search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ தலைவர் சோம்நாத்"

    • இந்தியா நாசாவுடன் இணைந்து ‘நிசார்’ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
    • அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படும்.

    ஸ்ரீஹரிகோட்டா :

    ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    'ஜி.எஸ்.எல்.வி. எப்-10' ராக்கெட் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டது. கிரையோஜெனிக் நிலையில் கசிவு இருந்ததால்தான் தோல்வி ஏற்பட்டதாக அந்த குழு அறிக்கை அளித்தது.

    அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதன் மூலம் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. 'என்.வி.எஸ்.' 2-ம் தலைமுறையை மையமாக கொண்டு ஏவப்பட்டு உள்ளது. இது புவிவட்டப் பாதையை சேர்ந்தது. இதில் இருந்து திறம்பட, துல்லியமாக தகவல்களை பெற முடியும்.

    இந்த 'என்.வி.எஸ்.' செயற்கைகோள் ரகத்தில் மொத்தம் 5 செயற்கைகோள் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளன. மீதமுள்ள 4 செயற்கைகோள்கள் 6 மாதத்துக்கு ஒன்று வீதம் அனுப்பப்பட உள்ளன. இந்த செயற்கைகோள் மூலம் நம்நாட்டுக்கு தேவையான தகவல்களை பெறுவதுடன் வரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்புகளை பெறமுடியும்.

    அடுத்து 'ஜி.எஸ்.எல்.வி.' ரகத்தில் 'இன்சாட் 3டி.எஸ்.' என்ற செயற்கைகோள் காலநிலை மாற்றம் குறித்து ஆராய விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல், இந்தியா நாசாவுடன் இணைந்து 'நிசார்' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    தொடர்ந்து 'ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3', 'எஸ்.எஸ்.எல்.வி.', ககன்யான் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    மீண்டும் பயன்படுத்தப்படும் ராக்கெட் செயல் வடிவத்துக்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், இந்தியாவுக்கும், இந்தியர்களுக்குமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

    தற்போது அனுப்பப்பட்டுள்ள 'எல் 1 பேண்ட்' பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வரைபடம், வழிகாட்டி தகவல்களை பெற முடியும். தொடர்ந்து நிலவை ஆய்வு செய்யும் 'சந்திரயான்-3' திட்டம் ஜூலை மாதம் செயல்படுத்தப்பட உள்ளது.

    குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தை பொறுத்தவரை 99 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவுற்றது. இங்கிருந்து தனியார் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடு்க்கப்படும். 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி தந்துள்ளது. வடிவமைப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில் கட்டுமானத்துக்கான டெண்டர் கோரப்பட உள்ளது.

    2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும். அதற்குப் பிறகு ராக்கெட் இங்கிருந்து ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து ஜூலை மாதம் மாதிரி விண்கலம் ஒன்று புவியில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் அனுப்பி பாதுகாப்பாக தரையிறக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.

    அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×