search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children Care"

    நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. நிமோனியா காய்ச்சலின் அறிகுறியையும், தடுக்கும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.
    நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. மிக அதிகமான குழந்தைகள் இறப்பதற்கும், நோய்த் தாக்கத்தால் மோசமான பின்விளைவுகளுக்கும் மிக முக்கியமான காரணமாக இருப்பது நிமோனியா காய்ச்சல்தான்.

    அறிகுறிகள்


    * காய்ச்சல்
    * இருமல்
    * அதிகமாக மூச்சு வாங்குதல் (மூச்சு விடும் எண்ணிக்கை)
    * மூச்சுவிட கஷ்டமாக இருத்தல்.

    காரணங்கள்

    * குறைந்த எடை
    * ஊட்டச்சத்துக் குறைபாடு
    * வைட்டமின் - ஏ குறைபாடு
    * தாய்ப்பால் இல்லாமை
    * சிகரெட் புகை

    போன்றவை மிக முக்கியக் காரணங்கள். இவை தவிர, அதிகம் பேர் உள்ள குடும்பம், வீட்டில் இருப்பவர்களுக்கு நுரையீரல் நோய் இருத்தல், அதிக மக்கள் வசிக்கும் இடத்தில் வசிப்பது, மாசுபாடான காற்றை வீட்டிலும், வெளியிலும் சுவாசித்தல் போன்றவையும் நிமோனியா நோய் வரக் காரணங்களாக இருக்கின்றன.
    பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாதமே ஆன குழந்தைகளுக்கு நிமோனியா வருவதற்கு, குரூப் - பி ஸ்ரெப்டோ காக்கை, ஈகோலி, கிளப்ஸியெல்லா, ஸ்டெஃபைலோ காக்கை போன்றவை முக்கியக் காரணம்.

    3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரையுள்ள குழந்தைகளுக்கு, நீமோகாக்கை, ஹெச்&இன்ஃபுளூயன்சா, ஸ்டெஃபைலோ காக்கை போன்றவை நிமோனியா காய்ச்சலை ஏற்டுத்துகின்றன.

    ரெஸ்பரேட்டரி சின்சைட்டியல் வைரஸ், இன்ஃபுளூயன்சா வைரஸ், பாரா இன்ஃபுளூயன்சா வைரஸ், அடீனோ வைரஸ் போன்றவையும் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிக் காரணமாக இருக்கின்றன.

    ஐந்த வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் கிருமிகள்தான் அதிக அளவில் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.



    வைரஸ்களால் ஏற்படும் அறிகுறிகள் :


    * மூக்கில் நீர் வடிதல்
    * இருமல்
    * காய்ச்சல்
    * அதிகமாக மூச்சு வாங்குதல் (மூச்சு விடும் எண்ணிகை)
    * மூச்சு விடுவதற்குக் கஷ்டம்
    * உடல் நீல நிறமாக மாறுதல்
    * மூச்சுவிட முடியாமல் சோர்வு

    பாக்டீரியக்களால் ஏற்படும் அறிகுறிகள் :


    * நடுக்கத்துடன் குளிர்
    * அதிகமான காய்ச்சல்
    * இருமல்
    * நெஞ்சு வலி
    * அதிகமாக மூச்சு வாங்கதல் (மூச்சு விடும் எண்ணிகை)
    * கவலை - சோர்வு
    * நினைவிழப்பு

    மேற்கண்ட அறிகுறிகளுக்கு உடனே சிகிச்சை அளிக்காவிட்டால், நெஞ்சில் சீழ் பிடிக்கும்.

    தடுக்கும் முறைகள் :

    * குழந்தைத் தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் மற்ற உணவு வகைகளையும் கொடுக்க வேண்டும்.

    * புட்டிப்பால், டின் பவுடர் பால் கொடுக்கக்கூடாது.

    * குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாரும் சிகரெட் பிடிக்கக்கூடாது.

    * சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.

    * குழந்தை பிறந்தவுடன் தக்க தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும்.

    * அவ்வப்போது குழந்தை வயதுக்கேற்ற சரியான எடையுடன் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து சரிவிகித உணவு கொடுக்க வேண்டும்.

    * சளி, மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் இருந்தால் உடனே டாக்டரிடம் காட்டி, நோய் தீவிரமாகாமல் தடுக்க வேண்டும்.
    சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் `ப்ரீ’யாக விட்டுவிடுவார்கள்.

    அவ்வாறு செய்பவர்கள், ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று யோசித்திருக்க மாட்டார்கள்.

    உங்கள் குழந்தையும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதற்கு காரணம், இதுதான்…

    பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

    டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
    பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும்.
    பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை நாலு பேர் முன் பாராட்டுவது அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மேன்மைப்படுத்தவும் உதவும்.

    அதோடு நீங்கள் அவர்களை உளப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்பதையும் அது அவர்களிடத்தில் பதிவு செய்யும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. தவறு செய்தால் அடிப்பது சரியான அணுகுமுறையல்ல. மேலும் நம் மீதுள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பிருக்கிறது.

    குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களிடம் அடிதடி வரை போகும் பின்னணிக்கு இது தான் காரணம். தாங்கள் பட்ட அவமானத்தை அவர்கள் இப்படித் தீர்த்துக் கொள்வார்கள். பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.

    பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். அதைவிடுத்து காட்டுத்தனமாக அடிப்பது பெற்றோரை அநாகரீகமாக காட்டும் செயல். 
    குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லக் கேட்டு தெரிந்து கொள்வதை விட, பெற்றோரையும் மற்றோரையும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது.
    ஆம்பூரில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் சிறுமி ஹனீபாஜாரா போலீஸ் நிலையத்தில் தன் தந்தை மீதே ஒரு விசித்திர புகார் கொடுத்தார். அதில், தன் வீட்டில் கழிவறை கட்டக்கோரி தந்தையிடம் கேட்டதாகவும் அதற்கு படிப்பில் முதலிடம் எடுத்தால் கழிவறை கட்டி தருவதாக அவர் உறுதி அளித்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக படிப்பில் முதலிடம் பெற்ற பின்னரும் கழிவறை கட்டித்தராமல் ஏமாற்றி வருவதாகவும் கூறி இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் தூய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் அந்த சிறுமி வீட்டில் தனி நபர் கழிப்பறை கட்டிக்கொடுக்க உத்தரவிட்டார்.ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் அச்சிறுமியை தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக நியமித்து உத்தரவிட்டார்.

    சமூக வலைதளங்களில் வைரலான ஒரு செய்தி என் மனதை வருடியது. பயணம் செய்யும் தாயும், அவருடைய ஆறு வயது குழந்தையும் புத்தகம் படித்துக்கொண்டிருந்தனர். உடன் பயணிப்பவர்களுக்கு ஆச்சரியம். ‘என் குழந்தை எத்தனை அறிவுறுத்தினாலும் கேட்பதில்லை. கைபேசியில் விளையாடத்தான் விரும்புகிறது.

    உங்கள் குழந்தை எப்படி அமைதியாக படிக்கிறது? நீங்கள் என்ன சொல்லி குழந்தைக்கு புரிய வைத்தீர்கள்?’ என்று ஒருவர் அந்ததாயிடம் கேட்டார். அதற்கு அந்த தாய் ‘குழந்தைகள் நாம் சொன்னால் கேட்பதில்லை. அவை நம்மைப் பார்த்துதான் கற்றுக்கொள்கின்றன’ என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் நிறைய கற்றுக்கொள்கின்றன என்பது தான் உண்மை. கடந்த வருடம் தொலைக் காட்சிப்பெட்டியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறார் தந்தை. ஆனால் மகன் அவருடன் செல்ல மறுத்து அழுகிறான்.

    என்னவென்று கேட்டபோது ‘நீ ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுகிறாய். அதனால் உன்னுடன் வர மாட்டேன்’ என்கிறான் மகன். தந்தை தன் தவறை உணர்ந்து ஹெல்மெட் அணிந்து அவனை அழைத்துக் செல்கிறார். ஒரு குழந்தை காயம் பட்ட சமயத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அழுதால் ஏதோ ஒரு காரணத்துக்காக அது போராடுகிறது என்று பொருள். இந்தக் குழந்தை போராடி தன் தந்தை செய்கின்ற தவறை எடுத்துச் சொல்லி அவரை திருத்துகிறதா?

    “பாடியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாகனம் ஓட்டும் பெற்றோர் ஒரு மாதத்தில் எத்தனை முறை சாலை விதிகளை மீறியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து ஒவ்வொரு மாணவரும் மாதாந்திர அறிக்கை தரவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அப்பெற்றோருக்கு தம் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்போகிறது” என்று என் நண்பர் ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். பிள்ளைகள் பெற்றோரைத் திருத்தப்போகிறார்களா?

    பள்ளி மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்குச் செல்வது, சாதிச் சண்டைகளில் ஈடுபடுவது, பெண் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் கற்பழிப்பு போன்ற கொடிய பாலியல் தொல்லைகள் கொடுப்பது, பள்ளிக்கு விடுமுறை வேண்டி சக மாணவனைக் கொலை செய்வது, குண்டு வைத்துள்ளதாக பள்ளி நிர்வாகத்தை மிரட்டி விடுமுறை விடச் செய்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, அடிப்பது, தற்கொலை மிரட்டல் விடுவது மற்றும் தேர்வு எழுதுவதில் தில்லு முல்லுகள் செய்வது போன்ற நிகழ்வுகள் இந்நாட்களில் கூடிக்கொண்டே இருக்கின்றன.



    பற்றாக்குறைக்கு தொலைக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் குடும்பத்தின் சிந்தனையை சீக்கு பிடிக்க வைக்கின்றன. குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லக் கேட்டு தெரிந்து கொள்வதை விட, பெற்றோரையும் மற்றோரையும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது. எனவே யார் இப்போது திருந்த வேண்டும். குழந்தைகளா? பெற்றோரா? யார் யாரைத் திருத்துவது?

    இந்த செய்திகள் எனக்கு பெரிய ஆறுதலையும் நிம்மதியையும் கொடுத்தது. இன்றைய தலைமுறையை திருத்த வேண்டுமானால் முதலில் நேற்றைய தலைமுறையைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் இச்சமூகம் உள்ளது. நாம் உருவாக்கும் ஆட்சியாளர்கள் சமூகத்துக்கு வேண்டிய மாற்றங்களை நிகழ்த்தாத நிலையில் மக்களேதான் அந்த மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

    இத்தலைமுறை மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஆட்சியாளர்கள் தோற்றுப் போனால் அதைச் செயல்படுத்தும் அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆசிரியர்கள் தான்கல்வி வியாபாரமாகாத காலத்தில் அரசுப் பள்ளிகள் அதிகமில்லா விட்டாலும் ஒவ்வொரு பள்ளியிலும் நிரம்பி வழிந்தன. “வாத்தியாரைய்யா எம் பையனுக்கு பாடம் சொல்லிக் குடுங்கய்யா அடங்க மாட்டேன்கிறான். தலையைத் தவிர்த்து உடம்பெல்லாம் எங்கு வேண்டுமானாலும் அடிச்சி சொல்லி கொடுங்கய்யா” என்று தம் மகனை ஆசிரியர்களிடம் ஒப்பவித்தவர்கள் அதிகம்.

    அன்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஒழுக்கசீலர்களாக வாழ்ந்து மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். ஆனால் இக்கால ஆசிரியர்கள் சமூகத்தையே மாற்றக் கூடிய மனிதத்தை வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இது மிக கடினமான ஒன்று அன்றைய பெற்றோர் சமூகம் மனிதத்தை வளத்தெடுக்க உதவியது.

    இன்றைய பெற்றோர் சமூகம் தங்களை அறியாமலேயே மனிதத்துக்கு எதிராக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் தலைவர்கள் வளர்த்தெடுக்கும் சமுதாயத்தில் ஒவ்வொரு தலைமுறையும் கூடுதலான சுயநலம் கொண்டதாகவே வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்டிப்பிடித்துக் கொண்டுள்ளது.

    தம் பிள்ளைகளை டாக்டராக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் ஆக்க வேண்டும் என்ற தம் கனவை நனவாக்கவே வளர்ந்து கொண்டிருக்கும் நியூகிளியர் குடும்பங்கள் அதிபெரும்பான்மையாக உள்ள சமூகம் இது. சட்டங்களின் குறைபாடுகளை நன்கு அறிந்த சமூகம் எளிதில் திருத்த இயலாத சமூகம். இவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியே உள்ளது.

    யார் சொன்னாலும் இவர்கள் மாறப்போவதில்லை. ஆனால் லஞ்சம் வாங்கும் தந்தையிடம் “நீ லஞ்சம் வாங்கிய பணத்தில் என்னைப் படிக்க வைத்தால் நான் படிக்கமாட்டேன் உடுத்தமாட்டேன். உண்ணமாட்டேன்” என்று மகனோ, மகளோ புரட்சி செய்தால் நிச்சயம் தந்தை திருந்துவார். ஆசிரியர் சமூகம் முயற்சி செய்தால் குழந்தைகள் மூலமே தற்போதைய தலைமுறையை மாற்ற முடியும்.

    மு.அசோக்குமார், ஐ.பி.எஸ்.,
    போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு)
    பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். இந்த பழக்கத்தை மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
    குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

    மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது.

    பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும்.

    நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும். டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

    விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.

    4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம்.

    குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம். எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். 

    அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.
    படிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் குழந்தைகள் வீடு மாற்றம் செய்யும்போது, சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள அதிக சிரமம் அடைகிறார்கள்.
    தற்போதைய காலகட்ட வாழ்க்கை முறைகளில் பணியிட மாற்றம், வாடகை மற்றும் சொந்த வீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பலரும் குடியிருக்கும் வீடுகளை மாற்றம் செய்வதுண்டு. அந்த நிலையில், வளரும் குழந்தைகள் வீடு மாற்றத்திற்கேற்ப தங்களை சீரமைத்துக்கொள்வதில் சிரமம் அடைவதாக மன நல வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    நிம்மதியான வீட்டு சூழல்

    அதாவது, ஒரே இடத்தில் வளரும் குழந்தைகளுக்கு நிம்மதியான வீட்டு சூழலில் பெற்றோருடன் இணைந்து வசிப்பதால் திடமானவர்களாக வளர்கிறார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. அந்த நிலையில் படிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் குழந்தைகள் வீடு மாற்றம் செய்யும்போது, சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள அதிக சிரமம் அடைகிறார்கள்.

    குழந்தைகள் மன நலம்

    நல்ல நட்பு உள்ளிட்ட சுற்றுப்புற தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதிலும் குழந்தைகள் தடுமாறுகிறார்கள். அதன் காரணமாக வீடு மாறுவது அல்லது புதியதாக வீடு வாங்கி குடியேறுவது போன்ற நிலைகளில் சிறு குழந்தைகளின் மன நலனுக்கு ஏற்ற சூழலை கருத்தில் கொண்டு செயல்படுவதும் அவசியமானது.

    சூழல் அறிமுகம்

    வாடகை வீட்டிலிருந்து புதுவீடு வாங்க முடிவு செய்யும் நிலையில் குழந்தைகளின் படிப்பு, நட்பு வட்டம், செயல்திறன் உள்ளிட்ட பல விஷயங்களை கணக்கில் கொள்வது பெற்றோர்களுக்கு அவசியமானது. அவ்வாறு வீடு வாங்கும் நிலையில் குழந்தைகளின் மனதில் புது வீடு பற்றிய ஆவலை ஏற்படுத்தி, அங்குள்ள சூழலுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பழக்கம் ஏற்படுத்தி பின்னர் குடியேறுவதும் ஒரு வகையில் நல்லது.

    படிப்பு மற்றும் விளையாட்டு

    வாடகை வீடு அல்லது சொந்த வீட்டில் குடியேறும்போது அவற்றின் சுற்றுப்புற சூழ்நிலைகள், குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களது விளையாட்டு மற்றும் வீட்டுக்கு அருகில் பள்ளி ஆகிய விஷயங்களுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.



    அமரும் சேர்கள்

    குறிப்பாக, வீடுகளில் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற பிரத்யேகமான நாற்காலி, மேசை, ஊஞ்சல் போன்றவற்றை வாங்குவது அவசியமானது. வழக்கமான பர்னிச்சர் வகைகளை விடவும் அவர்களின் உடல் அளவிற்கு பொருத்தமாக பிரம்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட சிறு கூடை சேர்கள் குழந்தைகள் கச்சிதமாக அமர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    குழந்தைகள் ‘டைனிங்’

    பொதுவாக, வீடுகளில் டைனிங் டேபிள் மற்றும் சேர்கள் பெரியவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனால், குழந்தைகளுக்கான பிரத்யேக டைனிங் சேர்களை பயன்படுத்தலாம். அவை, உயரம் கூடுதலாகவும், அதன் பகுதி குறுகலாகவும் இருப்பதால் அதில் உட்கார்ந்து சாப்பிடும் குழந்தைகள் டேபிளில் வசதியாக சாப்பிடுவார்கள்.

    படிப்பு மேசை

    பொதுவாக, குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக படிப்பு மேஜை இருந்தால் அவர்களின் கவனம் சிதறாது. உட்காரும் சேரிலேயே இணைந்த மேஜை, சேரில் ஒரு பலகை இணைத்து அதன் மேல் புத்தகம் வைத்து கொள்வது போன்ற எளிய மாடல்கள் அவர்களுக்கு ஏற்றது.

    குட்டி ஊஞ்சல்

    சிறு ஊஞ்சல் அல்லது சாய்ந்து ஆடக்கூடிய ராக்கிங் சேர், குட்டியான சைஸ் கொண்ட பீன் பேக், பொம்மை, துணிகள் போன்றவற்றை சுலபமாக வைத்து எடுப்பதற்கு வசதியான அலமாரிகள் வீடுகளில் இருப்பது அவர்களுக்கு குஷியாக இருக்கும். குழந்தைகள் உறங்க வசதியான பங்கர் கட்டில்களும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
    சரியாக பேசாத குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.
    ஒரு வயதில் குழந்தை ஒரு வார்த்தை பேச வேண்டும். உதாரணமாக மா, பா, தா, போன்றவை. ஒன்றரை வயதில் குழந்தை அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதில் 30 அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதுக்கு மேல் வாக்கியங்களாக பேச வேண்டும்.

    பிறவியில் இருந்தே கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு (உதாரணமாக புட்டிப்பாலை சப்பி குடிப்பதால் குழந்தைக்கு நுனி நாக்கும், மேற்தாடையும் சேர்த்து உச்சரிக்கும் வார்த்தை வராது), அடிநாக்கில் தசைப்பிடிப்பு உள்ள குழந்தைகளுக்கு, பல மொழிகள் பேசும் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பேசும் திறன் தடைபடும்.

    நம் தாய்மொழி தமிழாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளிடையே ஆங்கிலத்தில் பேசுவது, கதைகள் மற்றும் பாடல்கள் கூறுவதால் குழந்தைக்கு தாய் மொழி தொடர்பு இல்லாமல் போகும்.

    அதனால் குழந்தையிடம் பேசும் போதும், குழந்தை அருகில் இருக்கும்போதும் தாய்மொழியில் பேச வேண்டும். தாய்மொழியில் பேசும் குழந்தை எளிமையான எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள இயலும்.

    புத்திக்கூர்மை நன்றாக இருந்தும் பேசும் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் பள்ளியில் அனைவருடன் இணையாமல் தனிமைப்படுத்தப்படுவர். ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் போவதால் குழந்தைக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.
    குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

    * வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.
    பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை போட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது பின்னணி என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்க வேண்டும் இல்லையென்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று பல பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு.

    ஆனால் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

    நாம் அம்மாவின் கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்ற தண்ணீர் நிறைந்த சூழலில் இருந்திருக்கிறோம். அதில் உள்ள கழிவுகள் தலையில் தேங்கியிருக்கும். சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தாலே கை கழுவிய பிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10 மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல் எந்தளவு ஊறியிருக்கும். உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் தலையில் தேங்கிய கழிவுகள் முடியில் வேர் கால்கள் வழியாகத் தான் வெளியேறும்.  

    அதனை வெளியேற்ற என்ன வழி மொட்டை அடித்தால் மட்டுமே அந்த வேரின் வழியாக தேங்கியிருக்கும் கழிவுகள் வெளிவரும். இது தான் உண்மையான காரணம். ஆனால் இப்படி கூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும் கேட்பர்.

    எதையும் தெய்வீக ரீதியாக கூறினால் நம் மக்களின் செவிக்கு எட்டும். இதே போல் 3 வயதிலும் ஒரு மொட்டை அடிப்பர் அதற்கு காரணம், ஒரு வயதில் அடித்த மொட்டையில் சில கழிவுகள் வெளிவராமல் இருக்கும். அப்படி வராமல் இருக்கும் கழிவுகள் 3 வயதில் அடிக்கும் மொட்டையில் வந்துவிடும்.

    இதற்காகவே ஒரு வயதிலும், மூன்று வயதிலும் மொட்டை சாமியின் பெயரில் அடிப்பர். இதன் உண்மை பின்னணியே இதுதான். முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின் ஒரு அறிவியல் பின்னணி இருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.

    அதை கண்டுகொள்ளாமல் மொட்டை அடித்து கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டால், பிற்காலத்தில் குழந்தைக்கு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். 
    டேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் செய்வார்கள்.
    டேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் பின் நன்றாக தூங்கவும் செய்வார்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் யாருமற்றவர்களாகவும் பணிக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் பெண்களுக்கு டேகேர் ஒரு மிகப்பெரிய கொடை.

    இப்படி நகர வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று டேகேர்களும், க்ரீச்களும் மாறிவிட்ட சூழலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டே கேர்கள் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? பெரும்பாலானவர்கள் ஏசி ரூம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஏசி ரூம் மட்டுமல்ல அது இல்லாத காற்றோட்டமான இயற்கையான வெளிச்சம் கொண்ட அறைகள் இருக்க வேண்டுமென எதிர்பாருங்கள். ஏசி ரூம் என்று சொன்னாலும் அது ஜன்னல், கதவு என அடைத்திருக்கும் சிறை என்று தான் குழந்தைகளுக்கு தெரியும். காற்றோட்டமுள்ள அறைகள் அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் விடுவிப்பையும் கொடுக்கும் விளையாட வெளியில் இடமும் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

    சரியாக கவனித்துக்கொள்ள முறையாக படித்த ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் உதவியாளர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள். டாய்லெட் பாத்ரூம்களை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்கிறார்கள் என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள். டையஃபர்கள் மாற்றும் போது நன்றாக கழுவி துடைத்து பவுடர் போட்டு விட்டு மாற்ற வேண்டுமென அறிவுறுத்துங்கள். அந்த இடம் குழந்தைகளுக்கு பழகிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க பாத்ரூம்தான் போக வேண்டுமென சொல்லிக் கொடுக்க சொல்லுங்கள். சீக்கிரமே டையஃபர் பழக்கம் மாறிவிடும்.

    மற்ற குழந்தைகளுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பதால் குழந்தைகளின் பேச்சுத்திறன் வெகுவிரைவில் வசப்படும். முதலில் இரண்டு மணி நேரம் மூன்று மணிநேரம் என விட்டு அழைத்து வாருங்கள். இடமும் பிடித்த நண்பர்களும் அமைந்து விட்டால் அவர்களே பையை தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவார்கள். மற்ற குழந்தைகள் என்ன செய்கிறார்களோ அதையே திரும்ப செய்யவும் பழகுவார்கள். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அனைத்தையும் எதிர்பார்க்க பழகிக் கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் வளர்ச்சியில் டே கேர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பிறருடன் பழகவும் விளையாடவும் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தையும் ஏற்படுத்தும். நமக்குத்தான் இவர்கள் குழந்தைகள். சமுதாயத்திற்கு இவர்கள் நல்லதொரு மனிதர்களாகவும் மற்ற கலாசாரங்களை மதிக்கவும் தங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இவர்களுக்கு முதல் பயிற்சி கூடம்தான் இது.

    கண்ணீருடன் குழந்தையை டேகேரில் விட்டுவிட்டு வராதீர்கள். இந்த இடம் உனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை குழந்தைக்கு உங்கள் செய்கைகளின் மூலம் உணர்த்துங்கள். நம் குழந்தைகள் மனம் விரும்பும் இடத்தினை சரியாக தேர்ந்தெடுத்து அவர்களை உற்சாகமாக அனுப்புங்கள். 
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும். தங்கள் பெற்றோரிடம் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். சின்ன வி‌ஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள்.

    கெட்ட வார்த்தைகள்கூட பேசுவார்கள். குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படி தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாக தங்கள் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.

    கடும் வார்த்தைகளை பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதை பார்க்கலாம். பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம்.

    பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான். இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தை பெற்றோர் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும். ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கை கைவிடாது.

    ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களை பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு கற்றுக்கொடுப்பது அவசியமானது. விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, ரூபிக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தை குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும்.

    வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும். கணிப்பொறியில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும்போது சுவிட்ச் ஆப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில் அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.

    குழந்தை பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்பு உண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சி அடையும். குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால் அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தை பருவத்திலேயே இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வது அவசியம்.

    குழந்தைகளோடு செலவழிக்கும் நேரங்கள் உறவுகளின் முதலீடு. அதில் அவர்களோடு விளையாடி அடிக்கடி தோற்றுப்போனால், வாழ்வில் வெற்றியே.
    இன்று (நவம்பர் 14-ந்தேதி) குழந்தைகள் தினம்.

    குழந்தைகள் ஒரு குடும்பத்தின் பொக்கிஷம். இந்த தேசத்தின் அற்புதம். உலகத்தின் உன்னதம். அவர்கள் தெய்வத்தின் மறு வடிவங்கள். இந்த மண்ணை துளிர்விக்கும் பசுமைபோல், மனதை குளிர்விக்கும் அன்பு மேகங்கள். வாழ்வின் எதார்த்தங்கள். வருங்கால மனிதனுக்கு தனது தலைமுறையை எடுத்துச் செல்லும் புதிய மரபணுக்கள். இம்மண்ணில் தவழும் நிலவுகள்.

    குழந்தை ஓர் அற்புதமான கவிதை. உருவத்தில் தெரிவது அல்ல குழந்தை. அது கவிதைபோல் கருவில் உருவாக்கப்படுவது. ஆதலால், வகுப்பறையில் கற்பதற்கு முன்பே, கருவறையிலேயே அது நிறைய உருக்கொள்கிறது. கருவிற்குள் இருக்கும் குழந்தைக்கு தாய் கற்றுக் கொடுப்பதைத்தான், அது பிறந்ததும் மண்ணில் பிரதிபலிக்கிறது.

    குழந்தை மொழி இனிது. மழலை இனிதினும் இனிது. கவிதையை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த மனிதனுக்கு, சந்தங்களின்றி வருகின்ற கவிதையும் மகிழ்விப்பதைப்போல், தம்மக்கள் மழலைச் சொல் யாழினிலும், குழலினும் இனிதெனப் புரியுமென்கிறார் திருவள்ளுவர். அமிழ்தம் உணவாகக் கிடைப்பது அரிது. உணவினை அமிழ்தாக்க அன்புக் கரங்களில் குழந்தைக்கு ஊட்டி மகிழுங்கள். குழந்தையும் அதேபோல் தன் சிறுகையில் கூழினை அளாவி ஊட்டும். அது அமிழ்தினும் இனிதென்பது சுவைத்தவர் பெருமிதம். இது வள்ளுவரின் வாழ்வியல் அனுபவம்.

    ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடமும், முழுவதுமான பள்ளிக்கூடமும் பெற்றோரே. “மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு அனுப்பவேண்டாம்” என்று எழுதித் தந்த ஆசிரியரின் கடிதத்தை அம்மாவின் கையில் புரியாத வயதில் தந்தான் சிறுவன். அதைப் படித்துவிட்டு, அழுகையை மனதோடு அடக்கிக்கொண்டு, சத்தமாய் மகனிடம் “உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கேற்ப, அவனுக்கு கற்பிக்கும் திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை” என்று வாசித்தார் அந்த தெய்வீகத் தாய். அத்தாய் வீட்டினை பள்ளிக்கூடமாக்கினார். மகன் பின்னாளில் அதை ஆய்வகமாக்கினார். மூளை வளர்ச்சியில்லாத தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் அந்த குழந்தை, இன்று உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தனது பெயரை உச்சரிக்கும் பெருமை பெற்றது அவர் அன்னையாலே.

    ஆபிரகாம் லிங்கன் தனது குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்போது அவனுக்கு கற்றுக் கொடுக்கவேண்டியவற்றை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதினார். ஒவ்வொரு ஆசிரியரும், அதனை வகுப்பறை செல்வதற்கு முன் படித்துவிட்டு குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், மொழியின் இலக்கணங்களை அறிவதற்கு முன்பு, வாழும் இலக்கணங்களை ஒவ்வொரு குழந்தையும் அறியும். ஓர் அற்புதமான மனித சமுதாயம் இம் மண்ணில் பரிசாய் அமையும். பெற்றோர்கள்தான் ஒவ்வொரு குழந்தையின் முன்மாதிரிகள். ஒவ்வொரு குழந்தையும் இம்மண்ணில் பிறக்கின்றபோது ஓர் ஆலமரத்தின் விதையைப்போல், அசாத்தியமான சக்தியோடு பிறக்கிறது. அதனைச் சரியான முறையில் வளர்த்தெடுத்தால் அக்குழந்தைகள் அற்புதங்களை நிகழ்த்தும்.



    குழந்தைகள் மாயக் கண்ணாடிகள். ஒன்றை பலவாய் பிரதிபலிப்பவர்கள். அவர்களிடம் புன்னகைத்தால், நிறைய சிரிப்பர். திட்ட ஆரம்பித்தாலோ, வசைபாடுவர். அன்பாய்க் கொஞ்சினால் பாசமழை பொழிவர். பாராட்டினால் வாழ்த்துப் பூமாலை சூடுவர். பகைத்தால் போர் புரிவர். சிறு சேட்டைகளைச் சகித்தால், பொறுமையின் இலக்கணமாவர். கிண்டலடித்தால், வெட்கித் தலைநிமிரார். ஊக்கப்படுத்தினால், நம்பிக்கையின் தும்பிக்கையாயிருப்பர். அவமானப்படுத்தினால், குற்றவாளிபோல் கூனிக் குறுகிடுவர். அங்கீகரித்தால், உலகம் விரும்பும் மனிதராவர்.

    நேர்மைப்படுத்தினால் நீதிமானாய் ஜொலிப்பர். மொத்தத்தில் நாம் விதைப்பது எவ்விதையாயிருப்பினும், வளர்ந்ததும் மரங்கள் ஒரு விதையை மட்டும் தருவதில்லை. அதுபோல் ஓராயிரமாய் மகிழ்ந்து தருவர் குழந்தைகள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளாலும், பெற்றோர்களாலும், குழந்தைகளின் பேச்சுத்திறன் பாதிக்கப்படுகிறது. அவர்களின் உடல் பருமனாகிறது. சிறுவயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர் என்பது ஆராய்ச்சியின் எச்சரிக்கை. மகாகவி பாரதி போல் “ஓடி விளையாடு பாப்பா!” என்று ஓடச் சொல்லிக் கொடுக்கும் தந்தை இந்த தேசத்தின் ஆரோக்கியத் தூண்.

    மனதிற்கு ஒரு கலையையும், உடலுக்கு ஒரு விளையாட்டையும் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும் குழந்தை நம் தேசத்தின் உயிர்ப்பு. அதை ஒவ்வொரு குழந்தையிலும் விதைப்போம்.

    குழந்தைகள் பெற்றோர்களின் பிம்பங்கள். ஒரு குழந்தையின் தாத்தா இறந்ததும் அவரது அறை சுத்தம் செய்யப்பட்டது. அதிலிருந்த தேவையற்றவைகள் தூக்கியெறியப்படுகின்றன. தாத்தா சாப்பிட்ட நசுங்கிய தட்டை மட்டும் குழந்தை வீட்டிற்குள் கொண்டு வந்தது. “இதை ஏன் எடுத்து வந்தாய்?” என்று தந்தை கேட்டார். அப்பா! நீங்க வயதானதும் உங்களுக்கு சாப்பாடு போடுவதற்குத்தான்! என்றது குழந்தை. வளர்த்த தந்தையை கொச்சைப்படுத்தியவருக்கு, தந்தையாகிய குழந்தை சொல்லிக்கொடுத்த பாடம் இது.

    குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அதிகமாக விளையாட விரும்பும். அதனைத் தொந்தரவு என நினைத்து அவர்களை அமைதிப்படுத்த அவர்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ அல்லது ஒரு செல்போனையோ கையில் கொடுக்கும்போது குழந்தைகள் அமைதியாகிவிடும். அதுபோல், சமூக வலைதளங்களில் சிக்கிப்போகும் குழந்தை, விட்டில் பூச்சிகளாய் விரைந்து மடியும். குழந்தைகளை நெறிப்படுத்துவதும், வழிப்படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும். இல்லையெனில், அவர்களுக்கு தருகின்ற வாய்ப்புகள் துடுப்பில்லாத கலன்போல கடலில் மூழ்கிவிடும்.

    குழந்தைகளோடு செலவழிக்கும் நேரங்கள் உறவுகளின் முதலீடு. அதில் அவர்களோடு விளையாடி அடிக்கடி தோற்றுப்போனால், வாழ்வில் வெற்றியே.

    ஆர்.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்., துணைஆணையர், நுண்ணறிவுப்பிரிவு
    ×