search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்புப் பேட்டி"

    • சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.
    • மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மாலைமலருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-பாராளுமன்ற தேர்தல் களம் எப்படி உள்ளது?

    பதில்:-தேர்தல் களம் எங்களுக்கு என்றும் புதிது இல்லை. 19 ஆண்டுகளாக பார்க்கும் அதே தேர்தல் களம்தான். தேர்தல் என்றாலே போர்தான். போர் களத்தில் போர் வீரர்கள் எப்படி சண்டை போடு வார்களோ அப்படித்தான் இருக்கும். தேர்தலில் பண பலம், அதிகார பலம் ஆகியவற்றோடுதான் வருவார்கள். அதையெல்லாம் சந்திக்க வேண்டியது தான்.

    மக்களிடம் இன்று மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று வாக்குறுதிகளை சொல்லி வருகிறோம். அடுத்தவர்களை குறை சொல்லி பேசாமல் தொகுதிக்கு நல்லது செய்வது பற்றியே மக்களிடம் பேசி வருகிறோம்.

    தேர்தல் களம் நிச்சயமாக நன்றாக உள்ளது. நாளை நமதே... 40-ம் நமதே.. எங்களது வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. தொண்டர்கள் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். அதனால் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

    கேள்வி:-தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு எதிர்கால திட்டங்கள் என்ன வைத்துள்ளீர்கள்?

    பதில்:-தே.மு.தி.க.வில் உள்கட்சி தேர்தலை ஏற்கனவே நடத்தி முடித்துவிட்டோம். கேப்டன் மறைந்து 100 நாள்தான் ஆகிறது. அந்த சோகத்தில் இருந்து இன்னும் நாங்கள் வெளியே வரவில்லை. தேர்தல் என்கிற மிகப்பெரிய சவால் எங்கள் முன்பு இருப்பதால் அதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேர்தல் பணிகள் முடிந்து முடிவுகள் வந்த பின்னர் கட்சியை மேலும் வலுப்படுத்த உள்ளோம்.

    கேப்டன் எப்படி மிகப்பெரிய வலிமையோடு கட்சியை நடத்தினாரோ, அதே போல மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து மக்களுக்காக உழைப்போம்.

    கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் சேர்ந்திருந்தால் மேலும் வலுவாக இருந்திருக்கும் என்கிற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் இருந்தோம். நீங்கள் குறிப்பிடும் கட்சியும் அப்போது கூட்டணியில் இருந்தது. ஆனால் பெரிய வெற்றி எதையும் பெற முடியவில்லையே.

    இந்த முறை எங்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவருமே அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றே கூறினார்கள். அதுவே அவர்களது முடிவாகவும் இருந்தது. அந்த வகையிலேயே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்கிற நிலைப்பாட்டை எடுத்தோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு உரிய மரியாதையை அளித்தார்.

    ஆரம்பத்திலேயே எங்களை அணுகி பேசியதால் அ.தி.மு.க. கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது. இது மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது. தொண்டர்கள் விரும்பும் கூட்டணியாகவும் எங்கள் கூட்டணியை பார்க்கிறேன். அதனால் பெரிய வெற்றி எதிர் பார்க்கிறோம்.

    கேள்வி:-அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-அ.தி.மு.க.வில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இறந்த போது ஒரு பிளவு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் பிளவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இது ஒன்றும் புதிது அல்ல. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதில் அளித்தால்தான் சரியாக இருக்கும்.

    அதே நேரத்தில் அது உள்கட்சி பிரச்சினை. சேருவதும், சேராததும் அவர்களது விருப்பம். எப்போதும் ஒன்றாக இருந்தால் அது நல்லது தானே? அதில் மாற்று கருத்து இல்லையே. இந்த விஷயத்தில் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    கேள்வி:-கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அணுகுமுறை எப்படி உள்ளது?

    பதில்:-மிக மிக சிறப்பாக உள்ளது. அதனை எல்லா கூட்டங்களிலுமே நீங்கள் பார்க்கலாம். எல்லா பிரசாரத்திலும் நான் சொல்லி வருகிறேன். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மிக மிக மரியாதையோடு கூட்டணியை வழி நடத்துகிறார். எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவார். அன்பாக கனிவாக பேசுவது, வழி நடத்துவது எல்லாமே மிக மிக அபாரமாக உள்ளது. பாராட்டுதலுக்குரிய எதிர்க்கட்சி தலைவராகவே எடப்பாடி பழனிசாமியை நான் பார்க்கிறேன்.

    கேள்வி:-விஜய பிரபாகரன் தேர்தல் களத்தில் புதிதாக இறங்கியுள்ளார். எதிர் காலத்தில் கட்சியில் அவரது பங்கு என்னவாக இருக்கும்?

    பதில்:-தேர்தல் களத்துக்குத்தான் விஜயபிரபாகரன் புதியவர். ஆனால் பிறந்ததில் இருந்தே அப்பாவையே பார்த்து வளர்ந்தவர் அவர். எனவே அவருக்கு எதுவும் புதிது அல்ல. அப்பாவோடும் என்னோடும் தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ளார். கட்சிக்குள் நடக்கும் அனைத்து விழாக்களிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதுவரை கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமலேயே உள்ளது. ஆனால் கட்சியில் அனைவரும் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக தேர்தல் வந்ததால் சவாலுடன் எதிர்கொண்டுள்ளோம். அனைவரும் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே எங்களது பூர்வீக தொகுதியான விருதுநகர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

    எங்களது மாமனார், மாமியர் பிறந்த ஊர் அங்குதான் உள்ளது. எங்கள் குல தெய்வமும் அங்கேதான் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில்தான் எங்கள் திருமணம் நடந்தது. இப்படி எங்கள் வாழ்க்கையே விருதுநகரில்தான் தொடங்கியுள்ளது. எனவே விஜய பிரபாகரன் அங்கு நிற்க வேண்டும் என்று விருதுநகர் தொகுதி மக்களும் விரும்பினார்கள். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் விரும்பினார்கள். இப்படி அனைவரின் விருப்பத்துக்கும் இணங்கவே விருதுநகரில் அவர் போட்டியிடுகிறார்.

    தொகுதி மக்கள் விஜயபிரபாகரனை தங்களது செல்லப்பிள்ளையாகவே பார்க்கிறார்கள். தேர்தல் முடிநதவுடன் விஜய பிரபாகரனுக்கு வழங்கப்பட வேண்டிய பொறுப்பு பற்றி முடிவெடுத்து அறிவிக்க உள்ளோம்.

    கேள்வி:-விஜயகாந்த் மறைவில் இருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள்?

    பதில்:-கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவில் இருந்து இன்னமும் மீண்டு வர முடியாமலேயே உள்ளோம். 3 மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமலேயே இருந்தேன். அலுவல கம், வீட்டை தாண்டி எங்கேயும் போகவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீங்களும் பிரசாரத்துக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கூட்டணி தர்மத்தை மதித்து பிரசாரம் செய்து வருகிறேன். கேப்டன் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். கட்சியை எதிர்காலத்தில் நன்றாக வழிநடத்தி அவர் கண்ட கனவை எட்டுவதற்கு உழைப்போம்.

    எப்போதும் மக்களை பற்றியே சிந்தித்து வந்த அவர் முதல்-அமைச்சராகி நலத்திட்டங்களை செய்ய விரும்பினார். ஆனால் சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.

    விஜயகாந்தை முதல்-அமைச்சராக்காமல் விட்டுவிட்டோமே என்று மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.

    இவ்வாறு பிரேமலதா கூறினார்.

    ×