search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொக்கி குமார்"

    • அசோக்குமார் கோர்ட்டுக்குள் புகுந்து வெட்டியது ஏன்? என்று கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
    • போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தலைமறைவாக இருந்து வந்த கொக்கி குமார் தற்போது சிக்கியுள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் சிவஞானபுரத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அசோக் குமார்(வயது28). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. கேணிக்கரை போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

    ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சந்துரு சிவஞானபுரத்தில் உள்ள பால் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 13-ந் தேதி கடையில் இருந்த சந்துருவை, அசோக்குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

    இந்த வழக்கில் கைதான அசோக்குமார் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தினமும் ராமநாதபுரம் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார். அதேபோல் நேற்றும் கையெழுதிடுவதற்காக வந்த அசோக்குமார் கோர்ட்டின் அறையில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சந்துருவின் உறவினரான ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ரவுடி குமார் என்கிற கொக்கிக்குமார்(26), சண்முகநாதன்(22) ஆகியோர் வந்தனர். அவர்கள் கோர்ட்டின் அறையில் நின்று கொண்டிருந்த அசோக் குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.

    இதில் படுகாயமடைந்த அசோக்குமாரை கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை அசோக்குமார் கோர்ட்டுக்குள் புகுந்து வெட்டியது ஏன்? என்று கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அசோக் குமாருக்கும் கொக்கி குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தனது உறவினராக சந்துருவை தாக்கிய தகவல் அறிந்த கொக்கி குமார், அசோக்குமாரை பழி தீர்க்க திட்டமிட்டு கோர்ட்டுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய தகவல் தெரியவந்தது.

    தப்பி சென்ற கொக்கி குமார், சண்முகநாதனை பிடிக்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொக்கி குமார் உச்சிப்புளி பிரப்பன் வலசையில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்ததை அவரது செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு கொக்கி குமார் தப்பியோட முயன்றார். இதனால் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கொக்கி குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். முதலில் சுடப்பட்ட போது கொக்கி குமார் மீது படவில்லை. இதனால் இன்ஸ்பெக்டர் 2-வது முறையாக துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் கொக்கி குமாரின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் தொடர்ந்து ஓட முடியாமல் கீழே விழுந்தார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொக்கிகுமார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மேலும் அவர் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் காயமடைந்தனர். அவர்களும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கொக்கி குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். திருப்பூர் பகுதியில் பதுங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்திருக்கிறார்.

    அன்றைய தினமே ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரை வெட்டி விட்டு தப்பினார். பின்பு கொத்தர் தெருவை சேர்ந்த சூர்யா என்பவரை தாக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சூர்யா வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    இதனால் கொக்கி குமாரின் தாக்குதலில் இருந்து தப்பியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று கோா்ட்டுக்குள் புகுந்து அசோக்குமாரை வெட்டி விட்டு கொக்கிகுமார் தப்பினார்.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் மூலம் கொக்கி குமாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். அங்கு சென்று கைது செய்ய முயன்ற போது இன்ஸ் பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி னார்.

    இதனால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தலைமறைவாக இருந்து வந்த கொக்கி குமார் தற்போது சிக்கியுள்ளார். 

    ×