search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு தோல்வி.
    • முன்னேற்றத்திற் கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் முன்னேற்றம் என்ற மயக்கும் முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அ.தி.மு.க.வின் 57 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

    தனிநபர் வருமானத்தில் மாநில சராசரிக்கும் குறைவாக உள்ள 24 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பதிலிருந்தே சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு தோல்வியடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும், சென்னை பொருளாதாரப் பள்ளியின் தலைவருமான முனைவர் சி. அரங்கராஜன், சென்னை பொருளாதாரப் பள்ளியின் இயக்குனர் முனைவர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் இணைந்து தமிழக பொருளாதாரம் குறித்த 69 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    அதில் 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ் நாட்டின் சராசரி தனிநபர் வருவாயான ரூ.2,36,783-ஐ விட 19 மாவட்டங்களின் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதாக குறிப்பிட்பட்டிருக்கிறது. 13 மாவட்டங்கள் மட்டுமே சராசரியை விட அதிக வருமானம் ஈட்டியுள்ளன.

    சென்னையை ஒட்டி யுள்ள தொழிற்சாலைகள் நிறைந்த திருவள்ளூர் மாவட்டம் தான் ரூ.3,64,337 ஆண்டு வருமானத்துடன் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் ரூ.1,07,731 வருமானத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.

    வட மாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது என்ற உண்மையை உணர்ந்து அந்த மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழிற்திட்டங்களைத் தொடங்க வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு சலுகைகளை பெறுவதற்கு வசதியாக இந்திய

    அரசியலமைப்புச் சட்டத்தில் 371 (கே) என்ற புதிய பிரிவைச் சேர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது.
    • 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்

    தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட் டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டனர்.

    நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. கியாஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். அதுவும் அப்படியே இருக்கிறது. பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்கான விலையை குறைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.

    மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த 2 ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது. அதுதான் உண்மையான கள நிலவரம். தி.மு.க. ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

    நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? அழுத்தமா? என்று தெளிவாக தெரியவில்லை.

    புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது.

    3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். தமிழகம் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது.
    • தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் திரைமறைவு நாடகம் நடத்தி வருவதாக தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.

    ஆனாலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

    தேர்தலுக்கு பிறகும் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து பா.ஜனதாவை தாக்கி பேசி வருகின்றனர்.

    வடமாநில தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்திருந்தார்.

    சமீபத்தில் சேலத்தில் நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதாவை விமர்சனம் செய்ததுடன் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளையும் கடுமையாக சாடினார்.

    தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் தமிழகத்துக்கு தேவையான காவிரி தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது.

    தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப்பெற உதவாத இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருந்து என்ன பயன் என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

    அது மட்டுமின்றி மத்தியில் தப்பித்தவறி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு அதனால் என்ன லாபம்? என்று கேள்வி எழுப்பினார்.

    தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    காவிரியில் தமிழகத்தின் பங்கை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை. தமிழகத்துக்கான உரிமையை கேட்டுப் பெறவும் முடியவில்லை என்று அவர் தொடர்ந்து சாடி வருகிறார்.

    இதே கருத்தை தான் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் தொடர்ந்து பேசி வருகிறார். மத்தியில் பா.ஜனதா அல்லது காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டாலும் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. காவிரி தண்ணீருக்காக போராட வேண்டி உள்ளது.

    எனவே மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து தமிழக பிரச்சனைக்காக குரல் எழுப்புவார்கள் என்றார்.

    பா.ஜனதா கட்சியை அ.தி.மு.க. தாக்கி பேசுவதால் காங்கிரசை ஆதரிப்பதாக மக்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் இரு கட்சிகளுக்கும் எதிரானவர்கள். இரு தேசிய கட்சிகளிடம் இருந்தும் சமமான இடைவெளியை கடைபிடித்து வருவதாகவும் தமிழக நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதை எதிர்த்து அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கூறி உள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 3 அணிகளிலுமே சசிகலாவின் வேண்டுகோளுக்கு உற்சாகம் காட்டவில்லை.
    • தொண்டர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமலும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க தயங்கியபடியும் சசிகலா உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்று தொடர்ந்து கூறி வரும் சசிகலா சமீபத்தில் தொண்டர்களின் நாடித்துடிப்பை பார்க்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தினார்.

    அ.தி.மு.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ். அணிகளுக்குள் தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்து கொள்ளவும், தனது ஆதரவாளர்களை தெரிந்து கொள்ளவும் ஒரு படிவம் மூலம் தூண்டில் வீசினார்.

    அந்த படிவத்தில் 15 கேள்விகள் கேட்டு இருந்தார். பெயர், முகவரி, கட்சியில் வகிக்கும் பதவி, 2017-ல் வகித்த பதவி உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்று இருந்தன.

    படிவம் வெளி வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தொண்டர்கள் மத்தியில் எந்த சலனமும் இல்லை. மவுனமாகவே இருக்கிறார்கள். சசிகலா எதிர்பார்த்த அளவு படிவங்களை பூர்த்தி செய்து யாரும் அனுப்பவில்லை.

    எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 3 அணிகளிலுமே சசிகலாவின் வேண்டுகோளுக்கு உற்சாகம் காட்டவில்லை.

    இது சசிகலாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொண்டர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமலும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க தயங்கியபடியும் சசிகலா உள்ளார்.

    தேர்தல் முடிவு தெரிந்ததும் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருவதாக கூறப்படுகிறது.

    • தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.
    • விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அனேகமாக நாளையே (7-ந்தேதி) தேர்தல் தேதிக்கான அட்டவணை வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் இருப்பதால் தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களை வைத்து இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.

    ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்பு தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது என்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மே 4-ந் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை நிலவி வருவதால் தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தயாராகவே இருப்பதாக தெரிகிறது.

    பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணியின்றி இப்போது தனித்தனியாக இருப்பதால் தேர்தலில் தமக்கு சாதகமான நிலை காணப்படுவதாக தி.மு.க. கருதுகிறது. இதனால் இப்போதே யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தலைமையை அணுகி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச் சந்திரன் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ.வின் மருமகள் பிரசன்னா தேவி (கோலியனூர் முன்னாள் சேர்மன்) ஆகியோர் `சீட்' பெறுவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம். பன்னீர், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள்பட நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டி அ.தி.மு.க. மேலிடத்தை அணுகி வருகின்றனர்.

    பா.ம.க.வில் மாவட்டத் தலைவர் புகழேந்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் ஏற்கனவே பிரபலமான முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்ளார்.

    இவர் பா.ஜனதா கட்சி யில் இருப்பதால் பா.ம.க. ஆதரவுடன் அவர் களம் காணுவாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பதை பொறுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    • எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன?

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமே கொலைகார நகரமாக மாறிவிட்டது. நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

    புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்து விட்டு தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உயிர் பறிபோன பிறகு கொலையாளியை பிடிக்க தனிப்படை என்று அரசு கூறி வருகிறது.

    அது மட்டுமல்ல மணல் கடத்தலை தட்டி கேட்ட வி.ஏ.ஓ. படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக தான் கூறியதால் எனக்கு பாதுப்பு வேண்டும் என்று ஆடு மேய்க்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்ததால் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக மக்களே அச்சத்தில் உறைந்து உள்ளனர். மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

    இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். கும்பகர்ணன் கூட ஆறு மாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்து விடுவான். ஆனால் இந்த அரசு விழிக்காமல் காவல்துறையே கோமா நிலையில் உள்ளது.

    நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடைபடிப்பிற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

    கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள். நீட் தேர்வு எழுத முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிறபோது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சதவீதம் தான் உள்ளது.

    ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன? நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன.
    • தி.மு.க. அரசு அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

    சேலம்:

    ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 30-ந் தேதி மாலை 60 அடி பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

     சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்காடு பஸ் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவியை உடனடியாக வழங்கவேண்டும்.

    விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

    தி.மு.க. அரசு 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். 2022-23-ல் ஆயிரம் பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். எனக்கு தெரிந்து 400 முதல் 500 பஸ்கள் வரை மட்டுமே புதியதாக வாங்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அரசு பஸ்கள் பழுதடைந்து விட்டது. அரசு பஸ்களில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கிறார்கள். சில நேரங்களில் மழைகாலங்களில் பஸ்சில் ஒழுகிறது.

    மின்சார பஸ் ஜெர்மன் நாட்டுன் அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வறட்சியின் காரணமாக பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஆனால் இந்த அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

    கோடைகாலத்தில் மின்தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    அத்திக்கடவு அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் 85 சதவீதம் நிறைவுற்ற நிலையில் இன்னும் அந்த திட்டம் நிறைவு பெற வில்லை. அதேபோல் சேலம் மாவட்டத்திலும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏராளமான திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து இருந்தாலே தற்போது கோடை காலத்தில் அந்த நீரை பயன்படுத்தி இருக்கலாம்.

    ரூ. 1000 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பூட்டி கிடக்கிறது. இதை இதுவரை திறக்கவில்லை. ஒற்றை செங்கல் உதயநிதி ஆயிரகணக்கான செங்கலால் கட்டப்பட்ட இந்த பூங்காவை ஏன் திறக்க வில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் இதை முடக்கி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.
    • பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

    தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்ததாகவும், மருத்துவமனையில் மேலும் 2 பேர் இறந்ததாகவும், 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர். எனவே, அரசு உடனடியாக உரிய அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி, அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சோதனை சாவடி அமைத்து, பேருந்து மற்றும் இதர வாகன ஓட்டுநர்களை பரிசோதனை செய்யவும், பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த விபத்தில் பலியான 6 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கிடவும்; பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும், அரசின் சார்பில் நிதியுதவி வழங்கிடவும், உயர் மருத்துவ சிகிச்சை அளித்திடவும் அரசை வலியுறுத்துகிறேன்.

    இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எந்த தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ளது.
    • தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே 4 முனை போட்டி ஏற்பட்டது.

    இப்போது ஒவ்வொரு கட்சியிலும் எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று சர்வே எடுத்து வைத்துள்ளனர். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் உளவுத்துறை ரிப்போர்ட் அவரிடம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அதே போல் தி.மு.க.வுக்கு சொந்தமான தேர்தல் வியூக நிறுவனமும் ஒரு சர்வே எடுத்து வழங்கி உள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சென்று பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஆனாலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் இன்னும் முழு திருப்தி அடையாமல் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. காரணம் கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்களோ அதைவிட இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறார்.

    இதற்கு காரணம் தி.மு.க.வில் நிறுத்தப்பட்ட வசதியான சீனியர் வேட்பாளர்கள் பலர் முழுமையாக பணம் செலவழிக்காமல் கட்சிக்காரர்களை செலவழிக்க வைத்துவிட்டனர். இதில் பல கட்சிக்காரர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டுவிட்டது. இதனால் தி.மு.க. நிர்வாகிகளே சில வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். தேர்தலுக்கே இவர் பணம் செலவழிக்கவில்லை. ஜெயித்த பிறகு நமக்கு என்ன செய்துவிட போகிறார் என்ற விரக்தியில் பேச ஆரம்பித்துள்ளனர். இதுபற்றிய புகார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சென்றுள்ளது. அவரும் தேர்தல் முடிவு வரட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பொறுமையாக உள்ளார். ஏற்கனவே தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி இருக்கிறார்கள். அதில் யார்-யார் சரிவர பணியாற்றவில்லை. முழுமையான அர்ப்பணிப்புடன் யார்-யார் பணியாற்றினார்கள் என்ற விவரங்களையும் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

    கடந்த தேர்தலை போல் லீடிங் அதிகமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே எந்த தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ளது. எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றி பிரசாரம் செய்திருந்தாலும் சில மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் வேட்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவரது கவனத்துக்கு வந்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்களை அழைத்துச் சென்று ஓட்டுக் கேட்க வேண்டியது அந்தந்த மாவட்டச் செயலாளரின் கடமையாகும். இதற்காக எந்தெந்த பகுதிக்கு எப்போது செல்ல வேண்டும் என்று அட்டவணை தயாரித்து அதன்படி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த பணியை கூட சில மாவட்டச் செயலாளர்கள் சரிவர செய்யவில்லை என்று ஒன்றிய செயலாளர்கள் தலைமைக் கழகத்துக்கு புகாராக அனுப்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியில் உள்ள பிரச்சினைகளையும் புகார்களையும் பட்டியலிட்டு அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக தெரிகிறது.

    அ.தி.மு.க.வில் காஞ்சிபுரம், வடசென்னை, தென் சென்னை, கள்ளக்குறிச்சி உள்பட 15 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் மீதமுள்ள 25 தொகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி கலக்கத்துடனே உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 2-வது இடம் கிடைக்குமா? அல்லது 3-வது இடத்துக்கு தள்ளப்படுமா? என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வந்த பிறகு அ.தி.மு.க.விலும் அதிரடி மாற்றங்கள் நிகழக் கூடும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது.
    • நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    எடப்பாடி:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது நிஜாம் புயல் பாதிப்புக்காக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. இது போதுமான நிதியா என கருத்து கூற இயலாது. காரணம் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள் தமிழக அரசின் கையில் உள்ளது. இதை அவர்கள் தான் கேட்டு பெற வேண்டும். இதே போல் கடந்த காலங்களில் தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்டபோது மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    அந்த காலக்கட்டங்களில் மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.வும், இது குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எப்போதுமே தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் மேட்டூர் அணை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் தூர்வாரபடாத காரணத்தினால் கடந்த காலங்களில் பெய்த மழைநீரின் பெரும் பகுதி வீணாக கடலில் கலந்தது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் அரசு மீதமுள்ள 8000 ஏரிகளை தூர்வாரி இருந்தால் கோடையை சமாளித்து இருக்கலாம்.

    தற்போது தமிழக்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்களின் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதை நான் பல முறை சட்டமன்றத்திலும், பொது வெளிகளிலும் வலியுறுத்தியும் தி.மு.க. அரசு இதை கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட விரும்பதகாத நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.

    இதற்கு உதாரணமாக அண்மையில் சென்னையில் உள்ள கணபதி நகர் என்ற பகுதியில் போதை ஆசாமிகள் 3 பேர் வெறியாட்டத்தில் ஈடுபட்டதையும், அதை தடுக்க இயலாத காவல்துறையின் செயல்பாடுகளும் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து தி.மு.க. ஆட்சியின் மெத்தன போக்கால் தமிழகம் பின்நோக்கி செல்கிறது. மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கருத்து கூற இயலாது என்று பதில் அளித்தார்.

    மேலும் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. ஏதேனும் தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வந்த பிறகே முடிவு எடுக்கப்படும். மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க.வின் கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, முடிவு வந்த பின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • 2026-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி உள்ளார்.
    • தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த அட்டைகள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி தனி அணியை உருவாக்கி அ.தி.மு.க. தேர்தலை சந்தித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வின் தனித்தன்மையை காப்பாற்றவும், தனது தனித்துவத்தை நிலை நாட்டவும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இந்த நிலையில் 2026-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி உள்ளார். கட்சியினர் புத்துணர்ச்சியுடன் செயல்படும் வகையில் அ.தி.மு.க.வில் உள்ள 2½ கோடி தொண்டர்களுக்கும் விரைவில் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்குவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனது புகைப்படம், பெயர், கையெழுத்து ஆகியவற்றுடன் உறுப்பினர் அட்டைகளை தயாரிக்க அவர் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த பணிகள் நிறைவு பெற்று அட்டைகள் தயாராக உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் புதிய உறுப்பினர் அட்டையில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த அட்டைகள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.

     

    அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அட்டைகளை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், தங்களது பகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய அட்டைகளை வழங்க உள்ளனர்.

    • பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த சசிகலா சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் ஏற்கனவே கொடி பிடித்துள்ள நிலையில் சசிகலா அவர்களோடு சேர்ந்து செயல்படுவாரா? இல்லை தனி அணியை உருவாக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா அதே வேகத்தில் முதலமைச்சர் நாற்காலியிலும் அமர நினைத்தார்.

    ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பால் அவர் சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.

    இதன் பின்னர் அ.தி. மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அவர் கட் சியை வழிநடத்தி வருகிறார்.

    பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சசிகலா விடுதலையாகி வெளியே வந்தார். பெங்களூரில் இருந்து சென்னை வரை சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்ததும் அரசியல் களத்தில் அவர் புலிப் பாய்ச்சல் பாய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ற வகையிலேயே சசிகலாவின் பேச்சுக்களும் அமைந்திருந்தன.

    அ.தி.மு.க.வுக்கு நானே தலைமை தாங்குவேன். ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு செல்வேன் என்றெல்லாம் அவர் கூறியிருந்தார்.

    ஆனால் இவையெல்லாம் வெறும் பேச்சுக்களாகி போனது. சிறையில் இருந்து வெளியில் வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சசிகலா இன்னும் அதிரடி காட்டாமலேயே உள்ளார்.

    2021 சட்டமன்றத் தேர்தல், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது நிலைப்பாடு என்ன? என்பதைகூட வெளிப்படுத்தாமல் மவுனம் காத்துள்ள சசிகலா தற்போது புதிய வியூகத்துடன் களம் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 15 கேள்விகள் அடங்கிய படிவத்தை கடிதம் போல அனுப்பி உள்ள சசிகலா 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த சசிகலா சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டே சசிகலா இப்படி கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வினருக்கு சசிகலா படிவங்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் ஏற்கனவே கொடி பிடித்துள்ள நிலையில் சசிகலா அவர்களோடு சேர்ந்து செயல்படுவாரா? இல்லை தனி அணியை உருவாக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை மீட்கவும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தவும் சசிகலா எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் அவருக்கு பலன் அளிக்கப்போவதில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

    ×