search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீசன் தொடக்கம்"

    • ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின.
    • வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    குளச்சல்:

    குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.

    இதில் சாளை, நெத்திலி, வௌ மீன்கள் பிடிக்கப்படுகிறது. கடலில் தொடர் சூறாவளிக்காற்று எச்சரிக்கை காரணமாக கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய பின்பு சீராக மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தற்போது குளச்சலில் மீன் பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றுள்ளன.

    இதனால் கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குளச்சல் கடல் பகுதியில் கேரை மீன்கள் சீசனாகும். ஆனால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகளில் கேரை மீன்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கட்டுமரங்களில் பிடிக்கப்படும் சாளை, நெத்திலி போன்ற மீன்களும் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.

    இந்நிலையில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. இவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. ஓரளவு செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைத்தன. இவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட்டனர். ஒரு கிலோ கிளி மீன் தலா ரூ.180 வரை விலைபோனது. இதனை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    கிளி மீன் சீசன் தென்பட்டுள்ளது ஆறுதலாக உள்ளது. தொடர்ந்து கிடைக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும் என மீனவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் சில கேரை மீன்களும், ஒரு சில சுறா மீன், 2 திருக்கை மீன்களும் கிடைத்தன. இதனால் மீனவர்கள் ஆறுதல் அடைந்தனர்.

    • 2-ம் சீசனின் போது குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.
    • சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    ஊட்டியில் ஆண்டுதோறும் 2-ம் கட்ட சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நடக்கும்.

    2-ம் சீசனின் போது வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    முதல் சீசனின்போது, 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் தொட்டிகள் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். 2-ம் சீசனின் போது குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.

    இந்த முறை 21 ஆயிரத்து 500 தொட்டிகளில் டேலியா, சால்வியா, இன்காமேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், ஜெரேனியம், டெல்பினியம், கொச்சியா, ஆந்தூரியம் போன்ற 70 வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர பல்வேறு அலங்கார செடிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் தொட்டிகள் மாடங்களில் அடுக்கி வைக்கப்படும்.

    பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இந்த முறை கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் மலர் பூப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக மாடத்தில் தொட்டிகள் அடுக்கும் பணிகள் கடந்த ஒருவாரமாக மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு ரசிப்பதற்காக திறந்து வைக்கப்பட்டது.

    இதனை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கலெக்டர் அருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டு மலர்களை கண்டு ரசித்தும், மலர் அலங்காரங்களையும் பார்வையிட்டனர்.

    குறிப்பாக பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சந்திரயான்-3 விண்கலம் மற்றும் மறுசுழற்சி ஸ்மைலி போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுத்தது.

    சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப் படமும் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தற்போது ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் இதமாக காணப்படுகிறது. இதனை ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணி கள் மிகவும் அனுபவித்து ரசித்து வருகின்றனர்.

    ×