search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister CV Ganesan"

    • மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என ஆய்வு செய்தார்.
    • சிகிச்சைக்கு வரும் தொழிலாளர்களைக் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி-கோவை சாலை சிடிசி மேடு பகுதியில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, எத்தனை மருத்துவர்கள் பணியில் உள்ளனர், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என ஆய்வு செய்ததோடு, அவர்களின் வருகைப் பதிவேடுகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, மருத்துவத்தின் செயல்பாடு, மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மருந்தகத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடந்தது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மருந்தகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தொழிற்சாலைகளில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மருந்தகங்கள் மூலம் மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா, முறையான சிகிச்ைச அளிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில், பொள்ளாச்சி இ.எஸ்.ஐ. மருந்தகத்தை ஆய்வு செய்துள்ளேன்.

    மருத்துவர்கள், பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததில் அவர்கள் சரியான நேரத்துக்குப் பணிக்கு வந்துள்ளனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மூலம் தொழிலாளர்களுக்குப் போதுமான சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.

    சிகிச்சைக்கு வரும் தொழிலாளர்களைக் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும். நீண்டநேரம் காத்திருக்க வைக்கக்கூடாது என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

    இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் இல்லம் தேடி மருத்துவம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகம்தான் மருத்துவ சேவையில் முன்னிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, சப்-கலெக்டர் பிரியங்கா, பொள்ளாச்சி நகரசபை தலைவி சியாமளா நவநீதகிரு ஷ்ணன், தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.
    • தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள். அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.

    அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.

    இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.

    தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குவாரிகள் மூடப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
    • அவருடன் இருந்த சபாநாயகர் அப்பாவு, எவ்வளவு நாட்களில் குவாரி திறக்கப்படும் என்பதை தெரிவிக்குமாறு கலெக்டர் விஷ்ணுவிடம் தெரிவித்தார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுவட்டார பகுதி தொழிற்கல்வி படித்த இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.கணேசன் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, நெல்லை மாவட்டத்தில் தற்போது கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வேலை இல்லாமல் பலர் இருக்கின்றனர். மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. குவாரி எப்போது திறக்கப்படும் என அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

    இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். அவருடன் இருந்த சபாநாயகர் அப்பாவு, எவ்வளவு நாட்களில் குவாரி திறக்கப்படும் என்பதை தெரிவிக்குமாறு கலெக்டர் விஷ்ணுவிடம் தெரிவித்தார்.

    உடனே கலெக்டர் விஷ்ணு, இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. முழுமையான பரிசீலனைக்கு பிறகு குவாரிகள் திறக்கப்படும் என்று கூறினார்.

    அப்போது சபாநாயகர் அருகில் இருந்த அமர்ந்திருந்த நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திடீரென கோபமடைந்தார். அவர் எழுந்து நின்று 60 நாள் ஆகி விட்டது. இன்னும் திறக்கவில்லை என அமைச்சரிடம் ஆவேசமாக கூறினார்.

    உடனே அமைச்சர் சி.வி. கணேசன் அவரை அமருங்கள் என்று கூறினார். ஆனால் மறுபடியும் ஞானதிரவியம் எம்.பி. எழுந்து நின்று, இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மீண்டும் கூறி வாக்குவாதம் செய்தார்.

    இதனால் கோபம் அடைந்த அமைச்சர் சி.வி. கணேசன், அண்ணே... கம்முனு இருங்க.... இது என்ன வீடா? என்று கூறினார். அதன்பின்னரே ஞானதிரவியம் எம்.பி. அமைதியானார்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×