search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீரை ரெசிப்பிகள்"

    • மணத்தக்காளி தண்ணிச்சாறு அருமையான சுவை கொண்டது.
    • எளிமையாக 10 நிமிடங்களில் செய்யக் கூடியது.

    தஞ்சாவூர் பக்கத்தில் மிகவும் விரும்பி செய்யப்படும் இந்த தண்ணிச்சாறு அருமையான சுவை கொண்டது. மிகவும் எளிமையாக 10 நிமிடங்களில் செய்யக் கூடியது. வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றை நீக்க வல்லது.

    தேவையான பொருட்கள்:

    மணத்தக்காளி கீரை - 1 கட்டு.

    சின்ன வெங்காயம் - 15

    வரமிளகாய் - 3

    சீரகம் - 1 ஸ்பூன்

    வெந்தயம் - 1/2 ஸ்பூன்

    தேங்காய்ப் பால் - 1 கப்

    மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மணித்தக்காளி கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பாதியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அரை மூடிதேங்காயை நீர் விட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வரமிளகாய், சீரகம், வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், வெட்டி வைத்துள்ள கீரை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிய பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு கலந்து விட்டபிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும். கொதிக்க விடக்கூடாது. இறுதியாக தேங்காய் பால் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு ரெடி.

     வயிற்றில் புண் இருப்பவர்கள், அல்சர் பிரச்சினை இருப்பவர்களுக்கு, கர்பப்பை பிரச்சினை, குழந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு அல்லது அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.

    • வயிற்றுப்புண்ணிற்கு மிகவும் நல்லது.
    • புளிச்ச கீரை உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

    காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. புளிச்ச கீரையை குழம்பு, கூட்டு, துவையல் போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கிறது. அடிக்கடிக்கு புளிச்சக்கீரை பருப்பு செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் வல்லமை புளிச்சக்கீரைக்கு உண்டு.

    தேவையான பொருட்கள்

    புளிச்ச கீரை- ஒரு கட்டு

    துவரம் பருப்பு- கால் கப்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    கடுகு- கால் டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய்- 5

    பச்சை மிளகாய்- 5

    வெங்காயம்- 2 (நறுக்கியது)

    பூண்டு- 10 (நறுக்கியது)

    தக்காளி- 1 (நறுக்கியது)

    புளி- சிறிதளவு

    பெருங்காயம்- ஒரு சிட்டிகை

    கொத்தமல்லி தழை- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குக்கரில் துவரம்பருப்பு, புளிச்ச கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து கலந்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் ஏற்கனவே வேகவைத்து எடுத்துள்ள புளிச்ச கீரை பருப்பு கடையலை இதில் சேர்க்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா பப்பு தயார்.

     இதனை சூடான சாதத்தில் நெய்விட்டு இந்த கோங்குரா பப்புவை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றுவதற்கு மிகவும் நல்லது.

    ×