search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையலறை"

    • இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன.
    • சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.

    இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கெடுத்து செய்வதோடு வேலைகளை எளிதாக முடிக்க விருப்பப்படுகிறார்கள். இவர்களுக்காகவே இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன என்றால் சற்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா. என்னதான் சமையல் வேலைகளில் ஆண்கள் பங்கெடுத்தாலும் மாவு அரைப்பது, சப்பாத்தி போடுவது போன்ற வேலைகளை செய்யத் தயங்குவார்கள். அதுபோன்ற வேலைகளையும் எளிதாக செய்வதற்கென்றே புதுமையான உபகரணங்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன…

    * இப்பொழுது வந்திருக்கும் மாவு அரைக்கும் கிரைண்டர்கள் இடத்தையும், நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் விதத்தில் இருக்கின்றன என்றால் நம்ப முடிகின்றதா. ஆமாம்., இந்த புதுமையான கிரைண்டர்கள் இடத்தை அடைக்காதவாறு மிகச் சிறிய இடத்திலும் வைத்துக் கொள்வது போல் மோட்டருக்கு மேலேயே மாவரைக்கும் பாத்திரமானது இருப்பது போல் வடிவமைத்திருக்கிறார்கள்.. இதில் அரிசி மற்றும் உளுந்தைப் போட்டுவிட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடியை போட்டு மூடி கிரைண்டரை இயக்க வேண்டும்.. இடையில் தண்ணீர் தேவைப்பட்டால் மூடியின் மேற்புறத்தில் இருக்கும் சிறிய துளை வழியே தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். அதேபோல் மாவு அரைத்து முடித்தபிறகு நாம் கைகளால் மாவை அள்ள வேண்டிய அவசியமே இல்லை..

    இந்த கிரைண்டரில் மாவரைக்கும் பாத்திரம் சுற்றாமல் அதன் உள்ளிருக்கும் கற்கள் மட்டும் சுற்றுவதுபோல் வடிவமைத்திருக்கிறார்கள்..இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அரைக்கும் மாவானது சூடாவது தவிர்க்கப்படுகின்றது..இதனால் இட்லி கூடுதல் மிருதுவாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகின்றது..மாவரைக்கும் பாத்திரத்திலேயே கீழ்ப்புறத்தில் மாவு வெளியேறுவதற்காக ஒரு துளையானது கொடுக்கப்பட்டுள்ளது.. மாவு அரைத்து முடித்தபிறகு அந்த துளையின் மூடியை அகற்றி பாத்திரத்தில் இருக்கும் மாவை கைகளில் தொடாமலேயே மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிவிட முடியும்.. அதேபோல் அந்த மாவு பாத்திரத்தை கழுவுவதற்கும் மேற்புறத்தில் தண்ணீரை ஊற்றி கிரைண்டரை இயக்கினால் அது நன்றாக சுத்தமாகி அந்த தண்ணீரும் துளை வழியாக வெளியேறிவிடும். சாதாரண கிரைண்டர்கள் இயங்கும் அந்த நேரத்திலேயே மிகவும் அருமையாக மாவை அரைத்துத் தரும் இந்த புதுமையான கிரைண்டரை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.ஆண்கள்,உடல்நிலை முடியாதவர்கள் மட்டுமல்லாது வயதானவர்களும் இந்த கிரைண்டரை எளிதாக உபயோகிக்கலாம்..

    *சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.இந்த குக்கர் மூடியில் மேற்புறத்தில் தண்ணீர் குழாய் போன்று கொடுக்கப்பட்டுள்ளது. மூடியின் உட்புறம் நீளமான ஸ்ட்ரா போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.இதன் வழியாக சாதத்தில் இருக்கும் கஞ்சி மூடியின் வெளிப்புறம் கொடுக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக வெளியேறிவிடும். இந்தக் குழாயின் மேற்புறத்தில் ஒரு சிறிய திருகு மூடி ஒன்று இருக்கின்றது. இந்த திருமுடியை திறப்பதன் மூலம் சாதத்தில் இருக்கும் கஞ்சி வெளியேற்றப்படுகிறது.. நம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் இந்த குக்கர்களை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள்..

    *வீட்டிலேயே நம் வசதிக்கேற்ப எண்ணையை அரைத்துக் கொடுக்கும் இயந்திரங்களும் மிகவும் கச்சிதமான அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அரைக்கிலோ வேர்க்கடலையைக் கூட இந்த இயந்திரத்தில் போட்டு சுத்தமான எண்ணெயை எடுக்க முடியும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.. இந்த எண்ணெய் இயந்திரத்தின் மேற்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் அரைக்க வேண்டிய எள், வேர்க்கடலை,தேங்காய்,பாதாம், சூரியகாந்தி விதை என எவற்றை வேண்டுமானாலும் ஒருமுறை அரைப்பதற்கு அரை கிலோ என்ற அளவில் போடமுடியும்.இயந்திரத்தின் உள்ளே செல்லும் இவை எண்ணை தனியாகவும் சக்கை தனியாகவும் பிரித்து வெளியேற்றப்படுகின்றது.நம் கண்ணெதிரிலேயே மிகவும் சுத்தமாகவும் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியதுமான இந்த எண்ணை அரைக்கும் இயந்திரம் ஒவ்வொருவரது சமையலறையிலும் இருக்கவேண்டிய தவிர்க்கமுடியாத உபகரணம் என்று சொல்லலாம்.வாரத்திற்கு ஒரு முறை நம் வீட்டிற்குத் தேவையான எண்ணெயை நாமே அரைத்துக் கொள்ளலாம். அழகான வடிவமைப்புடன் இருக்கும் இந்த இயந்திரம் இடத்தை அடைக்காமல் இருப்பதுபோல் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    *சாதாரண டேபிள் டாப் கிரைண்டரின் வடிவத்தில் சப்பாத்தி தேய்த்துக் கொடுக்கும் இயந்திரம் விற்பனையில் உள்ளது என்றால் நம்ப முடிகின்றதா? இந்த இயந்திரத்தில் சப்பாத்தி தேய்க்கும் கல் மற்றும் பூரிக்கட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. சப்பாத்தி தேய்க்கும் கல்லின் மீது வட்ட வடிவில் உறுதியான, மெலிதான பிளாஸ்டிக் தாள்கள் இருக்கின்றன.சப்பாத்தி உருண்டையை உருட்டி இரண்டு பிளாஸ்டிக் தாள்களின் இடையில் வைத்து அதன்மீது பூரி கட்டையை பிரஸ் செய்து இந்த இயந்திரத்தை இயக்கினால் பூரி கட்டையில் இருக்கும் இரண்டு உருளைகளும் எதிரெதிர் திசையில் இயங்கி சப்பாத்தியை மிகவும் மெல்லியதாக திரட்டித் தருகின்றன..ஐந்து நபர்கள் வரை இருக்கும் குடும்பத்திற்கு இந்த சப்பாத்தி திரட்டும் இயந்திரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.இப்பொழுது சொல்லுங்கள் இந்த இயந்திரம் வீட்டில் இருந்தால் ஆண்களும் எளிதாக பூரி மற்றும் சப்பாத்தி செய்ய முடியும் தானே?

    *சமையலறையில் சமைக்கும் பொழுது ஃபேனை இயக்கினால் கேஸ் அடுப்பு அணைந்து விடும்.. எனவே பெரும்பாலான நேரங்களில் வேர்த்து விறுவிறுத்து தான் எந்த ஒரு வேலையையும் செய்ய முடிகின்றது. இதனால் சீக்கிரமாகவே சோர்வு ஏற்பட்டு விடுகின்றது..இதுபோன்ற சோர்வு ஏற்படாமல் புத்துணர்ச்சியுடன் சமையலறையில் இருப்பதற்காகவே பிரத்தியேகமாக ஃபேன் களை வடிவமைத்திருக்கிறார்கள்.. இந்தப் ஃபேன்களை அடுப்பின் அருகிலேயே வைத்து இயக்கினாலும் அவை அடுப்பை அணைக்காமல் அதே நேரத்தில் நமக்கும் குளுமையான காற்றை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உயரத்தை நமக்கு ஏற்றவாறு ஏற்றி இறக்கிக் கொள்ள முடியும்.சீலிங் ஃபேனிற்கு மாற்றாக வந்திருக்கும் இந்த ஃபேன்களை சமையலறையில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்

    * ஏசி பொருத்த முடியாத இடங்களிலும் வைத்துக் கொள்வது போல் போர்ட்டபிள் ஏசியை வடிவமைத்து விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த சிறிய வகை ஏசியை சமையலறை, படுக்கை அறை, அலுவலக அறை என எங்கு வேண்டுமானாலும் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நம்முடனேயே எடுத்துச் செல்ல முடியும்.சிறிய ஏர் கூலர் வடிவில் இருக்கும் இந்த போர்ட்டபிள் ஏசி அதிகப்பட்ச குளிர்ச்சியை கொடுக்கின்றது.. இந்த ஏசியின் அடிப்புறத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு வசதியாக சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    • கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.
    • காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன.

    காலாவதியான கியாஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இதில் காலாவதியான சிலிண்டர் என்பது என்னவென்றால் நமது வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.

    ஆனால் அதை மாற்றாமல் சில கியாஸ் நிறுவனங்கள் காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன. இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆபத்தை விளைவிக்கும். அதனை கண்டுபிடிப்பது ரொம்ப சுலபமானது. சிலிண்டரில் மேல் பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அது கழுத்து பகுதியாகும்.

    அதில் ஒரு கம்பியின் உள்பகுதியில் காலாவதியாகும் மாதம் ஆங்கிலத்திலும், வருடம் எண்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி. என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 'ஏ' என்றால் மார்ச் மாதம் (முதல் காலாண்டு), 'பி' என்றால் ஜூன் மாதம் (இரண்டாவது காலாண்டு), 'சி' என்றால் செப்டம்பர் மாதம் (மூன்றாவது காலாண்டு), 'டி' என்றால் டிசம்பர் மாதம் (நான்காவது காலாண்டு) ஆகும். உதாரணத்திற்கு ஏ- 16 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் மார்ச்-2016 என்பதை குறிக்கிறது. இதை வைத்து காலாவதியான சிலிண்டரை கண்டுபிடித்துவிடலாம்.

    • பழுதடைந்த மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது.
    • ஒரு சாதனம் பழுதாவதற்கு முன்பே, அதன் இயக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மின்சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாளாதபோது, ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம். அவற்றை கவனமாக பயன்படுத்துவதற்கான சில வழிமுறைகள் இதோ…

    தேவையற்ற நேரங்களில் மின்சாதனங்களை, இணைப்பில் இருந்து துண்டித்துவிட வேண்டும். இதன் மூலம் அவை அதிக வெப்பமடைந்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். மின்சாதனங்களை பயன்படுத்தும்போது மின் கசிவு ஏற்படுவதை உணர்ந்தால், உடனே மின்னியல் வல்லுனரை அணுகி சரி செய்ய வேண்டும்.

    பழுதடைந்த மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது. மின் உபகரணங்களை குறிப்பிட்ட காலவரையறையில் சர்வீஸ் செய்ய வேண்டியது முக்கியம். ஒரு சாதனம் பழுதாவதற்கு முன்பே, அதன் இயக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இதனால் சிறிய மாற்றத்தையும் கண்டுபிடித்து, ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும். புதிய உபகரணம் வாங்குவதற்கான செலவுகளையும் குறைக்க முடியும். மின்சாதனப் பொருட்களை வாங்கும்போது, அதில் குறிக்கப்பட்டிருக்கும் மின்சார பயன்பாட்டு அளவுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

    இது ஒரு மணி நேரத்தில் அவற்றால் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவாகும். இதை கருத்தில் கொண்டு மின்சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம், மின்சாரத்தை சேமித்து மின்கட்டணத்தைக் குறைக்க முடியும். வெளியூருக்கு செல்லும்போது மெயின் சுவிட்சை அணைத்து விட்டு செல்வது சிறந்தது.

    இதனால் எதிர்பாராத மின்கசிவு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தரமான தயாரிப்புக் கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு, அவை சேதமடையாமல் நீடித்து உழைக்கவும் செய்யும். சேதமடைந்த மின்கம்பிகளை அவ்வப்போது சரிபார்த்து மாற்றி விடுவது நல்லது.

    மின்சாதனங்களை சரியான கால இடைவெளியில் பழுதுநீக்கம் செய்வதன் மூலம் ஆபத்துகளை தவிர்த்து, அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். பழுதான மின் உபகரணங்களை தனிப்பட்ட முறையில், நீங்களாகவே சரி செய்ய முயற்சிப்பது ஆபத்தானது.

    • பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது.
    • சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது.

    வீட்டில் பெண்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. பரபரப்பாக சமையல் செய்வது, மற்ற வேலைகளை முடித்த களைப்போடு சமையல் வேலைகளில் ஈடுபடுவது என அவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கு ஏற்றவாறு, அந்த அறையின் அமைப்பு மற்றும் வசதிகள் இருக்க வேண்டும். தண்ணீர், மின்சாரம், நெருப்பு இவை மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தும் இடம் என்பதால், சமையல் அறையில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    தரை:

    பெரும்பாலான வீடுகளில் 'டைல்ஸ்' பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, கீழே சிந்தும் திரவங்களை அவ்வப்போது துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் ஏதேனும் உடைந்தால், அதைத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    தீ அணைக்கும் கருவி:

    சமையல் அறையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பர்னர்கள் அல்லது பிளம்பீட் டெசர்ட் ஆகியவற்றில் இருந்து தீப்பிழம்புகள் வந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்கும் பாத்திரத்தில் திடீரென தீப்பற்ற நேர்ந்தால், அதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இது தீயை மேலும் அதிகரிக்கக்கூடும். பாத்திரத்தை ஒரு தட்டை போட்டு மூடி, அதன் மீது சிறிது பேக்கிங் சோடாவைப் போடலாம். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் வரும். சமையல் அறையில், தீயணைக்கும் கருவியை வைத்திருப்பதும், அதைக் கையாளத் தெரிந்திருப்பதும் அவசியம்.

    சமையல் உபகரணங்கள்:

    கத்தி, அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை சமையல் அறையின் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். பாத்திரங்களில் திருகுகள் உள்ள கைப்பிடிகள் தளர்வாக இருப்பதைக் கவனித்து உடனே அவற்றை சரி செய்வதன் மூலம், விபத்துகளைத் தவிர்க்கலாம்.

    தினசரி கவனம்:

    தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது அவசியம். அடுப்பை அணைப்பதோடு, எரிவாயு சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும். குழம்பு தாளிக்கும் போது, குமிழ் வைத்த மூடியால் மூடியபடி தாளித்தால், கடுகு போன்ற பொருட்கள் தெறித்து விழுந்து சூடுபடாமல் இருக்கும். சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.

    மேலும், குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று கேஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் மூடி உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம். பாத்திர அலமாரிகளோ, மற்ற பொருட்களோ அடுப்பிற்கு மேல் பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை எடுக்க முயலும் போது, ஆடையில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஆடையில் நெருப்பு பற்றினால், உடனே உடலைச் சுற்றி கம்பளியை போர்த்தி, நெருப்பை அணைக்கலாம்.

    ×