search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை உயிரிழப்பு"

    • குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.
    • குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் 5-வது வார்டு வெட்னி கரடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35)-பிரியா (27).

    இந்த தம்பதிக்கு திலீப் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு இரவு 7 மணிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.

    ஆனால் குழந்தையின் பெற்றோர் தனியார் ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு 8 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதி செய்வதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஆனதாக தெரிகிறது.

    அதன்பிறகு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க சென்றபோது சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டது.

    இதனால் இன்று காலை ஈஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தாரமங்கலம் அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.

    • தாயின் மடியில் இருந்து கீழே இறங்கி தவழ்ந்து சென்ற குழந்தை தீஷ்குமார், அங்கு ஓடிக்கொண்டிருந்த நார் மில் எந்திரத்தின் அருகே சென்றான்.
    • எதிர்பாராத விதமாக குழந்தை அணிந்திருந்த சட்டை, நார் மில் எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உள்ளே இழுத்தது.

    பரமத்திவேலூர்:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சுராம் (வயது 36). இவரது மனைவி மனிஷா தேவி. இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் அருகே ஓலப்பாளையத்தில் உள்ள பிரபாகரன் என்பவரது தேங்காய் மட்டையில் இருந்து நார் பஞ்சு பிரித்து எடுக்கும் நார் மில்லில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    பஞ்சுராம் வழக்கம் போல் நேற்று மாலை நார் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க வந்த மனைவி மனிஷாதேவி, அவர்களது 1½ வயது ஆண் குழந்தை தீஷ்குமாரையும் அழைத்து வந்துள்ளார்.

    கணவன், மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, தாயின் மடியில் இருந்து கீழே இறங்கி தவழ்ந்து சென்ற குழந்தை தீஷ்குமார், அங்கு ஓடிக்கொண்டிருந்த நார் மில் எந்திரத்தின் அருகே சென்றான்.

    அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை அணிந்திருந்த சட்டை, நார் மில் எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உள்ளே இழுத்தது. இதில் படுகாயம் அடைந்த தீஷ்குமார் அலறினான்.

    குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், தீஷ்குமார் எந்திரத்தில் சிக்கியதை பார்த்து பதறினர். ஓடிச்சென்று குழந்தையை காப்பாற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தீஷ்குமார் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர்.

    இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 1½ வயது குழந்தை நார் மில்லில் உள்ள எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார்.
    • மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் சுகன்யாவுக்கு டந்த 45 நாட்களுக்கு முன்பு 2வது ஆண் குழந்தை பிறந்தது. குரு பிரசாத் என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டுக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசியை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.

    அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார். அதன் பிறகு நேற்று மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் இருக்கலாம் என நினைத்து ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்துகளை கொடுத்துள்ளனர்.

    இன்று காலை தனது குழந்தைக்கு சுகன்யா தாய்ப்பால் கொடுத்தார். ஆனால் பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா மற்றும் அவரது கணவர் குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அவர்கள் கதறி அழுதனர். தடுப்பூசி போட்ட பிறகுதான் தனது குழந்தைக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது உயிரிழந்து விட்டதாகவும் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே குழந்தை இறப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்தாள்.
    • சிறுமி உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன.

    இந்த நிலையில் எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அக்‌சிதா,வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமி அக்‌சிதா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

    • நர்சுகளே மித்ராவுக்கு பிரசவம் பார்த்தனர். மித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.
    • மித்ராவை சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த அலமாதி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி மித்ரா(வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக அலமாதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் அங்கிருந்த நர்சுகளே, மித்ராவுக்கு பிரசவம் பார்த்தனர். மித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. மேலும் தாய்க்கும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மித்ராவை சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மித்ராவின் உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாமல் நர்சுகளே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து விட்டதாக சோழவரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.
    • எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி புஷ்பா (வயது 33). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2-வதாக கர்ப்பம் அடைந்தார்.

    இவர் சூனாம்பேடு ஊராட்சி, இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புஷ்பா பரிசோதனைக்கு சென்றபோது நேற்று (19-ந்தேதி) அவருக்கு பிரசவ தேதி என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். இதையடுத்து நேற்று காலை புஷ்பா பிரசவத்துக்காக இல்லீடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவருக்கு பிரசவ வலி வராததால் அங்கிருந்த டாக்டர்கள் வலி எடுத்தால் ஆஸ்பத்திரிக்கு வருமாறு கூறி திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து புஷ்பாவும் அவருடன் வந்த உறவினர்களும் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். மதியம் 2.30 மணி அளவில் புஷ்பாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அவரை இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் மீண்டும் அழைத்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து அங்கிருந்த நர்சுகள் 3 பேர் புஷ்பாவுக்கு பிரசவம் பார்க்க முயன்றனர். ஆனால் பிரசவத்தில் சிக்கல் இருந்ததால் அவர்களால் பிரசவம் பார்க்க முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுகுறித்து டாக்டர் ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரவித்தனர். ஆனால் அந்த டாக்டர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. அவர் நர்சுகளிடம், தான் செல்போனில் வீடியோ காலில் தொடர்ந்து பேசுவதாகவும், கூறும்படி செய்தால் சுகப்பிரசவம் பார்த்து விடலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

    இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் புஷ்பாவுக்கு நர்சுகள் 3 பேரும் டாக்டர் வீடியோ காலில் கூறியபடி பிரசவம் பார்க்க தொடங்கினர். சிறிது நேரத்தில் குழந்தை தலைகீழாக மாறி முதலில் கால்கள் மட்டும் வெளியே வந்தது. ஆனால் உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் நர்சுகள் திணறினர்.

    இதற்கிடையே புஷ்பாவின் உடல் நிலை தொடர்ந்து மோசம் அடைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுபற்றி வீடியோ காலில் இருந்த டாக்டரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து பிரசவ வலியுடன் துடித்த புஷ்பாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவருக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது.

    இதனால் பதட்டம் அடைந்த நர்சுகள், பிரசவத்தில் புஷ்பாவுக்கு குழந்தை இறந்து பிறந்து விட்டது என்று உறவினர்களிடம் கூறினர். மேலும் புஷ்பாவை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு சென்றுவிட்டனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பாவின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டினர்.

    மேலும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து குழந்தையின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

    நர்சுகள் பிரசவம் பார்த்ததில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் புஷ்பாவின் உடல்நிலை மோசம் அடைந்து உள்ளது. அவருக்கு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதனை நர்சுகள் கவனிக்காமல் டாக்டர்கள் இல்லாததால் விபரீதமாக அவர்கள் சினிமா பாணியில் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்து உள்ளனர். இதனால் பச்சிளம் குழந்தையின் உயிர் பறிபோய் உள்ளது. இதுகுறித்து புஷ்பாவின் உறவினர்கள் சூனாம்பேடு போலீஸ நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பாவுக்கு பிரசவம் பார்த்த நர்சுகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர்கள் எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    அலட்சியமாக பிரசவம் பார்த்த நர்சுகள் மற்றும் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்க்க கூறிய டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புஷ்பாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பிரபாகரனின் மகள் ருத்ரவீணா வீட்டின் பின்புறத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
    • குழந்தையை காணாததை கண்டு பெற்றோர் வந்து பார்த்தபோது குட்டையில் குழந்தை விழுந்தது தெரியவந்தது.

    நன்னிலம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் துக்காச்சி புதுகாலனி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35) விவசாயி.

    இவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகளான ருத்ரவீணா ஆகியோருடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள அதம்பாவூர் ஒத்தவீடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உறவினர் மோகன் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    நிகழ்ச்சி முடிந்து, அதே பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது பிரபாகரனின் மகள் ருத்ரவீணா வீட்டின் பின்புறத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது அங்குள்ள மீன்வளர்ப்பு குட்டையில் திடீரென ருத்ரவீணா தவறி விழுந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினாள்.

    இதற்கிடையே குழந்தையை காணாதது கண்டு பெற்றோர் வந்து பார்த்தபோது குட்டையில் குழந்தை விழுந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக குழந்தையை, மீட்டு தூக்கிக்கொண்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ருத்ரவீணா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

    இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×