search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிச்சநல்லூர் அகழாய்வு"

    • இரட்டை மூடிகளுடன் இருந்த அந்த முதுமக்கள் தாழிக்குள் 2 பேரின் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன.
    • மேலும் சிறு பானைகளும், இரும்பாலான உளியும் இருந்தன.

    ஸ்ரீவைகுண்டம்:

    பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நடைபெற்ற அகழாய்வில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அகழாய்வில் கல்வட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து பார்த்து ஆய்வு செய்தனர். இரட்டை மூடிகளுடன் இருந்த அந்த முதுமக்கள் தாழிக்குள் 2 பேரின் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன. மேலும் சிறு பானைகளும், இரும்பாலான உளியும் இருந்தன.

    இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ''முதுமக்கள் தாழியில் இருந்தது கணவன்-மனைவியின் எலும்புக்கூடுகளா? அல்லது தாய்- குழந்தையின் எலும்புக்கூடுகளா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது'' என்றனர்.

    இதுதொடர்பாக தொல்லியல் ஆர்வலர்கள் கூறும்போது, 'கலம்செய் கோவே, கலம்செய் கோவே' என்ற புறநானூறு பாடலில், போரில் கணவர் இறந்ததால், அவரது உடலுடன் தன்னையும் அடக்கம் செய்யுமாறு மனைவி கூறுவதாக உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஒரே முதுமக்கள் தாழியில் 2 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன' என்று தெரிவித்தனர்.

    • தட்டையான வடிவில் முதுமக்கள் தாழியின் மூடி கண்டெடுப்பு.
    • 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பனை சார்ந்த பொருள் பயன்பாடு.

    சிவகளை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆதிச்சநல்லூர் பரும்பு, பாண்டியராஜா கோவில், கால்வாய் ரோடு, புளியங்குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 8 பிரிவுகளாக அகழாய்வு செய்யப்படுகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான காதணி, நெற்றிப்பட்டயம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    சங்ககால மக்களின் வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்றைய பணியின்போது தட்டையான வடிவில் முதுமக்கள் தாழியின் மூடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பனை ஓலைப்பாய் அச்சுகள் இருந்துள்ளது. அந்த அச்சுகள் பனை ஓலையால் ஆனதா அல்லது கோரைப்புல்லில் நெய்யப்பட்டதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதுமக்கள் தாழிகள் செய்யும் போது, அதனை காய வைப்பதற்கு இந்த பனை ஓலை பாய் அல்லது கோரைப்பாயின் மேல் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளது உறுதி ஆகி உள்ளது. ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் பழமையான நாகரித்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்து வருவதால் தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    • ஆதிச்சநல்லூர் சென்ற கனிமொழி குழியில் கிடைத்த பொருட்களையும், ஆய்வுக்குழிகளையும் பார்வையிட்டார்.
    • தங்கம் கிடைத்த குழிக்குள் ஏணி வழியாக அவர் இறங்கி அங்கே கிடைத்த வெண்கல பொருட்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட நேற்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சென்றார். அவர் முதலில் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வந்தார்.

    தாமிரபரணி நதிக்கரையோரம் பாண்டியராஜா கோவில் அருகே நடைபெறும் அகழாய்வு பணிகள், அதில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், தங்கப்பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து சிவகளையில் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் தலைமையிலான ஆய்வாளர்கள் அவருக்கு விளக்கமளித்தனர்.

    அங்கிருந்து ஆதிச்சநல்லூர் சென்ற கனிமொழி குழியில் கிடைத்த பொருட்களையும், ஆய்வுக்குழிகளையும் பார்வையிட்டார். அங்கு தங்கம் கிடைத்த குழிக்குள் ஏணி வழியாக அவர் இறங்கி அங்கே கிடைத்த வெண்கல பொருட்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் மற்றும் காதணி கண்டுபிடிக்கப்பட்டது, முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 145 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் பெர்லின் நகர் உள்பட வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதிச்சநல்லூர் பொருட்களை கண்டுபிடித்து அதை கொண்டு வந்து ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். நான் அதற்கான கடிதம் அளிப்பேன். தொடர்ந்து அந்த பொருட்களை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரையிலும் ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியே கண்டறியப்பட்டு உள்ளது.
    • கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினரும் ஆதிச்சநல்லூருக்கு வந்தனர்.

    தூத்துக்குடி:

    மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதிச்சநல்லூர் பரும்பு, பாண்டியராஜா கோவில் அருகில், கால்வாய் ரோடு, புளியங்குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 8 பிரிவுகளாக அகழாய்வு செய்யப்படுகிறது.

    இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான காதணி, நெற்றிப்பட்டயம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சங்ககால மக்களின் வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பாண்டியராஜா கோவில் அருகில் தொல்லியல் துறையினர் 8 இடங்களில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தனர். அவற்றில் ஒரு குழியில் 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் அருகில் சில மண்பாண்ட பொருட்களும் இருந்தன.

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரையிலும் ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியே கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய்தனர். அதில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன.

    இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் புனே டெக்கான் கல்லூரி மானுடவியல் துறை ஆய்வாளர் வீனா முன்சீப், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மனித எலும்புகளை ஆய்வகத்துக்கு எடுத்து சென்று சோதனை நடத்தி, அவற்றின் தொன்மையை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

    இதேபோன்று கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினரும் ஆதிச்சநல்லூருக்கு வந்தனர். இங்கு அகழாய்வில் கிடைத்த உலோக பொருட்களின் வகைகள், அவற்றின் கலந்துள்ள தனிமங்கள், தொன்மையை கண்டறிவதற்காக 'லாண்டா' என்ற கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

    • ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது.
    • குழியில் புதைக்கப்பட்டவர் அந்த காலத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்திருப்பார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணி நடந்து வருகிறது.

    இந்த பணி ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறையினர் ஏற்கனவே தோண்டிய குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன ஜாடியும், அதை சுற்றி ஐந்து இடத்தில் ஜாடியின் மேல் கொக்கு, வாத்து, பறவைகள் நீர் அருந்துவது போலவும், அதன் அருகில் 2 வெண்கலத்தால் ஆன வடிக்கட்டியும் இருந்தது.

    மேலும், அந்த குழியில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 இரும்பு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் கூறுகையில், 'ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதில் ஏராளமான தொன்மையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த குழியில் புதைக்கப்பட்டவர் அந்த காலத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்திருப்பார்.

    எனவே தான் இந்த குழியில் மேலும் வெண்கல பொருட்கள், இரும்பு பொருட்கள் இருந்து உள்ளது. இந்த தங்கம் நெற்றிப்பட்டயம் வருகிற காலங்களில் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் ஒரு பொருளாக இருக்கும்' என்றார்.

    ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    ×