search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைட்டமின்"

    • காபி பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.
    • கலோரி இல்லாத பானமாகவும் காபி விளங்குகிறது.

    காலையில் எழுந்தும் காபி பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். பால், காபி டிகாஷன், சர்க்கரை உள்ளிட்டவை ஒரு சேர கலந்து வெளிப்படும் காபியின் நறுமணத்தால் வீடே கமகமக்கும். அது காபி பிரியர்களை குஷிப்படுத்தினாலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றினால்தான் காபியை தொடர்ந்து பருக முடியும். உடலுக்கு கேடு நேராமல் பார்த்துக்கொள்ள முடியும்.

    பால் கலந்த காபியை விட சாதாரண கருப்பு காபி (பிளாக் காபி) பருகுவதுதான் நல்லது என்ற கருத்தை மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். அதில் சர்க்கரை, கொழுப்பு, கலோரிகள் சேர்க்கப்படாமல் இருப்பதால் காபியின் நன்மைகளை முழுமையாக பெற முடியும் என்றும் கூறுகிறார்கள்.

    பிளாக் காபியில் இயற்கையாகவே ஆன்டிஆக்சிடென்டுகள், வைட்டமின் பி2, பி3, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. மேலும் இது கலோரி இல்லாத பானமாகவும் விளங்குகிறது. உடல் எடையை சீராக பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவக்கூடியது.

    அல்சைமர் நோயை விரட்டும்:

    நினைவாற்றல் இழப்பு, சிந்தனை திறன் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் அல்சைமர் நோய் பாதிப்பால் ஏற்படக்கூடும். அன்றாடம் மேற்கொள்ளும் இயல்பான பணிகளை கூட செய்யவிடாமல் தடுமாற வைத்துவிடும். பிளாக் காபி பருகுவது அல்சைமர் நோய் அபாயத்தை குறைக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தினமும் 2 அல்லது 3 கப் கருப்பு காபி பருகுவதன் மூலம் அல்சைமர் நோய் அபாயத்தை 65 சதவீதம் குறைக்கலாம் என்பதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    எடை குறைப்புக்கு வித்திடும்

    பிளாக் காபியை தொடர்ந்து பருகுவது உடல் எடையை குறைக்கவும் உதவும். ஹார்வர்டு டி.எச். சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் மேற்கொண்ட ஆய்வில், உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் கருப்பு காபியை உட்கொள்வது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கருப்பு காபியில் உடல் எடையை குறைக்கவும், குளுக்கோஸ் உற்பத்தியை மெதுவாக்கவும் உதவும் குளோரோஜெனிக் அமிலங்கள் இருக்கின்றன. புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதையும் கட்டுப்படுத்துகின்றன. ஆதலால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கருப்பு காபி சிறந்த தேர்வாக அமையும். எனினும் பால், சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் காபியில் கலோரிகள் குறைவாகவே இருக்கும். அதனை கருத்தில் கொண்டு காபி பருகுவது நல்லது.

    உடல் ஆற்றலை அதிகப்படுத்தும்

    ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிளாக் காபி பருகுவது சோர்வை விரட்டும். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதனால் உற்சாகத்தோடும், உடல் வலுவோடும் உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கமும் மேம்படும்.

    நீரிழிவு நோயை விரட்டும்

    ஐரோப்பிய நீரிழிவு நோய் தடுப்பு அசோசியேசனின் அங்கமான டயபடோலாஜியா இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, கருப்பு காபி உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும். உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நீரிழிவு அபாயத்தை குறைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

    மனநிலையை மேம்படுத்தும்

    எடுத்த காரியத்தை சிறப்பாக செய்யவும், மனநிலையை அதிகரிக்கவும் ஒரு கப் பிளாக் காபி உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனதை விழிப்பு நிலையில் வைத்திருக்கவும் கருப்பு காபி துணைபுரியும். எனவே மனம் தளர்ந்து போகும் சமயத்தில் கருப்பு காபி பருகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

    எப்போது காபி குடிக்க வேண்டும்?

    காலை அல்லது பகல் பொழுதில் கருப்பு காபி பருகுவது சிறந்தது. இரவில் தூங்கும் முன் கருப்பு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    பக்க விளைவுகள்

    தினமும் 2 அல்லது 3 கப் பிளாக் காபி பருகலாம். அதற்கு மேல் பருகினால் தூக்க சுழற்சியை சீர்குலைத்து, தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மேலும் காபியில் காபின் நிறைந்துள்ளதால் அதனை அதிகம் பருகும்போது அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

    • வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    • உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும்.

    இதயம், நுரையீரல், மூளை உள்பட உடல் தசைகளின் சீரான செயல்பாட்டுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளுள் ஒன்றாக வைட்டமின்-டி விளங்குகிறது. மேலும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை உறிஞ்ச உதவுகிறது. உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உணவுகள், சூரிய ஒளிக்கதிர்கள் மூலம் பெறலாம். போதுமான அளவு வைட்டமின் டி உட்கொள்வதன் மூலம் உடல் எடை குறைத்தல், எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல், மனச்சோர்வை தடுத்தல், இதய நோய்களில் இருந்து பாதுகாத்தல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும், வைரஸ் நோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கச்செய்வதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடுமையான கொரோனா வைரஸ் தொற்று அல்லது அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைஅடுத்து உடலில் வைட்டமின் டி சத்தை வலுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேவேளையில் வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதுபற்றி பார்ப்போம்.

    உடலில் வைட்டமின் டி அளவு அதிகரித்தால் கால்சியத்தை உறிஞ்சும் அளவும் அதிகமாகும். அதன் காரணமாக பசியின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் உண்டாகும். மார்பு வலி, எரிச்சல், பதற்றம் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.

    உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில் வைட்டமின் டி அதிகமாகும்போது ரத்தத்தில் கால்சியம் அளவும் அதிகரித்துவிடும். அது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். காய்ச்சல், குமட்டல், வாந்தி அல்லது கடுமையான வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

    வைட்டமின் டி அளவு அதிகமானால் ரத்தத்தில் வைட்டமின் கே 2 அளவு குறைந்துவிடும். இதன் முதன்மையான செயல்பாடு எலும்புகளில் கால்சியத்தைப் பாதுகாப்பது தான். வைட்டமின் டி அதிகமாக உட்கொண்டால் அது வைட்டமின் கே 2 வின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். அதனால் எலும்புகளுக்கு பாதிப்பு நேரும். எலும்புகளில் வலி, கடுமையான முதுகுவலி, மூட்டுவலி, எலும்பு முறிவு ஆபத்து, எலும்புகள் உறுதியற்ற தன்மையில் இருப்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

    வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது ஹைபர்கால்சீமியா பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக இதய துடிப்பு ஒழுங் கற்ற நிலைக்கு மாறிவிடும். மேலும் கால்சியம் அளவு அதிகரிக்கும்போது இதயத்தின் தமனிகளில் கால்சியம் படியத்தொடங்கிவிடும். அது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

    வைட்டமின் டி அளவு அதிகரிக்கும்போது ரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவும் அதிகரித்துவிடும். அவை ஒன்றிணைந்து படிகங்களை உருவாக்கும். அந்த படிகங்கள் நுரையீரலில் படிவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் நுரையீரலின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். அப்படி நேர்ந்தால் இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மார்பு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

    ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரகம் சிறுநீரை பிரித்தெடுக்கும் செயலுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதன் காரணமாக கட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் சிறுநீர் கழிக்க நேரும். அதனால் நீரிழப்பு உண்டாகும்.

    வைட்டமின் டி அதிக அளவு உட்கொள்ளும்போது கணைய அழற்சி பிரச்சினையும் தோன்றும். எடை குறைதல், வயிற்றின் மேல் பகுதியில் வலி மற்றும் காய்ச்சல் போன்றவை கணைய அழற்சிக்கு ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக அமையும்.

    உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால் எலும்பு பலவீனம், முடி உதிர்தல், தசை வலி, மனச்சோர்வு, அடிக்கடி நோய்வாய்ப்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும். உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உணவுகள், சூரிய கதிர்கள் மூலம் பெறுவதே நல்லது. அப்படி இருந்தும் வைட்டமின் டி பற்றாக்குறையை சந்திக்க நேர்ந்தால் டாக்டர்களின் பரிந்துரையின் பேரிலேயே மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

    முட்டை, காளான், பால், பாலாடைக்கட்டி, மீன் வகைகளில் வைட்டமின் டி அதிகமாக இருக்கும். 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 8.5 முதல் 10 மைக்ரோ கிராம் வைட்டமின் டி தேவைப்படும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தினமும் 10 முதல் 20 மைக்ரோ கிராம் வைட்டமின் டி தேவைப்படும். இருப்பினும் ரத்த அளவை பராமரிக்க 25 முதல் 100 மைக்ரோ கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம் என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தினமும் அந்த அளவுக்கு வைட்டமின் டி சார்ந்த உணவுகளை உட்கொண்டால் போதுமானது.

    • வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல.
    • அன்றாடம் நார்ச்சத்து, நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்கத்திற்கு உதவும்.

    கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

    அதனால் வைட்டமின் சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சீரான உணவை உண்பது அவசியமானது. மேலும் நன்றாக தூங்கவும் வேண்டும். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.

    ஆண்டு முழுவதும் உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை பெரும் பாலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எனப்படும் இரண்டு முக்கிய கூறுகளால் ஆனவை. மனித உடல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைத் தாங்களே உற்பத்தி செய்யும் திறன் கொண் டவை அல்ல. ஆதலால் போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

    அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களும் தனித்துவமான குணங்களைக் கொண்டிருக்கின்றன. சாப்பிடும் உணவில் அவை போதுமான அளவு இல்லாதபோது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். அதனால் நோய்க்கிருமிகள் எளிதாக குடிகொண்டுவிடும். உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக பால் பொருட்கள், இறைச்சி பொருட்கள், முழு தானியங்கள் மற்றும் தினைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    நுண்ணூட்டச்சத்துக்களைத் தவிர, அன்றாடம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்க செயல்பாட்டிற்கு உதவும். அது குடல் ஆரோக்கியத்தையும், மூளையின் சரியான செயல்பாட்டிற்கான நீரேற்றத்தையும் உறுதி செய்துவிடும். எந்த ஊட்டச்சத்துக்களை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது பற்றி உணவியல் நிபுணரை கலந்தாலோசித்துக்கொள்வதும் அவசியம்.

    ×