search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers demand"

    • கண்ணுக்குத் தெரியாத செல்களினால் மிளகாய் செடிகள் சேதம் அடைந்துள்ளது.
    • ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை மிளகாய் கிடைக்கும், 100 ஏக்கர் வரை விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியில் தற்போது மிளகாய் சாகுபடி கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது கண்ணுக்குத் தெரியாத செல்களினால் மிளகாய் செடிகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்..

    ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் தற்போது மிளகாய் பயிர் கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவு, உரம், ரசாயனம் உரம், தொழிலாளி கூலி என ஏக்கருக்கு 1½ லட்சம் வரை செலவு செய்துள்ளோம்.

    ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை மிளகாய் கிடைக்கும், 100 ஏக்கர் வரை விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.

    தற்போது கண்ணுக்கு தெரியாத வகையில் கருப்பு, வெள்ளை நிற செல்கள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.

    இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து உள்ளோம்.வேளாண் துறையினர் போதிய மருந்துகள் வழங்கப் படவில்லை. பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    • கொடைக்கானலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு நடந்தது.
    • கொடைக்கானல் - மூணாறு சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமசாமி, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜோசப், செந்தாமரை, சின்னு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தாலுகா மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வன விவசாயிகள் ஆகியோருக்கு 2006- ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். கொடைக்கானல் மலைப்பகுதியில் பட்டா வழங்க தடையாக உள்ள தடையாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கொடைக்கானலில் விளையக்கூடிய காய்கறிகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், உரம் பூச்சி மருந்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,

    கொடைக்கானல் - மூணாறு சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அஜய் கோர்ஸ் செல்லையா, பொன்னுச்சாமி, ஈஸ்வரன், பாண்டியராஜன், ராஜேஷ் கண்ணன், ராஜகோபால், தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சாந்தாவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், படைப்புழு தாக்குதலினால் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தரமற்ற மக்காச்சோள விதைகளை விற்ற நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் வழக்கு தொடர்ந்து விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் படைப்புழுவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசிடம் நிவாரணமாக வாங்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போதிய மழை பெய்யாததாலும், படைப்புழுவாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அவர்கள் வங்கிகளில் வாங்கியுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனமாக மாவட்டத்தில் அதிகமாக உள்ள மக்காச்சோள தோகைகளை மாவட்ட நிர்வாகமே கொள்முதல் செய்து விற்பனை செய்யலாம் என்றார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்லத்துரை பேசுகையில், எறையூர் சர்க்கரை ஆலை மூலமாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கி தொகையினை ரூ.31 கோடியே 93 லட்சம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் மின்மாற்றிகள் அடிக்கடி பழுதாகிறது. அதனை பழுது செய்ய கால தாமதம் ஆகுவதால் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே பெரம்பலூர் நான்கு ரோட்டில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் மின்மாற்றிகளை பழுது செய்ய தொழில் பிரிவு பணிமனை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னமுட்லு நீர்த்தேக்கம் விரைவாக அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், அதிகமாக பால் உற்பத்தியாகும் பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தி ஒன்றியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட பத்திரவு பதிவுத்துறை அலுவலகம் திறக்க வேண்டும். மக்காச்சோளத்திற்கு ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், போதிய அளவு மழை பெய்யாததால் பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டை தடுக்க வேண்டும் என்றார்.

    தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், சுமார் 65 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர் படைப்புழுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அரசிடம் நிவாரணம் கேட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மனுக்கள் அளித்துள்ளனர். எனவே உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து கலெக்டர் சாந்தா கூட்டத்தில் பேசுகையில், விவசாயிகள் மாற்று பயிர்களாக உளுந்து பயிர்களை சாகுபடி செய்யவும், மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகமாக இருப்பதால் வேளாண் துறையினர் மூலமாக கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து கணக்கெடுப்பு செய்து நிவாரண நிதி வேண்டி அறிக்கையினை வேளாண்மை இயக்குனரகத்திற்கும், வருவாய்த்துறை ஆணையருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சின்ன முட்லு அணை கட்டுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கலைவாணி, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சந்தானகிருஷ்ணன், ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குனர் பாரதிதாசன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  #tamilnews
    ×