search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "characters in legends"

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    கேது பகவான்

    புராணத்தின் படி ‘சந்திர கிரகணம்’ என்பது கேது பகவானால் ஏற்படும் ஒரு நிகழ்வாகும். அது சந்திரனை சில நேரங்களில் விழுங்கவும் செய்யும். இதனாலேயே சந்திரனுக்கும் கேதுவுக்கும், சமுத்ரா மந்தனின் போது பிரிவு ஏற்பட்டது. பாற்கடலில் இருந்த அமிர்தத்தை, தேவர்கள் பருகும்போது அசுரர்களின் ஒருவன் ரகசியமாக பருக வந்தான். அப்பொழுது மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிடம், சூரிய பகவானும் சந்திர பகவானும் இந்த விஷயத்தைக் கூறினர். விஷ்ணு தன் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தின் மூலம் அசுரனின் தலையை துண்டித்தார். அதில் ஒரு பகுதி ராகு எனவும், மறுபகுதி கேது எனவும் அழைக்கப்பட்டது.

    காவிரி நதி

    தென் இந்தியாவில் புனித நீராக கருதப்படுவது காவிரி நதி. குறுமுனி என்று அழைக்கப்பட்டாலும், தன்னுடைய தவ வலிமையால் மாமுனிவராக விளங்கியவர் அகத்தியர். சிவனிடம் இருந்து தமிழ் மொழியைக் கற்று, அதன் மூலம் தமிழில் இலக்கணம் படைத்தவர் என்று புராணங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட அகத்தியர் ஒரு முறை சிவபெருமானிடம் இருந்து புனித நீரை, தன்னுடைய கமண்டலத்தில் பெற்றுக்கொண்டு தென்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தென் பகுதி நீரின்றி, வறட்சியால் தவித்தது. இதனால் விநாயகர் காக்கையின் வடிவம் கொண்டு, அகத்தியரின் கையில் இருந்த கமண்டலத்தை தட்டிவிட்டார். இதனால் அதில் இருந்த நீர் பெருக்கெடுத்து நதியாக பாயத் தொடங்கியது. அதுவே காவிரி நதி என்று அழைக்கப்படுகிறது.

    கந்தவ காடு

    யமுனை நதிக்கரையில் இருந்த கந்தவ காட்டை ஒரு முறை அக்னி தேவன், தன் தீ ஜூவாலையால் எரித்துக் கொண்டிருந்தார். அந்த தீயில் நாகர்களில் முக்கியமானவரான தச்சன் உள்ளிட்ட நாகங்கள் பல சிக்கிக் கொண்டன. இதனைக் கண்ட இந்திரன், தன்னுடைய நண்பர்களான தச்சன் மற்றும் பிற நாகங்களை காப்பாற்றும் பொருட்டு, மின்னலை உண்டாக்கி மழையை பெய்ய வைத்தான். இதையடுத்து அக்னி தேவன், கிருஷ்ணனிடமும், அர்ச்சுனனிடமும் முறையிட்டார். கிருஷ்ணர், அர்ச்சுனனிடம் இதற்கு தீர்வு காணும்படி சொல்ல, அர்ச்சுனன் தன்னுடைய காண்டீபம் என்னும் வில்லில் இருந்து அம்புகளை சிதறச் செய்து, அதனை குடையாகப் பிடித்தான். இதனால் இந்திரன் தருவித்த மழை தடுக்கப்பட்டது. அதன்பின்னர் அக்னி கொழுந்து விட்டு எரிந்து, கந்தவ வனத்தை அழித்தது.

    கிருதயுகம்

    உலகத்தின் கால அளவுகள் 4 யுகங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகும். இதில் கிருத யுகம் முதன்மையானதான உள்ளது. இந்த யுகத்தில் வாழும் மனிதர்கள் அனைவருமே அறநெறியுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த கிருத யுகமானது 17 லட்சத்து 28 ஆயிரம் வருடங்கள் கொண்டதாகும். அதே போல் திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் வருடங்கள் கொண்டதாகவும், அதில் வாழ்பவர்கள் நான்கில் மூன்று பகுதியினர் அறத்துடனும், ஒரு பகுதியினர் அறமின்றியும் வாழ்வார்கள். அடுத்ததாக உள்ள துவாபர யுகத்தில் சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபாதி மக்கள் அறம் இன்றியும் வாழ்வர். இந்த யுகத்தின் கால அளவு 8 லட்சத்து 64 ஆயிரம் வருடங்கள். கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் வருடங்களைக் கொண்டது. இதில் நான்கில் மூன்று பகுதி மக்கள் அறமின்றியும், ஒரு பகுதி மக்கள் அறத்துடனும் வாழ்வார்கள். இந்த நான்கு யுகங்களும் அடங்கியது மகா யுகம் அல்லது சதுர்யுகம் என்று அழைக்கப்படுகிறது.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    காலகூத்தர்

    அமிர்தம் கிடைப்பதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். மந்தரை மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக பயன்படுத்தி பாற்கடல் கடையப்பட்டது. வாசுகி பாம்பின் வால் பகுதியில் தேவர்களும், தலைப்பகுதியில் அசுரர்களும் நின்று கொண்டு பாற்கடலை கடையத் தொடங்கினர். அப்போது வாசுகி பாம்பிற்கு உடல் வலி அதிகரித்தது. அதன் காரணமாக அது தன்னுடைய வாயில் இருந்து அதிகப்படியான விஷத்தைக் கக்கியது. அதே நேரத்தில் கடலில் இருந்தும் விஷம் தோன்றியது. இரண்டு விஷமும் இணைந்து ‘ஆலகாலம்’ என்னும் விஷமாக மாறியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் அழியும் நிலை உருவானது. இதைத் தடுக்கும் விதமாக சிவபெருமான் அந்த விஷத்தை பருகினார். அது அவரது தொண்டை பகுதியிலேயே நின்று கொண்டது. பின்னர் சிவபெருமான் திருநடனம் ஆடினார். இதனால் அவர் ‘காலகூத்தர்’ என்று பெயர் பெற்றார்.

    கேதகி

    மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் யார் பெரியவர் என்பதில் பலத்த போட்டி நிலவியது. அந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக ஜோதி லிங்கமாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார் சிவபெருமான். அந்த நேரத்தில் சிவபெருமானின் தலையில் இருந்த பூவின் பெயர் தான் கேதகி என்னும் தாழம்பூ. சிவபெருமான் ஜோதிலிங்கமாக அவதரித்த போது அவரது தலையில் இருந்த பூ கேதகி. விஷ்ணுவும் சிவபெருமானின் பாதத்தை பார்க்க வராக வடிவம் கொண்டு புறப்பட்டார்.



    பிரம்மன், ஈசனின் தலையை கண்டு வருவதற்காக அன்னப் பறவை உருவம் கொண்டு வானில் பறந்து சென்றார். ஆனால் விஷ்ணுவாலும், பிரம்மனாலும் பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இலக்கை அடைய முடியவில்லை. விஷ்ணு தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் சிவபெருமானின் தலையில் இருந்து விழுந்து தரையை நோக்கி வந்து கொண்டிருந்த கேதகி மலரை சந்தித்த பிரம்மன், அதனிடம் தான் சிவனின் தலையைக் கண்டு விட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி கேதகி மலரும் பொய் சாட்சி சொன்னது. இதனால் சிவபெருமானின் சாபத்தைப் பெற்ற அந்த மலர், இறைவனின் பூஜையில் பயன்படுத்த முடியாமல் ஆனது.

    கர்ணன்

    துர்வாச முனிவரின் மூலமாக குந்திக்கு ஒரு வரம் கிடைத்தது. அதன்படி அவள் எந்த தேவர்களை நினைக்கிறாளோ அவர்கள் அவள் முன்பாகத் தோன்றி வரம் அளிப்பார்கள். அதன்படி சூரிய தேவனின் மூலமாக குந்திக்கு பிறந்தவன் கர்ணன். திருமணத்திற்கு முன்பாகவே கர்ணன் பிறந்ததால், அவனை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி. கர்ணனை ஒரு தேரோட்டி எடுத்து வளர்த்து வந்தார். இருப்பினும் கர்ணன் போர் பயிற்சி அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். ஒரு முறை அவன் பாண்டவர்களால் அவமதிக்கப்பட, கவுரவர்களில் மூத்தவனான துரியோதனன் கர்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தான்.

    அந்த நட்பின் காரணமாகத்தான், பாண்டவர்கள் அனைவரும் தன் தம்பிகள் என்று தெரிந்த பின்னரும் கூட, துரியோதனனுக்கு ஆதரவாக மகாபாரத யுத்தத்தில் பங்கேற்றான் கர்ணன். அவன் பிறக்கும் போதே கவச குண்டலத்துடன் பிறந்தவன். அது பிறர் கண்ணுக்குப் புலப்படாது. அந்த குண்டலம் அவன் உடலில் இருக்கும் வரை அவனை அழிக்க முடியாது. எனவே தேவேந்திரன், புலவர் வேடத்தில் சென்று அதனை தானமாகப் பெற்றான். மகாபாரதப் போரில் அர்ச்சுனனின் அம்பால் கர்ணன் வீழ்த்தப்பட்டான்.
    ×