search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருகும் நெற்பயிர்கள்"

    • அபிராமம் பகுதியில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
    • இழப்பீடு கேட்டு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பச்சேரி, நீர்தாண்டதானம், அச்சங்குளம், விரதக்குளம், உடையநாதபுரம், போத்தநதி, ஏ.புதூர், புல்லந்தை நந்திசேரி, காடனேரி, நரியன், முத்தாதிபுரம் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3,750 ஏக்கரில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்துவருகின்றனர்.

    75 நாட்களுக்கு முன்பு அவ்வப்போது மழை பெய்ததால் நெற்பயிர் ஒரளவு வளர தொடங்கியது. இதனால் விவசாயிகள் கூலி வேலைக்கு ஆட்களை வைத்து களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பருவமழை போதிய அளவு பெய்யாததால் கண்மாய் ஊருணிகள் வறண்டு தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது.

    இது குறித்து அபிராமம் பகுதி விவசாயிகள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். அபிராமம் பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும் புதர்மண்டியும் கிடக்கிறது. இதனால் பலமுறை வைகையில் தண்ணீர் வந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

    கிருதுமால் நதியை தூர்வார ேகாரியும், அக்கிரமிப்புகளை அகற்ற ேகாரியும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் அபிராமம் பகுதி விவசாயிகள் கருகிய நெற்பயிர்களை மாடுகளுக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது

    இதுகுறித்து நீர் தாண்டதானம் விவசாயி தர்மமுனியாண்டி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இந்த பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி தூர்வாரப்படாமல் கருவேல மரங்களால் புதர்மண்டி கிடக்கிறது.

    அதிகாரிகளின் அலட்சியத்தால் தூர்வாரப்படாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. விவசாயம் செய்ய கடன் வாங்கி செலவு செய்தோம். மழை இல்லாததால் மேலும் கடனாளியாகும் நிலை உள்ளது. அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு பயிர்கடனை தள்ளுபடி செய்வதுடன் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.26 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

    • அபிராமம் பகுதியில் மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
    • இதனால் விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி வானம் பார்த்த பூமியாகும். இங்கு பருவமழையை மட்டுமே எதிர்பார்த்து விவசாயிகள். நெல், மிளகாய் உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்கின்றனர்.

    அபிராமத்தை சுற்றி உள்ள அச்சங்குளம், காடனேரி, வல்லகுளம், நகரத்தார்குறிச்சி, பாப்பனம், நரியன், முத்தாதிபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 45 நாட்களுக்கு முன் விதைக்கப்பட்ட நெல், பருத்தி உளுந்து, மிளகாய் பயிர்கள் வளர்ந்து பயன்தரக்கூடிய நிலையில் மழை பொய்த்ததால் அந்த பயிர்கள் கருகி வருகின்றன.

    இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயி கர்ணன் கூறுகையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

    இந்த ஆண்டு பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து கண்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரி அபிராமம் மற்றும் சுற்றுவட்டார கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவந்து விவசாயம் செழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×