search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP campaign"

    தஞ்சை அருகே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #LokSabhaElections2019

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் (வயது 75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார்.

    இவர் பிரதமர் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் பார்ப்பவர்களை எல்லாம் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வாராம்.

    இந்த நிலையில் கோவிந்தராஜ் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்று இரவு மோடியின் படத்தை கழுத்தில் போட்டு கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவாக தனியாக நின்று பிரசாரம் செய்தார். அங்குள்ள கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கோபிநாத் (33) என்பவர் வந்தார். அவர் திடீரென மோடிக்கு ஆதரவாக எப்படி பிரசாரம் செய்யலாம்? என கூறி முதியவர் கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கோபிநாத் ஆத்திரம் அடைந்து கோவிந்தராஜை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாங்க முடியாமல் கதறினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி கோவிந்தராஜ் மகள் அற்புத அரசு ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

    மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஆர்வலரை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு திரண்டனர். இதையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #BJP #LokSabhaElections2019

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் 5 கோடி வீடுகளில் பாரதீய ஜனதா கொடியை ஏற்றி வைக்கும் பிரமாண்ட திட்டத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். #BJP #AmitShah #BJPCampaign
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதில் பாரதீய ஜனதா கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    இதற்காக பல்வேறு உத்திகளை வகுத்து செயல்படுத்தவும் தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் நாடு முழுவதும் 5 கோடி பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் பாரதீய ஜனதா கட்சி கொடியை ஏற்றி வைக்கும் ‘மேரா பரிவார், பஜ்பா பரிவார்’ (என் குடும்பம், பா.ஜ. குடும்பம்) என்ற பிரமாண்ட திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்சியின் தலைவர் அமித் ஷா, குஜராத்தில் உள்ள தனது வீட்டில் பாரதீய ஜனதா கொடியை நேற்று ஏற்றி வைத்து இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    அப்போது அவர் கூறும்போது, “பாரதீய ஜனதா கட்சியின் கொடி, வளர்ச்சி, நம்பிக்கை, தேசியவாதத்தின் அடையாளம் ஆகும். அத்துடன் மோடி காலத் தில் அது தாஜா செய்தல், சாதியம், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியதையும் காட்டுகிறது” என குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கொடியேற்றும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

    அமித் ஷாவை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் கட்சி கொடியை ஏற்றி, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    இது பற்றி பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவர் கூறும்போது, “ஒரு வீட்டில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால் இந்த திட்டத்தின் மூலம் 5 கோடி வீடுகளில் கொடி ஏற்றுகிறபோது 20 கோடிப்பேரை தொடர்பு கொண்டு விட முடியும்” என குறிப்பிட்டார்.

    மேலும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு செயல்படுத்தி வருகிற ஜனதன் வங்கிக்கணக்கு, இலவச கழிவறை கட்டித்தருதல், முத்ரா கடன், இலவச சமையல் கியாஸ் இணைப்பு ஆகியவற்றின் பயனாளர்களையும் பாரதீய ஜனதா கட்சி தொடர்பு கொண்டு வருகிறது.

    கட்சியின் 11 கோடி உறுப்பினர்களில் புதிதாக சேர்ந்த 9½ கோடிப்பேர் பற்றிய தகவல்களை சோதித்து அறியும் பணியை பாரதீய ஜனதா செய்து முடித்துள்ளது.

    இது பற்றி பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 17 கோடிக்கும் அதிகமான ஓட்டுகளை பாரதீய ஜனதா கட்சி பெற்றது. தற்போது 9½ கோடிப்பேர் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனதன் வங்கிக்கணக்கால் 35 கோடிப்பேர் பலன் அடைந்துள்ள னர். முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 7 கோடிப்பேர் பயன் பெற்றுள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6 கோடிக்கும் மேற்பட்ட ஏழைப்பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் இன்னும் பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு சென்றடைய இலக்கு வைத்துள்ளோம்” என குறிப்பிட்டார்.
    ×