பைக்கில் வேகமாக செல்லும் இளைஞரை பின்னால் இருக்கும் அவரது காதலி கட்டிப்பிடித்து கொண்டிருக்கிறார். அப்போது வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த காட்சிகள் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை வைத்து போலீசார் அந்த ஜோடியை அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் மூலமாகவே விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டனர். அதில், நாங்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்துக்கு உள்ளானோம். எனவே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

    புதுடெல்லி :

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் அவர்களைத் தடுத்து, சமாதானப்படுத்தினார். அதையடுத்து வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்வதற்கு அவருக்கு எதிராக போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை டெல்லி போலீஸ் கூறியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளில் போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை என போலீஸ் கூறியதாக சில டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலீஸ் அவ்வாறு தெரிவித்ததாக வெளியான செய்தி தவறு. உணர்வுபூர்மான இந்த வழக்கில், மிகுந்த உணர்வோடு விசாரணை நடைபெற்றுவருகிறது' என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், 'டெல்லி போலீஸ் தனது விசாரணையை முடிக்கும்வரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் காத்திருக்க வேண்டும். மல்யுத்தத்தையும், மல்யுத்த வீரர்களாக விரும்புவோரையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 'நாங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆதரவாகத்தான் உள்ளோம்' என்றும் அவர் கூறியுள்ளார்.

    • ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்து, சாலையில் வந்துகொண்டிருந்த பைக்கை நிறுத்தி ஏற முயற்சி செய்தார்.
    • கான்ஸ்டபிள் மனோஜ் பாய்ந்து சென்று அந்த நபரை பிடித்து தரையில் தள்ளினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் சினிமா பாணியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், துப்பாக்கியுடன் மிரட்டிய குற்றவாளியை தைரியமாக எதிர்கொண்டு மடக்கிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    டெல்லி நிலோதி பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தலைமைக் காவலர்கள் மனோஜ், தேவேந்தர் ஆகியோர் நேற்று இரவு நிலோதி பகுதியில் உள்ள மச்சி சவுக் அருகே ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்து, சாலையில் வந்துகொண்டிருந்த பைக்கை நிறுத்தி ஏற முயற்சி செய்தார். இதைக் கண்ட போலீசார் அந்த நபர்களை பிடிக்க முயன்றனர்.

    பைக்கில் வந்த நபர் தப்பிச் செல்ல, துப்பாக்கி வைத்திருந்த நபர், கான்ஸ்டபிள் மனோஜை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினான். ஆனால் கான்ஸ்டபிள் மனோஜ் ஒரு செங்கல்லை எடுத்து வீசி தாக்கினார். அத்துடன் பாய்ந்து சென்று அந்த நபரை பிடித்து தரையில் தள்ளினார். உடனே அருகில் இருந்தவர்களும் ஓடிவந்து அந்த நபரை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார். பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற நபரை மற்றொரு கான்ஸ்டபிள் தேவேந்தர் பிடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • காஷ்மீரில் பேசிய ராகுல் காந்தி பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்றார்.
    • இதுகுறித்து டெல்லி போலீசார் ராகுல் காந்திக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் வாக்குமூலம் குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு டெல்லி போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

    மேலும், பாதிக்கப்பட்டதாக கூறி உங்களைச் சந்தித்த பெண்கள் குறித்த விவரங்களைக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என போலீசார் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.

    • பெண் உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் மிருகத்தனமானது என விஜய் வசந்த் எம்.பி. கூறி உள்ளார்.
    • ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை கொடுமைப்படுத்துவதாக புகார்

    புதுடெல்லி:

    நேசனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் அத்துமீறலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்து புகார் கூறினர்.

    இது தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:-

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அக்கிரமத்தை கட்டவிழ்த்து விட்ட டெல்லி போலீஸ் மீது புகார் தெரிவித்து மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம்.

    குறிப்பாக பெண் உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் மிருகத்தனமானது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினரான தலைவர் ராகுல் காந்தி அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தொடர்ந்து மூன்று நாட்களாக விசாரணைக்கு அழைத்து கொடுமைப்படுத்தும் அமலாக்கப்பிரிவு துறைக்கு எதிராகவும் புகார் தெரிவித்தோம். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுதரி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×