search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli collector office"

    • இளம்பெண்ணும் ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர்.
    • பல பேரை மோசடி செய்தும், பல பெண்களை ஏமாற்றியும் வருகிறார். வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நானும், ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தோம். பல இடங்களுக்கும் நாங்கள் சென்றுள்ளோம்.

    மேலும் அவர் என்னோடு தனிமையில் இருந்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியிருந்தார்.

    ஆனால் இப்போது எனக்கு தெரியாமல் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவரிடம் கேட்டால் திருமணம் ஆகவில்லை என மறுக்கிறார். என்னை திருமணம் செய்து கொள்ளவும் மறுக்கிறார்.

    என்னை அவர் பலமுறை அவரது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும் என்னை திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் ரூ.2 லட்சம் வாங்கி உள்ளார்.

    அதனை திருப்பி கேட்ட போது அவரது உறவினர் ஒருவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். என்னை போல் பல பேரை மோசடி செய்தும், பல பெண்களை ஏமாற்றியும் வருகிறார். எனவே அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் உள்ளோம்.
    • ரெயில்வே துறையில் எனது மனைவிக்கு சேரவேண்டிய பணத்தையும் பெற முடியாமல் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.

    அம்பை அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் சேரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மரியசிங்கம் (வயது 73). இவர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.

    அப்போது அவர் கலெக்டர் அலுவலக வாசலில் கையில் வைத்திருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    எனது மனைவி சந்திப்பு ரெயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். எனது மகனும் 14 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி விட்டார்.

    எனது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எங்களது ரேஷன் கார்டு தொலைந்து விட்டது.

    இதனால் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் உள்ளோம். மேலும் ரெயில்வே துறையில் எனது மனைவிக்கு சேரவேண்டிய பணத்தையும் பெற முடியாமல் உள்ளது. வயதான காலத்தில் என்னால் எனது மகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்ல முடியவில்லை. எனவே எங்களுக்கு மீண்டும் ரேஷன்கார்டு வழங்க வேண்டும் என கூறினார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மரிய சிங்கம் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்திய சிறிது நேரத்திற்குள் கலெக்டர் அலுவலகத்தில் மற்றொருவர் தனது தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக போலீசார் அவரை பத்திரமாக அழைத்து சென்று அவரிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர் அம்பாசமுத்திரம், பொத்தை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கூறும்போது, எங்களுக்கு சொந்தமான காலி மனை சுப்பிரமணியபுரம் பொத்தையில் உள்ளது. ஆனால் அந்த இடத்தை சிலர் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்றார்.

    • கடந்த 6 வருடங்களாக வட்டி செலுத்தி வரும் நிலையில் ஒரு மாதமாக மட்டுமே வட்டியை செலுத்தவில்லை.
    • தற்போது அவர்கள் பணத்தை முழுமையாக செலுத்துமாறு எனக்கு மிரட்டல் விடுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளித்து சென்றனர்.

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த வளன் என்பவரது மனைவி பியோனி தனது 4 மகன்களுடன் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் நின்று இருந்த போலீசார் அந்த பெண்ணின் கையில் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு கேனில் பெட்ரோல் இருந்தது. உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்து பியோனியிடம் விசாரித்தனர். அவர் பையில் இருந்த மனுவை எடுத்து பார்த்தபோது அதில் கூறியிருந்ததாவது:-

    வளன் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சிகள் எடுத்துள்ளார். அங்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் இடிந்தகரை பகுதியை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டு அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே மாத சம்பளம் கொடுத்துள்ளனர்.

    மேலும் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார். அதே நேரத்தில் வட்டிக்கு பணம் கொடுத்திருந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக பணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். நான் 4 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறேன்.

    கடந்த 6 வருடங்களாக அவர்களுக்கு வட்டி செலுத்தி வரும் நிலையில் ஒரு மாதமாக மட்டுமே நான் வட்டியை செலுத்தவில்லை. ஆனால் தற்போது அவர்கள் பணத்தை முழுமையாக செலுத்துமாறு எனக்கு மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்களது பணத்தை திருப்பிக் கொடுக்க எனது வீட்டை நான் விற்க வேண்டும். அதற்கு 6 மாதம் அவகாசம் அவர்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராமு (வயது 54). இவர் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.

    கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே சென்றபோது திடீரென தனது கைப்பையில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நீஜா, பாளை நுண்ணறிவு பிரிவு ஏட்டு தினகரன், எஸ்.பி. தனிப்பிரிவு தலைமை காவலர் அருணாச்சலம் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு அவரது உடலில் தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர்.

    அப்போது அவரது கையில் ஒரு மனு இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவருடன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் மேலப்பாளையத்தில் வசித்து வருகிறேன். அதே பகுதியை சேர்ந்த ஒருவர் எனது வீட்டை காலி செய்யுமாறு எங்களை வற்புறுத்தி மிரட்டி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன்களுடன் வந்து எனது வீட்டை காலி செய்யுமாறு கூறினார். நான் மறுக்கவே அவர் என்னை தாக்கிவிட்டு சென்றார். காயம் அடைந்த நான் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எனது விவசாய பணிகளுக்காக கடந்த 2005-ம் ஆண்டு ஒரு டிராக்டர் வாங்கினேன்.
    • தோட்டத்தின் பத்திரங்களை அடமானம் வைத்து திசையன்விளையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடனுதவி பெற்றேன்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் சுகில் (வயது45).

    இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் 19½ ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் தோட்டம் அமைத்து காய்கறிகள் பயிரிட்டு வருகிறார். மேலும் அந்த காய்கறிகளை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சுகில் ரூ.7லட்சம் பணத்துடன் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீருடன் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது விவசாய பணிகளுக்காக கடந்த 2005-ம் ஆண்டு ஒரு டிராக்டர் வாங்கினேன். இதற்காக எனது தோட்டத்தின் பத்திரங்களை அடமானம் வைத்து திசையன்விளையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடனுதவி பெற்றேன்.

    அதன்படி ரூ. 80 ஆயிரம் வரை தவணை தொகை கட்டிய நிலையில் பின்னர் செலுத்தவில்லை.

    இதைததொடர்ந்து வங்கியின் சார்பில் தோட்டத்தை ஏலம் விடுவதாக அறிவிப்பு வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த நான் வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ. 7 லட்சத்துடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றேன். ஆனால் காலக்கெடு முடிந்துவிட்டதால் மண்டல அலுவலத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறினர்.

    அங்கு நான் சென்ற போது வங்கியின் கிளைக்கு செல்லுமாறு கூறினர். இப்படி என்னை அலைக்கழித்த நிலையில் எனது தோட்டம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

    தற்போது வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ. 7 லட்சம் பணம் கொண்டு வந்துள்ளேன். எனக்கு வாழ்வாதாரமாக விளங்கும் எனது தோட்டத்தை மீட்டு என்னிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • அதே நேரத்தில் இந்த அலுவலகத்தையொட்டி மற்ற அலுவலகங்களில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.

    இந்த கட்டிடத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. பின்னர் மாநகர போலீஸ் அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது மகளிர் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் வாஞ்சி மணியாச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்பு பாதைக்கான நில எடுப்பு அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலக அறையின் மேற்கூரை இன்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    அதே நேரத்தில் இந்த அலுவலகத்தையொட்டி மற்ற அலுவலகங்களில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களது அறைகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

    தகவலறிந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராதாபுரம் அருகே உள்ள வேப்பளங்குளத்தை சேர்ந்த விவசாயி இன்று நெல்லையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    இதையொட்டி அலுவலக வாயில்களில் போலீசார், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயியால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    ராதாபுரம் அருகே உள்ள வேப்பளங்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). விவசாயி.

    இவர் இன்று நெல்லையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.

    பிரதான வாயில் வழியாக செல்லாமல் மற்றொரு பாதை வழியாக கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த விஷபாட்டிலை எடுத்து குடித்தார்.

    இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடி சென்று பாட்டிலை தட்டிவிட்டனர். பின்னர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சம்பவ இடத்தில் அய்யப்பன் கொண்டு வந்திருந்த மனு ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் வள்ளியூர் பகுதியில் உள்ளது. அந்த இடத்தை 2 பேர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் அந்த இடத்திற்கு செல்ல முடியாதபடி புது வழிப்பாதை அமைத்துள்ளனர்.

    ஆக்கிரமிக்கப்பட்ட எனது இடத்தை மீட்டு தருமாறு கிராம அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் வள்ளியூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தேன். அங்கு எனது மனுவை பெற்றுக்கொண்டு ரசீது மட்டும் வழங்கினர்.

    மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    மேலும் அந்த மனுவில் அவர் தனது மகனுக்கு சிலவற்றை கூறி உள்ளார். அதில், அரசு நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக்கொடுத்தால் அதனை விற்று கிடைக்கும் பணத்தில் கடனை அடைத்து விடு.

    மேலும் ரூ.2 லட்சத்தை இலங்கையில் வாடும் மக்களுக்கு அனுப்புவதற்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும். மீதி பணத்தை வங்கியில் உனது பெயரில் டெபாசிட் செய்துகொள் என அந்த மனுவில் கூறியுள்ளார்.
    20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் மண்எண்ணை பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததாக மெக்கானிக் தம்பதி தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழுவூர் கண்ணங்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42), மெக்கானிக்.

    இவர் இன்று தனது மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக வந்தார். மனு நீதி நாள் முகாமையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கலெக்டர் அலுவலக வாசல் வழியாக மனு கொடுக்க வந்தவர்களின் உடமைகளை போலீசார் பரிசோதனை செய்து அனுப்பினர். அப்போது செல்வகுமாரின் பையில் மண்எண்ணை பாட்டில் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது செல்வகுமார் கூறியதாவது:-

    எனது வீட்டில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் கடந்த 23.1.2020 அன்று திருட்டு போனது. இதுதொடர்பாக எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் மீது சந்தேகம் தெரிவித்து நாங்கள் போலீசில் புகார் செய்தோம்.

    ஆனால் அந்த பெண்ணிடம் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணை பாட்டிலுடன் வந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரை போலீசார் எச்சரிக்கை செய்தனர். பின்னர் உங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளியுங்கள். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவுரை கூறி அனுப்பினர்.

    விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் முருகன். இவரது மனைவி ராணி (50). இவர்கள் இருவரும் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

    வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடமைகளை பரிசோதனை செய்த போது, ராணியின் பையில் மண்எண்ணை கேன் இருந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராணி கூறியதாவது:-

    எனக்கு சொந்தமாக 3 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சினை செய்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தால், உரிய முறையில் அளந்து பிரச்சினையை தீர்க்குமாறு கூறுகின்றனர்.

    எனவே அந்த இடத்தை அளந்து தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துவிட்டோம். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அவர்கள் அளந்து தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மண்எண்ணை கேனுடன் வந்ததாக கூறினார்.

    அவரை போலீசார் எச்சரிக்கை செய்து உரிய அறிவுரை வழங்கினர். பின்னர் ராணி கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் அளித்துவிட்டு சென்றார். 


    டிஜிட்டல் இந்தியா திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. #DigitalIndiaKiBaatPMKeSaath
    நெல்லை:

    நாடு முழுவதும் பொதுச்சேவை அமைப்பு மூலமாக மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் மூலமாக சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகள் குறித்து பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பிரத்யேக ஸ்கிரீன் அமைக்கப்பட்டு டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

    இதைப்போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களும் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டிருந்தன.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து பொதுச்சேவை மையம் மூலமாக பயன்பெற்ற பயனாளிகள் 5 பேர் மற்றும் பணபரிவர்த்தனைகளை தெரிந்து கொண்ட கிராம மக்கள் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கிராம மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினால் மக்கள் எந்தளவுக்கு பயன் பெற்றுள்ளனர், பொதுச் சேவை மையம் மக்களுக்கு எந்தளவு பயனுடையதாக உள்ளது என்பது பற்றி பேசினார். 15 நிமிடம் இந்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எனினும் கிராம மக்கள் யாரும் பிரதமரிடம் கான்பிரன்ஸ் மூலமாக பேசவில்லை. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுச்சேவை மைய மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வினோத் குரியாகோஸ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக அவர் கூறும்போது, நெல்லை மாவட்டத்தில் 212 இடங்களில் பொதுச்சேவை மையங்கள் உள்ளன. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுச்சேவை மையம் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக அனைத்து சான்றிதழ்களையும் வழங்கி வருகிறோம் என்றார். #DigitalIndiaKiBaatPMKeSaath #PMModi
    ×