search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரிசெய்யும் வழிகள்"

    • சிறிதளவு சின்ன வெங்காயத்தை எண்ணெய்யில் வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.
    • சவ்சவ் காயில் இருக்கும் நீர்ச்சத்து காரம் மற்றும் உப்பை சமநிலைப்படுத்தும்.

    காரக்குழம்பு தயாரிக்கும்போது காரம் அல்லது உப்பு சுவை அதிகமாகிவிட்டால், சிறிதளவு சின்ன வெங்காயத்தை எண்ணெய்யில் வதக்கி குழம்பில் சேர்க்கலாம். தயிர் அல்லது தேங்காய்ப் பாலை குழம்பில் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்தாலும் காரம் கட்டுப்படும்.

    உருளைக்கிழங்கு அல்லது சவ்சவ் காயை பெரிய துண்டுகளாக வெட்டி குழம்பில் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். உருளைக்கிழங்கு குழம்பில் உள்ள காரத்தையும், உப்பையும் உறிஞ்சிக்கொள்ளும். சவ்சவ் காயில் இருக்கும் நீர்ச்சத்து குழம்புடன் கலந்து காரம் மற்றும் உப்பை சமநிலைப்படுத்தும்.

    சாதம் வடிக்கும்போது உப்பு கூடினால், எலுமிச்சம் பழச்சாறு அல்லது ஆப்பிள் சிடர் வினிகரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பிரியாணியில் உப்பு அல்லது காரம் கூடினால், வெங்காயத்தை பொடிதாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்து சேர்க்கவும். இது பிரியாணியில் உள்ள உப்பை கட்டுப்படுத்தும். காரத்தைக் குறைக்க உலர்ந்த திராட்சையை நெய்யில் வதக்கி சேர்க்கவும். வெல்லப்பாகு, நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்தாலும் பிரியாணியில் காரத்தை கட்டுப்படுத்த முடியும்.

    ரசத்தில் பளிப்பு கூடினால், ஒரு கடாயில் சீரகம், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு தாளித்து அதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். இதை தயார் செய்து வைத்திருக்கும் ரசத்தில் ஊற்றி கலக்கவும், இப்போது ரசத்தில் உள்ள புளிப்புச் சுவை குறையும்.

    சட்னியில் காரம் அதிகமாக இருந்தால் கேரட், தக்காளி, பீட்ரூட் அல்லது சவ்சவ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு காயை நன்றாக அரைத்து. எண்ணெய்யில் வதக்கி சேர்க்கவும். தேங்காய் சட்னியில் காரம் அல்லது உப்பு அதிகமானால், பொட்டுக்கடலை மாவை சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.

    ஜூஸ் தயாரிக்கும்போது ஐஸ்கட்டியின் அளவு கூடினால், சுவை குறையும். அத்தகைய சமயத்தில் அதில் சிறிதளவு சிட்ரஸ் பழச்சாறு, சப்ஜா விதைகள், வெள்ளரி விதை அல்லது இளநீர் ஆகியவற்றை சேர்க்கலாம்.

    அசைவ சமையலில், இறைச்சி அதிகமாக வெந்து விட்டால், ஆலிவ் எண்ணெய், இனிப்பு மற்றும் காரம் கலந்த சாஸ் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறலாம். உணவை எப்போதும் மிதமான சூட்டில் வைத்திருந்தால் இறைச்சி மென்மையாகவே இருக்கும். அசைவ உணவுகளை சமைத்த உடனே ஹாட் பேக்கில் போட்டு வைக்கலாம். இறைச்சியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    ஊத்தப்பம் தயாரிக்கும்போது சுற்றிலும் எண்ணெய் ஊற்றியதும் உடனே ஒரு முடிபோட்டு மூடவும், சில வினாடிகளுக்குப் பின்னர் முடியை எடுத்து பார்த்தால் இரண்டு புறமும் சீராக வெந்திருப்பதோடு. ஊத்தப்பம் மிருதுவாகவும் இருக்கும்.

    ×