search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pujai"

    • கோவில் திருவிழாவின் கொடியேற்று விழாவை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்
    • மரக்காணத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தர்மாபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாத பஞ்சமி திதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, 22 நாட்களுக்கு மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்துடன் நடைபெறுவது வழக்கம். இந்த விழா கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் சார்பாக நடைபெற்று வருகிறது.

    இக்கோவிலை இந்து அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டுமென ஒரு சிலர் கடந்த 2 ஆண்டுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் மரக்காணம் திரவுபதி அம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. இருந்த போதும் கடந்த ஆண்டு வழக்கம் போல 22 நாள் திருவிழா நடைபெற்றது.


    இந்த நிலையில் இந்த ஆண்டின் சித்திரை மாத பஞ்சமி திதி அன்று தேர்தல் நடைமுறை விதிகள் இருந்ததால் கொடியேற்று விழா நடைபெறவில்லை. இதனால் ஒரு மாதம் கழித்து இன்று வைகாசி மாத பஞ்சமி திதியில் கொடியேற்று விழா நடத்த பொதுமக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துனர்.

    இதற்கு இந்து அறநிலையத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கோவில் திருவிழாவின் கொடியேற்று விழாவை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் மரக்காணத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு கொடியேற்று விழா இன்று நடைபெறுமா? அல்லது நிறுத்தப்படுமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
    • பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரி வினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

    இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

    காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நீதி மன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

    அதேபோல, தலைமை குற்றவியல் வக்கீலும் கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

    கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்எ. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோவிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    ×