search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள இளம்பெண்"

    • கொல்லம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
    • பெண் புனலூரை சேர்ந்த வாலிபருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

    இந்த நிலையில் கொல்லம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அந்த பெண் கொல்லம் அருகே பத்மநாபபுரத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது 2 விண்ணப்பங்களிலும் வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.

    அதாவது அந்த பெண் பத்மநாபபுரம் புன்னாலை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி விண்ணப்பம் செய்திருக்கிறார். அதே பெண் புனலூரில் உள்ள சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (13-ந்தேதி) புனலூரை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ய விரும்புவதாக விண்ணப்பித்திருந்தார்.

    திருமண விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால், ஒரு பெண் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்திருந்த விவரம் தெரியவந்தது. இதனை கண்டறிந்த புனலூர் சார் பதிவாளர், அந்த பெண்ணின் விண்ணப்பத்தை பத்மநாபபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    2 சார் பதிவாளர் அலுவலகங்களில், வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்தது குறித்து விவரம் கேட்பதற்காக அந்த பெண் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி அந்த பெண் புனலூரை சேர்ந்த வாலிபருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தார்.

    அந்த பெண், புனலூரை சேர்ந்த வாலிபருடன் நீண்ட நாட்களாக 'லிவிங் டுகெதர்' உறவில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அந்த வாலிபரிடம் இருந்து பிரிந்து தாயுடன் சென்று தங்கிவிட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு பத்மநாபபுரத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வாலிபர் ஒரு காகிதத்தில் தன்னை கையெழுத்து போட வைத்ததாகவும், அது தான் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் கொடுக்கப்பட்ட திருமண விண்ணப்பம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அந்த பெண் கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை என்று பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த பெண் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள வாலிபர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் வகையில் பத்மநாபபுரம் மற்றும் புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெவ்வேறு நாட்களில் வருமாறு தெரிவித்துள்ளனர்.

    • வேடசந்தூர் அண்ணா நகரில் தோழியுடன் தங்கி இருந்து சிந்து நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
    • சிந்து காணாமல் போனதை அறிந்த வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரது கணவர் அங்கிருந்தவாறே கேரள போலீசாருக்கு புகார் அளித்தார்.

    வேடசந்தூர்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் அருகில் உள்ள பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிந்து (22). இவருக்கு கடந்த வருடம் திருமணமானது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.

    தனியாக வசித்து வந்த சிந்துவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமித் (30) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறியது. இன்ஸ்டாகிராமில் பேசிய சமித், தான் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நூற்பாலையில் மேலாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கணவர் இல்லாமல் தனிமையில் வாடி வந்த சிந்து தனது காதலன் சொல்வதை உண்மை என நினைத்து அவரை நேரில் சந்திக்க விரும்பினார். இதனையடுத்து தனது வீட்டில் யாருக்கும் சொல்லாமல் திண்டுக்கல் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து தனது காதலன் சொன்ன இடமான வேடசந்தூரில் சமித்தை தேடியுள்ளார்.

    அவர் எங்கும் கிடைக்காத நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் உதவியை நாடினார். அந்த பெண்ணும் அவரின் நிலை அறிந்து வேதனைப்பட்டார். மேலும் காதலனை கண்டுபிடிக்கும்வரை தன்னுடன் இருக்குமாறு அடைக்கலம் கொடுத்துள்ளார். வேடசந்தூர் அண்ணா நகரில் தோழியுடன் தங்கி இருந்து சிந்து நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    நூற்பாலைக்கு வேலைக்குச் சென்றுகொண்டே காதலித்த சமித் பற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு கிடைத்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமித் ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதும், அவர் சாதாரண கொத்தனார் வேலை பார்த்து வந்ததும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    தனது காதலன் சொன்ன விபரங்கள் அனைத்தும் போலியானது என அறிந்து வேதனையடைந்த அவர் யாரிடமும் சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்தார்.

    இதனிடையே சிந்து காணாமல் போனதை அறிந்த வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரது கணவர் அங்கிருந்தவாறே கேரள போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் சிந்துவை தேடி வந்தனர்.

    3 மாதமாக சிந்து மாயமான நிலையில் கேரள போலீசார் அவரது புகைப்படத்தை தமிழக போலீசாருக்கு அனுப்பி விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிந்துவின் குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். உடல்நிலை சரியில்லாமல் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிந்து வந்தபோது அங்கு டி.எஸ்.பி துர்க்காதேவி தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரித்தபோது நடந்த விபரங்களை கூறியுள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மோகத்தில் போலியான காதலனை நம்பி உள்ளூரில் வசிக்க முடியாமலும், தனது கணவர் வீட்டிற்கு செல்லமுடியாமலும் இருப்பதாக சிந்து கதறி அழுதார். இதனையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை வரவழைத்து வேடசந்தூர் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சமூகவலைதளங்களில் ஏற்படும் காதலால் உண்டாகும் விபரீதங்களை குறித்து அறியாமல் இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வந்தாலும் வழிதவறி செல்லும் நபர்களை வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×