search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "masi magam"

    அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும். அன்னை அவதரித்த திருக்கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருக்கயிலாயத்தில் சிவபெருமானுடன், பார்வதி தேவி இருந்தாள். அப்போது பார்வதி ஈசனிடம், “சுவாமி! உங்களுடைய உண்மை நிலையை எனக்கு உரைக்க வேண்டும்” என்றாள்.

    அதற்கு இறைவன், “உயிர்கள் நலம் பெற ஐந்தொழில் செய்வேன். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பேன். எனக்கென ஒரு உருவமும் இல்லை. அருளே எனது உருவமாகும்” என்றார்.

    அதற்கு பார்வதி, “அருள் தான் உங்களுடைய உருவம் என்றால், அந்த அருள் நான்தானே” என்று சற்று கர்வத்தோடு கேட்டாள்.

    அப்போது இறைவனின் கண்ணசைவில் உலகத்தின் அசைவுகள் அனைத்தும் நின்றுபோனது. இதனால் பதறிப்போன பார்வதி, “இறைவா! உண்மையை உணர்ந்து கொண்டேன். உங்களுக்கு சில நொடி என்பது, உயிர்கள் பல யுகங்கள் ஆகும். எனவே இந்த அசைவற்ற நிலையை மாற்றுங்கள்” என்று வேண்டினாள். இதையடுத்து இறைவன் உலகை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

    தான் செய்த பாவத்திற்காக பூமியில் பிறந்து சிவபூஜை செய்ய பார்வதி எண்ணினாள். அந்த நேரத்தில் தக்கனும் தனது மகளாக பார்வதி பிறக்க வேண்டும் என்று சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அம்பிகை காளிந்தி நதியில், ஒரு தாமரைப் பூவில் வலம்புரி சங்கு வடிவமாக தோன்றினாள். மாசி மகத்தில் தக்கன், தன் மனைவி வேதவல்லியோடு அந்த நதியில் நீராட வந்தான். அப்போது அங்கிருந்த வலம்புரி சங்கை கையில் எடுத்தான். அது அழகிய பெண் குழந்தையாக வடிவம் கொண்டது. அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும்.
    மாசி மகத்தையொட்டி கடலூர் கடலில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாசி மாதம் பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் தினத்தை மாசி மகம் என்கிறார்கள். மாசி மகத்தில் கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளை கடற்கரைக்கு கொண்டு சென்று தீர்த்தவாரி நடத்துவது வழக்கம்.

    தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதன்படி மாசிமகமான நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந் தது. இதற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்களில் இருந்து சாமிகளை வாகனங்களில் வைத்து வீதி உலாவாக மேள தாளம் முழங்க தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

    காலை 7 மணியில் இருந்தே தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சாமிகள் வீதி உலாவாக வந்து கொண்டு இருந்ததால் சில்வர் பீச்சுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் சரி செய்தனர். தொடர்ந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்த சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது பக்தர்களும் புனித நீராடினர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    உற்சவ மூர்த்திகளுக்கு தேங்காய், பழம் போன்ற பூஜைக்குரிய பொருட்களை வைத்து, தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் சாமிகளை மீண்டும் வீதி உலாவாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    தீர்த்தவாரியில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசாமி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள், வண்டிப்பாளையம் அங்காளம்மன், மஞ்சக்குப்பம் ஆட்கொண்டவரதராஜபெருமாள், திண்டிவனம் செண்டூர் வரதராஜபெருமாள், புதுப்பாளையம் துர்க்காளம்மன், நெல்லிக்குப்பம் வீரபத்ரசுப்பிரமணியர், தேவனாம்பட்டினம் இடிதாங்கி மாரியம்மன், தேவனாம்பட்டினம் சீனுவாசபெருமாள், நத்தப்பட்டு முத்துமாரியம்மன், செல்லாங்குப்பம் பொட்லாயி அம்மன், மார்க்கெட் காலனி சோலை வாழியம்மன், புதுச்சேரி சோரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன், பெரியகுப்பம் பெரியநாயகி அம்மன் உள்பட 90-க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கலந்து கொண்டனர்.



    இதில் முதுநகர் பீமாராவ் நகர் கெங்கை மாரியம்மன் குளிர்பான பாட்டில்களாலும், நவநீதம்நகர் சோலைபுத்துமாரியம்மன், உச்சிமேடு பொட்லாயி அம்மன், ராமாபுரம் மேட்டுக்குப்பம் பொட்லாயி அம்மன் போன்ற சாமிகள் பிஸ்கெட் பாக்கெட்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

    பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்கள் சாமியை வழிபட்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் நீர், மோர் வழங்கப்பட்டது.

    முன்னதாக உற்சவ மூர்த்திகளுடன் மேளம், தாளம் முழங்க நகர முக்கிய சாலைகளில் நடனம் ஆடி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் சிலர் ஆட்டம், பாட்டத்துடன் வந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக வந்த சிலரையும் போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

    காசியை விட வீசம் பெரிது என்பதற்கு ஏற்ப காசியில் நீராடிய புண்ணியத்தை விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பெறலாம் என்பது நம்பிக்கை. அதன்படி புண்ணிய நதியாக விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் மணிமுக்தாற்றில் நடக்கும் மாசி மகத்திருவிழாவில் திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று மாசி மகம் என்பதால் ஏராளமான மக்கள் திதி கொடுப்பதற்காக மணிமுக்தாற்றில் குவிந்தனர். அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஊற்று குழிகளில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் அனைவரும் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரியையொட்டி மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினார்கள்.
    மாசிமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் நேற்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர். ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மாசிமக விழாவினை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்து நாள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 9-ம் நாள் விழாவில் தேரோட்டமும் நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.

    பின்னர் பகல் 12 மணிக்கு அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து குளத்தின் 4 கரைகளிலும் மற்றும் குளத்திலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

    தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

    பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார், தீயணைப்பு வீரர் கள், அறநிலையத்துறையினர், மருத்துவ குழுவினர், வருவாய்த்துறையினர், நகராட்சியினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கவுதமநதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்றவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகள் சிறப்புமிக்கது.

    தை மாதம் 5-ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசி மகத்தன்று கவுதம நதியிலும் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    மாசி மகம் நட்சத்திர தினமான நேற்று திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் அருணா சலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை சுமார் 9 மணியளவில் சந்திர சேகரர் திருவடிவில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் அவர் கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் தீர்த்த வாரிக்கு சென்றார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்தபோது, சிவபெருமானே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே, சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அதன்படி நேற்று தீர்த்தவாரி மற்றும் திதி அளித்தல் நிகழ்ச்சி கவுதம நதியில் நடைபெற்றது.



    கவுதமநதியில் தற்போது தண்ணீர் இல்லாததால் பெரிய தொட்டி ஒன்று கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. மேலும் அதனை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தீர்த்தவாரி முடிந்தபிறகு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குல சத்திரிய வள்ளால மகாராஜா மடாலய சங்கத்தலைவர் முன்னாள் எம்.பி. த.வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மேலும் மாசி மாத பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 11.53 தொடங்கி நேற்று இரவு 9.32 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை ஏராளமான மக்கள் கிரிவலம் சென்றனர். நேற்று காலை முதல் இரவு வரை கோவிலில் கூட்டம் அலைமோதியது. பகலில் வெயில் கொளுத்தினாலும், பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
    மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.
    மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. இதற்காக கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாக்குழு சார்பில் மேடைகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தீர்த்தவாரியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், எம்.எஸ்.அக்ரகாரம் கோதண்டராமர், ராமகிருஷ்ணாநகர் ஹயக்ரீவர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த ஆண்டு முதல் முறையாக மேல்மலையனூர் அங்காளம்மன் தீர்த்தவாரியில் கலந்துகொள்கிறார். இதற்காக வெளியூர்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் நேற்று இரவு புதுச்சேரி வந்தன. உற்சவ மூர்த்திகளுக்கு புதுவையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும் உற்சவமூர்த்திகள் ஒருசில நாட்கள் புதுவையில் தங்கி இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளனர்.

    புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீர்த்தவாரியை முன்னிட்டு முத்தியால்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வைத்திக்குப்பம் பகுதியில் இன்று வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வருவோர் தங்கள் வாகனங்களை பழைய சாராய ஆலை பகுதியில் நிறுத்திவிட்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். பகல் 1 மணிக்கு அஜந்தா சந்திப்பில் இருந்து முத்தியால்பேட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்கள்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரசித்தி பெற்ற மகாமக திருவிழா நடைபெறும். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரன்று மாசி மக திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டுக் கான மாசி மகத்திருவிழாவையொட்டி கும்பகோணம் மகா மகத்திருவிழா தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசி விசுவநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுத மேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதேபோல் 11-ந் தேதி வைணவ தலங்களான சக்கரபாணி சுவாமி கோவில், ராஜகோபால சுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    இந்த நிலையில் ஆதிகும் பேஸ்வரர் கோவிலில் நேற்று பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக காசி விசுவநாத சுவாமி கோவில், அபிமுகேஸ்வர சுவாமி கோவில், கவுதமேஸ்வரர் கோவில்களின் தேரோட்டம் மகாமகக்குள கரையில் நேற்று மாலை நடந்தது. இதேபோல் வியாழ சோமேஸ்வரர் கோவில் தேரோட்டமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



    மாசி மக திருவிழாவை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சக்கரபாணி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதையடுத்து மதியம் 12 மணியளவில் மகாமகக் குளகரையில் மாசி மக தீர்த்தவாரி நடந்தது. 10 நாள் உற்சவம் நடைபெறும் சிவன் கோவில்களான கொட்டையூர் கோடீஸ்வர சுவாமி, பாணபுரீஸ்வரர் கோவில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பேஸ்வரர், நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர் ஆகிய 6 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மகாமக குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை யடுத்து அந்தந்த கோவில் களின் அஸ்திர தேவருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி நடந்தது.

    அப்போது மகாமகக் குளத்தை சுற்றிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி - அம்பாளை வழிபட்டனர்.

    முன்னதாக இன்று காலை மாசி மக தீர்த்தவாரியையொட்டி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு மகா மகக்குளக்கரையில் தர்ப்பணம் செய்து பூஜை நடத்தி வழிபட்டனர்.
    ×