search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சிவி கணேசன்"

    • ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
    • தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனையாக திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    திருச்சி:

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் திருச்சி மிளகுபாறை பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இன்று திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என மொத்தம் 56 பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனை மிக சுகாதாரத்தோடும், போதிய அளவு தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளது.

    தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனையாக திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பல் மருத்துவ பிரிவு மிக சிறப்பாக செயல்படுவதோடு தினமும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் மகப்பேறு மருத்துவத்தை பொருத்தவரை மிகச்சிறப்பாக செயல்படுகிறது.

    நான் ஆய்வு மேற்கொண்ட போது சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கை மாலை நேரங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது. எனவே இங்குள்ள ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்படும்.

    அதேபோல் ஐ.சி.யூ. என்று சொல்லக்கூடிய தீவிர சிகிச்சை மருத்துவ பிரிவு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் ஒரு வார காலத்திற்குள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்கள் குறித்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் உறுதுணையோடு அந்த தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த ஆய்வு குழு சென்னையில் ஐந்து அதிகாரிகள் தலைமையில் நேரடியாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அங்குள்ள தொழிலாளர்கள் நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும், இந்தப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் இயக்குனர் ராஜமூர்த்தி மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.
    • தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள். அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.

    அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.

    இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.

    தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

    • தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டார்.
    • கோப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் சி.வி.கணேசன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    திருப்பூர்:

    தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாலையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    முன்னதாக அமைச்சர் சி.வி.கணேசன் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தொழிலாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா? மற்றும் தொழிலாளர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார் .

    மேலும் தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கோப்புகளை ஆய்வு செய்த அவர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    இதனைத்தொடர்ந்து பூலுவப்பட்டியில் விரிவாக்கப்பட்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகளையும், தொழிற்கல்வி நிறுவனத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குவாரிகள் மூடப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
    • அவருடன் இருந்த சபாநாயகர் அப்பாவு, எவ்வளவு நாட்களில் குவாரி திறக்கப்படும் என்பதை தெரிவிக்குமாறு கலெக்டர் விஷ்ணுவிடம் தெரிவித்தார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுவட்டார பகுதி தொழிற்கல்வி படித்த இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.கணேசன் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, நெல்லை மாவட்டத்தில் தற்போது கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வேலை இல்லாமல் பலர் இருக்கின்றனர். மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. குவாரி எப்போது திறக்கப்படும் என அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

    இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். அவருடன் இருந்த சபாநாயகர் அப்பாவு, எவ்வளவு நாட்களில் குவாரி திறக்கப்படும் என்பதை தெரிவிக்குமாறு கலெக்டர் விஷ்ணுவிடம் தெரிவித்தார்.

    உடனே கலெக்டர் விஷ்ணு, இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. முழுமையான பரிசீலனைக்கு பிறகு குவாரிகள் திறக்கப்படும் என்று கூறினார்.

    அப்போது சபாநாயகர் அருகில் இருந்த அமர்ந்திருந்த நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திடீரென கோபமடைந்தார். அவர் எழுந்து நின்று 60 நாள் ஆகி விட்டது. இன்னும் திறக்கவில்லை என அமைச்சரிடம் ஆவேசமாக கூறினார்.

    உடனே அமைச்சர் சி.வி. கணேசன் அவரை அமருங்கள் என்று கூறினார். ஆனால் மறுபடியும் ஞானதிரவியம் எம்.பி. எழுந்து நின்று, இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மீண்டும் கூறி வாக்குவாதம் செய்தார்.

    இதனால் கோபம் அடைந்த அமைச்சர் சி.வி. கணேசன், அண்ணே... கம்முனு இருங்க.... இது என்ன வீடா? என்று கூறினார். அதன்பின்னரே ஞானதிரவியம் எம்.பி. அமைதியானார்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×