search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafale row"

    ‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில், நாடு முழுவதும் சுற்றி வந்து காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். #RafaleRow #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், இதுகுறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான விவகாரத்தில், காங்கிரஸ் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், காங்கிரசின் அடிப்படையற்ற, பொய் பிரசாரம் தொடர்ந்து வருகிறது. இதை எதிர்கொள்வதை தவிர, வேறு வழி இல்லை.



    அந்த பிரசாரத்தை முறியடிப்போம். நாடு முழுவதும் சுற்றி வந்து உண்மையை சொல்வோம்.

    காங்கிரஸ் கட்சியில் விரக்தி நிலவுகிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் அரசு எவ்வித களங்கமும் இல்லாமல் இருப்பதை ஒரு பொருட்டாகவே கருதாமல், பொய் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது.

    இந்த விவகாரத்தில், சர்வதேச பரிமாணத்தையும் நாங்கள் பார்க்கிறோம்.

    கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இன்னும் 2 வாரங்களில், ரபேல் விவகாரத்தில் பெரிய குண்டு வெடிக்கும்” என்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். அதேபோல், பிரான்ஸ் முன்னாள் அதிபர், சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

    இது, தற்செயலாக நடந்ததாக கருத முடியாது. காங்கிரஸ் கட்சி எப்படி இதை முன்கூட்டியே கணித்தது? முன்பு ஒருமுறை, காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தானின் உதவியை கேட்டது, நினைவுக்கு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RafaleRow #NirmalaSitharaman #Congress 
    “காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்டதை விட 9 சதவீதம் விலை குறைவாக நாங்கள் ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குகிறோம்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார். #Rafale #Congress #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் உள்ள ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 126 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2012-ம் ஆண்டு பேச்சுவார்த்தை தொடங்கியது. பறக்கும் நிலையில் 18 விமானங்களை டசால்ட் ஏவியேசன் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும் என்பதும், மீதி விமானங்களை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் (எச்.ஏ.எல்.) இணைந்து டசால்ட் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்பதும் திட்டம் ஆகும்.



    இதுபற்றி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போதிய திறனை பெற்று இருக்கவில்லை என்று உணர்ந்தது. மேலும், இந்தியாவில் தயாரித்தால், ஒப்புக்கொண்டதை விட செலவு அதிகரிக்கும் என்றும் கருதியது.

    இந்தியாவில் தயாரிக்க வேண்டுமானால், அதன் தரம் குறித்து உத்தரவாதம் வழங்க வேண்டும். ஆனால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் உத்தரவாதம் வழங்க முன்வரவில்லை. இதனால், டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடரவில்லை.

    அத்துடன், 2013-ம் ஆண்டு, செலவு குறித்த பேச்சுவார்த்தை குழு, இந்த பேரத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தபோது, அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியின் எப்போதும் இல்லாத தலையீட்டால், ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமலே போய்விட்டது. அவர் நினைத்திருந்தால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு அரசு நிதியை அளித்து, அதை பலப்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

    ஆனால், நாங்கள் 2016-ம் ஆண்டு, 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடி செலவில் கொள்முதல் செய்ய பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இதில்தான், ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது.

    தலா ரூ.526 கோடிக்கு காங்கிரஸ் வாங்க நினைத்த போர் விமானங்கள், வெறுமனே பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் மட்டுமே உரியவை. ஆனால், நாங்கள் வாங்குவது, போர் தளவாடங்கள், இதர தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானங்கள். இவை அதைவிட உயர் தரத்துடன் இருக்கும்.

    காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்த விலையை விட 9 சதவீதம் விலை குறைவாகவே இவற்றை வாங்குகிறோம். இந்த விமானங்கள், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்மிடம் ஒப்படைக்கப்படும்.

    இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை. இப்பிரச்சினைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் ஊழல்வாதி அல்ல என்று அவர்களுக்கு தெரியும்.

    இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் கவலைகளை போக்க அவர்களை அழைத்துப்பேச போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல், குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்கள். விமானப்படை குறித்தும் அவர்களுக்கு அக்கறை இல்லை.

    சொல்வதற்கு பிரச்சினை எதுவும் இல்லாததால், இதைப்பற்றி பேசி வருகிறார்கள். ராணுவ அமைச்சகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல், தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தியாவின் தூய்மையான அரசுகளில் இதுவும் ஒன்று.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். #Rafale #Congress #NirmalaSitharaman 
    ×